புதன், 13 ஜூன், 2012

நீ...நான்...நிழல்..!




நான்....ஆற்றங்கரைப் 
படித்துறையில் 
பரவசமாய் காத்திருந்தேன்...!
மிதந்து வரும் சருகளில்
தூது ஏதும் வந்திடுமோ..?
விழிகள் தேடிடும் தவிப்போடு ...

ஊரார் விழிகளோ வியப்போடு...
தென்றல் தட்டி எனைக் கேலி செய்ய..
அல்லியும் சிவந்து நாணித் தலைசாய..
மீன்கூட்டம் என் கண்களுக்குத்
தூண்டிலிட்டுக் காத்திருக்க.... 
அமைதியிலும் ஆயிரம் வார்த்தைகள்... !

அங்கும் இங்கும்...ஏதேதோ பாடல்கள்..
தென்றலோடு கலந்து செல்ல..
அழகான சாயங்காலம்..இறங்கி ..இருள....
அழகுநிலா எட்டிப்பார்த்து கையாட்டி வரவேற்க.....
அவசரமாய் மனம் விழித்து ....
இருக்கும் நிலை அறிந்தேன்..
ஏன் என்னும் கேள்விக்கு 
என்னைத் தேற்றி ..கொண்டு...
ஆற்றாமையோடு ஆற்றைவிட்டு
புறப்பட்டேன்.....வழியெங்கும்... கூடவே ......
நீ..! வருகிறாய் நிழலாக நினைவோடு...! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக