திங்கள், 14 மே, 2012

தேன்பூக்கள்...!

கைப் பணம்....
கைமாறினால் தான்
ஆலயத்தில் கூட
ஆண்டவன் தரிசனம்...
இறைவா... நீ யார் பக்கம்..?
----------------------------------------
வயற்காட்டில் 
நாற்று நட்டு..
பூமித்தாயின்..
பசியாற்றிக் 
கொண்டிருந்தாள்..
பசியோடு.. அவள்..!
------------------------------------------
பிரம்மன் ...
மகிழ்ந்தார்..
அனைத்து உயிரையும் 
நிறைவாய்..
படைத்துவிட்டதாய்..!
--------------------------------------------
மரத்தில் 
இருக்கும் வரை 
தான்...
இலைகளுக்கும்..
பதவி..!
---------------------------------------------
கனிகள்...!
நிறைமாத 
கர்ப்பிணிகள்..
உண்ண 
விரும்பும்போது..
விதை.... எதிர்த்தது..!
-----------------------------------------------
விதைகள் 
விலகியதே..என... 
வருந்தின 
மரங்கள்....
மரக்கன்றைக்... 
காணும்வரை..!
------------------------------------------------
அகங்காரம்
அடக்கி..
எண்ணத்தை 
உயர்த்தி..
உள்ளத்தை...
விரித்தால்..
அங்கே...பெண்..!
---------------------------------------------
படைத்த உயிர்கள்
உறங்கவென்றே...
பூமியைப் பாயாய்..
விரித்தான்...
இறைவன்...!
பாயை..
இயந்திரமாக்கி....
உறக்கம் 
தொலைத்தான்..
மனிதன்..!
------------------------------------------
ஆதிகால 
மனிதனிடம்..
நிம்மதி....
அண்மைக் கால
மனிதனிடம்...
வெகுமதி...!
வருங்கால 
மனிதனிடம்..
????????
------------------------------------------
பூமித் தாய் 
உடம்பில்...
புற்றுநோய் 
செல்களாய்...
தீவினைகள்..!
--------------------------------------------
ஒற்றைக் காலில்..
கண்மூடி 
தவமிருந்து 
காத்திருந்தது..
கொக்கு...!
காலிடுக்கில் 
நழுவி...தப்பியது..
கெண்டை..!
--------------------------------------------
அவள் 
புயலானாள்...
நான்...
எதிர்க்கத் 
திராணியின்றி 
காகிதமாகினேன்..
-----------------------------------------
சிலந்தியும்..
இருந்த இடத்தில் 
வலை பின்னி...
காத்திருக்கிறது...
பூச்சிகளை...
சிறை எடுக்க..!
----------------------------------------------
எதிர்பார்போடு  நான்....
உன் மௌனம்...
சொன்னது 
சம்மதம்...!
ஏமாற்றத்தில்..  நான்..
உன் மௌனம்...
கொன்றது....
சலிப்பு...!
------------------------------------------------
மரம் எட்டித் தொட....
பறவை பறந்து..தொட..
பட்டம் எகிறித் தொட...
முயற்சிகள்...யாவும்  
தோல்வி....!
வானமே....உன்னை..
எந்தன் எண்ணத்தால் 
தொட்டு... 
வென்றிடுவேன்..!

----------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக