ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதியவள்...!


வாழ்கையின் ஓரத்தில் அவள்....
தயங்கியபடி நிற்கிறாள்...
இன்னும் ஒரே நாள் தான் 
இருக்கு அவள் கணக்குக்கு....
உயிர் விட..

அவளது வாழ்வில் ஆளுக்கொரு .
பரிசை அள்ளிக் கொடுத்து 
அவரது நினைவுப் படுக்கையில் - 
உல்லாசமாய் நிறைந்தவள்...!

உலகத்துக்கு ஒரு அடையாளமாய் 
தன்னைத் தந்து விட்டு தனக்கென 
எதையும் எடுத்துக் கொள்ளாமல் 
திரும்புகிறாள் அவள்..!

வந்த இடம் தெரியாது,,
செல்லும் இடமும் தெரியாது.
இரண்டு நாட்கள் நிமிடங்களாய்
கரைந்தது அவள் கண்களில் ..
.
ஆண்டாண்டுகளாய் நடக்கும் 
நாடகத்தில்...அவளை விரட்ட 
ஆயிரம் வெடி வாலாக்கள்....
அன்றொருநாள் அவளின் வருகைக்காக 
வெடித்துச் சிதறிப் பொன்மழை தூவிய 
புஸ்வான வானம்....! 

விட்டுச் செல்ல மனமில்லாமல் 
அந்த இறுதி நிமிடத்தில் 
வலுக்கட்டாயமாக தள்ளிவிடப் பட்டவள் 
போல.....அவள் உயிர் அடங்கியதும் ..
கதாநாயகியாய்க் காலடி எடுத்து 
வைக்கிறாள் புதியவள்...!

வியாழன், 28 நவம்பர், 2013

பாதை மறந்த பருந்து …!


எங்கடீ அந்தப் பயல்?
போய்ட்டான்…..
போயிட்டானா…..? ஆத்த விட்டே போயிட்டானா அவன்..?
ம்ம்ம்ம்
அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டானா அவன்..? அவன் என்னைக் கண்டிக்கலாம்…நான் அவனைக் கண்டிக்கப்டாதோ..?
அ ….ஹாங் …..அது….வேறொண்ணுமில்லடீ …..கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து…..ஆத்தவிட்டேப்  பறந்து போயிடுத்தூ ……..!
பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்து பார்த்த கிளி…..
நான் வளர்த்த பச்சைக் கிளி..
நாளை வரும் கச்சேரிக்கு…..
செல்லம்மா…எந்தன் செல்லம்மா…..!
திடுமென மின்வெட்டானதால் தொலைகாட்சி கண்ணை மூடி திடீர் சாமியாரானது.
அதனால் என்ன…?  வீட்டுக்குள்ள தான் கதையும் பாட்டும் நடந்து கொண்டே இருக்கிறதே. அந்த கௌரவப் பாட்டு போனால் என்ன… இருக்கவே இருக்கிறது… வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக் விதை…..!
இட்டிலித் தட்டிலிருந்து ஒவ்வொரு இட்டிலியாகப் பெயர்த்து ஹாட் பாக்ஸில் போட்டு வைத்த சாரதா, பஞ்சு பஞ்சாக வெள்ளை வெளேரென்று மல்லியப் பூக் கணக்கா இருந்த இட்டிலிகளைப் பார்த்து, ஆஹா…எம்புட்டு அழகா இருக்கு…பார்க்கும்போதே திங்கச் சொல்லி நாக்கு நம நமங்குதே…. சாரதா… இட்டிலில உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடீ…. என்று  இல்லாத காலரை இழுத்து விட்டுக் கொண்டு தனக்குத் தானே தட்டிக் கொண்ட சாரதா, சடக் கென்று திரும்பிப் பார்த்தபோது… அங்கே கைகள் இரண்டையும் கதவில் முட்டுக் கொடுத்தபடி மகன் சிவராமன்  நின்று இவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா சிவராமா… எப்ப வந்தே… யார் மேலே என்ன கோபம்?….அதான்…கோபம் கண்ணுல கொப்பளிக்குதே… அப்படி என்ன ஆச்சு உனக்கு?”
“இன்னும் என்ன ஆகணும்….? சைக்கிள் பஞ்சர்… நான் பிளஸ் டூ படிக்கேல ‘அரசு மூலமா அம்மா’ கொடுத்த சைக்கிள் இது. இம்புட்டு நாள் ஓடிச்சே அதே பெருசு… என் கையில பஞ்சர் ஓட்டக் கூட காசு இல்ல… இனிமேட்டு நான் அதைத் தொட மாட்டேன்… அதான்.. அப்படியே காயலான் கடையில வித்துட்டேன்.”
“எம்புட்டுக்கு? அந்தக் ரூபாயை என்ன செஞ்சே? இங்கிட்டு தா என் கையில.”
“ஆமா… துருப்பிடிச்ச சைக்கிளுக்கு கட்டு கட்டாத் தூக்கிக் கொடுத்தாங்க. நான் அதை தோல் பையில எடுத்தாந்திருக்கேன். நூறு ரூபாய் கூட தர மாட்டேன்னு சொல்லிட்டான்… நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கே புதுசா ‘ஹோண்டா’ பைக் வேணும். வாங்கித் தாங்க. இல்லாட்டி வீட்டுப் பக்கமே வரமாட்டேன்.”
“டேய்.. சிவா… ஒரு வேலையை பிடிச்சுக்கடா… பெறவு உனக்கு என்ன வேணுமோ அத நீயே உன் சொந்த பணத்துல வாங்கிக்கிறலாம். அப்பா இந்த வீட்டை லோன் போட்டு வாங்கியிருக்காரு… மாசா மாசம் ஹவுசிங் லோனும் வட்டியுமே அவரோட கையைக் கடிக்குது. நாளைக்கே ‘ஹோண்டா’ பைக்கைக் கொண்டான்னு கேட்டா எப்புடி, உங்கப்பா என்ன ராக்கொள்ளையா அடிக்கப் போறாரு..?” இட்டிலிக்குத் தோதாகத் தொட்டுக் கொள்ள கொத்தமல்லிச் சட்னி அரைத்து எடுத்து கிண்ணத்துக்குள்  வைத்தபடியே அவனைப் பார்க்கிறாள் சாரதா.
“நீ தலை எடுத்தாத் தான் நாங்க நிமிர முடியும். நீ தெனம் ஏதாச்சும் ஒண்ணு சொல்லிட்டு வரே. படிச்சு முடிச்சு ஒரு வருஷமாகப் போவுது.. இன்னும் நீ உட்கார்ந்த இடத்துலயே இருந்தீன்னா….எப்புடி.? நெனச்சுப் பாரு. உனக்குன்னு குடும்பம் ஆக வேணாமா?
வேலை இருந்தாத்தான மேல்கொண்டு நடக்கும்..? உன் நெலம புரிஞ்சு யோசிடா தம்பி.”
“எல்லாம் என் நெலம புரிஞ்சுதான் நான் இருக்குறேன். இந்தத் தீவாளிக்கு ஏதாச்சும் கேட்டனா..? நீயே சொல்லு… நல்ல துணி மணி வாங்கித்தரச் சொன்னா… நீ வேலைக்கிப் போற பவுசுக்கு புதுசு கேட்குதோ..?ன்னு நொண்டிடியடிப்பீங்க.
வெடி வாங்கித் தரச் சொன்னா, நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்த நீ புஸ்வாணம் விடத் தேவையில்லன்னு சாக்கு சொல்லுவீங்க. இதெல்லாம் எதுக்குண்டு தான் நான் வாயைப் பொத்திகினு இருக்கேன். நான் என்னா இப்ப உன்னிய எனக்குக் கலியாணம் முடிச்சு வெய்யினா கேட்டேன்.. ஒரு பைக்கு தானே கேட்டேன்… அதுக்கு ஏன் இப்படி நொய்யி நோய்யின்னு பேச வைக்கிறே?
ஆனாலும் இன்னாம்மா நீ….எப்பப் பாரு ‘இல்லே பாட்டுப் பாடி’ அழுதுக்கிட்டு. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கானுவுங்க தெரியுமா? நான் ஒருத்தன் மட்டும் தான் பஞ்சத்துக்கு பெறந்த பரதேசி. ம்ஹும்…..அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கு புது பைக் வேணும். அம்புட்டுத் தான். அந்தாள லோன் போடச் சொல்லு…இல்லாட்டி நீ உன் நகையை வித்து எனக்கு பைக் வாங்கிக் கொடு…நான் சம்பாதிச்சு உனக்கு நகை பண்ணிப் போடறேன்.”
“போடா உன் வேலையைப் பார்த்துட்டு… நகையை விக்கணுமாம்? தங்கம் என்ன தெருவிலயா போட்டுக் கூவி கூவி விக்கிறாங்க. இவன் வாங்கித் தருவானாம்… நான் நம்பி… நல்ல கதையா இருக்குது? அப்பா காதுல விழுந்துச்சுன்னா அம்புட்டுத்தேன். போ இங்கிட்டிருந்து.. வேற வேலை எதுனா இருந்திச்சின்னாப் போய்ப் பாரு.”
“எம்மா…..அவரு இருக்காரா.? வந்தாச்சா?”
“யார்ரா….அவுரு…?”
“அதான் உன் புருஷன்….!”
“வாயை மூடு…! அப்பான்னு மருவாதியாக் கூப்பிடு  …! அவரு அப்பமே வந்துட்டாரு.”
“இப்ப எங்க? யார்கிட்ட போன்ல என்னியபத்தி குத்தம் குறை சொல்லி பாரதம் படிக்கிறாரா?”
“ரூம்ல…..க்ரானிகல் நியூஸ் பேப்பர்ல க்ராஸ் வார்ட் வருமே..அத்த எடுத்து வெச்சுக்கிட்டு  மண்டையைப் போட்டுக் குழப்பிட்டு இருப்பாரு..!”
“அவுரு அதுக்குக் கூட சரிப்பட்டு வர மாட்டாரு.”
“அவரு பாட்டுக்கு என்னத்த செஞ்சாலும் நீ ஏண்டா… தப்பாவே நினைக்கிறே ? பெத்தவங்களை, பெரியவங்களை வாய்க்கு வந்தபடில்லாம்  பேசிடக் கூடாது சிவராமா… எம்புட்டு வாட்டி சொல்லுறது. மரியாதையாப் பேசக் கத்துக்கண்டு. அம்மா எப்பவும் நல்லது தான் சொல்லுவா. நான் சொல்லுறதையாச்சும் நீ கேளுப்பா.”
“அவரு மட்டும் என்னிக்காச்சும் யாருக்காச்சும் மரியாதை கொடுத்து பேசிருக்காரா?அட்லீஸ்ட் உனக்காச்சும்….! நீயே கேட்டுப் பாரு. அது… வேறொண்ணுமில்லம்மா… தான் தான் சம்பாதிக்கிறோம்னு மண்டை கர்வம்… திமிர்… கொழுப்பு… அந்தாளுக்கு…! இவரப்  போயி யார்மா உன் தலைல கட்டி வெச்சது..! சுயநலம் பிடிச்ச ஆளு.”
“வாயை மூடுடா…!”
“ஏன்…உன் புருஷனைச் சொன்னா உனக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது? காலைல ஒரு நூறு ரூபாய் கேட்டதுக்கு, நாக்கைப் பிடுங்கறாப்பல எம்புட்டு கேள்வி கேட்குறாரு. நீயும் கேட்டுக்கிட்டு தானே வாயை மூடிட்டு இருந்தே. எனக்கு இப்ப நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நாளைக்கு எனக்கு புது பைக் கண்டிப்பா வேணும்.”
“இப்ப நீ உன் பேருக்குப் பின்னாடி ஒரு வாலைக் ஒட்ட வெச்சிருக்கியே, பிஏ டிகிரி வாலு…! அது மட்டும் என்ன சும்மா வந்து தர்மத்துக்கு ஒட்டிக்கிச்சா. அவரில்லாமல் உன் பேருக்கு பின்னாடி பட்டம் பறக்குமா? நெனெச்சுப் பாரு.. அன்னிக்கு ஆயிரமாயிரமா  உன் படிப்பு செலவுக்குக் கொட்டினவர் தான்… இப்பத் தான் நூறு ரூபாய்க்கு கணக்கு கேட்குறாரு… எதுக்குன்னு விஷயத்தைச் சொல்லி வாங்கிட்டு போறது தானே நீ..? உனக்கென்னாத்துக்கு அம்புட்டு ரோஷம்?”
“சரி…சரி….இப்ப நீயே அவுரு காதுல போட்டு வெய்யி, எனக்கு ஹோண்டா பைக்கு வேணுமின்னு..சொல்றியா?”
“திடுதிப்புன்னு பைக் வேணுமுன்னா துட்டுக்கு எங்கிட்டுப் போறது. நீ கேக்குறதும் அநியாயமால்ல இருக்குது.”
“நீ அந்தாளுக்கு வக்காலத்துக்கு வரே பாரு….! ஒழுங்கா இருக்குறவனையும் கிரிமினல் பண்ணிடுவீங்க ரெண்டு பேருமா சேர்ந்து…! நான் போறேன்.”
“இந்தாடா… கையைக் அலம்பிட்டு வா… சூடா இட்டிலியும், மல்லி சட்னியும் செஞ்சிருக்கேன்… போட்டுத் தரேன்… தின்னுட்டு தொலை.. என் கோபத்தைக் கிளறாத. வீட்டை விட உனக்கு உன்னோட உருப்படாத ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியமா போயிட்டாங்க இல்லே…? பசிக்குமில்ல… இந்தா இட்டிலி,  தட்டையாச்சும் கையால வாங்கு.”
“அதென்னமோ நீங்களே தின்னுங்க….நான் போறேன்…!”
“டேய்….இப்ப இந்தத் தட்டை நீ வாங்கப்போறியா இல்லியா..? இப்பிடி யார் மேலயாச்சும் எப்பப்பாரு கோபப்பட்டுக்கினு சாப்பிடாமப் போனே… பெறவு சோத்துக்காக தெருநாய் கணக்கா அலைய வேண்டியது தான். நெனப்பிருக்கட்டும்.” எச்சரிக்கும் குரலில் எரிச்சலோடு அம்மா நீட்டிய தட்டை வெடுக்கெண்டு பிடுங்கிய சிவராமன் நேரே வாசலுக்கு நடக்கிறான்.
“சிவராமா…எங்கடா….போறே…!”
“ம்ம்ம்….தெருநாய் கணக்கா அலையப் போறேண்டு  சாபம் கொடுத்தீல்ல, அதான்… எப்படின்னு பார்க்கப் போறேன். என்ன இந்த உலகத்துல நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கறதா உங்களுக்கு நினைப்பா… உங்களுக்குத் தான் என்னிய விட்டா யாருமில்லை. அதைத் தெரிஞ்சுக்கங்க  முதல்ல. எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ். என் பேரைச் சொன்னால் உசுரக் கூடக் கொடுப்பாங்க. தெருநாய் மாதிரி அலையப் போறேனாம்… நெனப்பப் பாரு.” கோபத்துடன் கத்திக் கொண்டே வாசல் படியில் கையில் தட்டோடு இறங்கி நிற்கவும்,
எங்கிருந்தோ ஓடி வந்த தெருநாய் இவன் முன்னே வாலாட்டிக் கொண்டு நின்று நிமிர்ந்து இவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தது,
“அண்ணே…ரொம்பப் பசிக்குது…ஏதாச்சும் இருந்தா நீயாச்சும் போட மாட்டியா”  அந்தக் கண்களின் பாஷையைப் புரிந்து கொண்ட சிவராமன் சற்றும் யோசிக்காமல் தட்டிலிருந்த இட்டிலிகளை அந்த நாய்க்கு வைத்தான்.
அவனை நன்றியோடு நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, குனிந்து கொண்டு வாலாட்டியபடியே ஒரு இட்டிலியை கவ்விக் கொண்டது.
“எம்புட்டுத் திமிரு இருந்தா நீ இந்தக் காரியம் செய்வே…? விலைவாசி விக்கிற விலையில, நாய்க்கு இட்டிலி கேக்குதோ? எம்புட்டு தகிரியம் திங்கக் கொடுத்தா அப்பிடியே தெருவுல நாய்க்குப் போட ..!  உனக்கு இனிமேட்டு இங்க  சோறு கிடைக்காது. எந்த நாய் உனக்குச் சோறு போடுதுன்னு நானும் பார்க்கறேன்” உள்ளிருந்து தான் கண்ட காட்சியில் கோபப்பட்டுக் கொண்டு ஓடிவந்த சாரதா. ஏதோ தன் மகன் செய்யக் கூடாத காரியத்தை செய்து விட்டது மாதிரி கத்தித் தீர்த்தாள் .
“இன்னொருவாட்டி உனக்கு யாரு இப்படி இட்டிலியைப் போட்டு கையில நீட்டப் போறாங்க… இப்படியே பட்டினி கெட..அப்பவாச்சும் புத்தி வருதாப் பாப்போம்.”
“யாருக்கு வேணும்…?  இந்தா இட்டிலி தட்டைப் பிடி.
போம்மா… நீயும் உன் இட்டிலியும் வீணாப்போன சட்டினியும்..! யாருக்கு வேணும்..?” கனன்று கொண்டிருந்த மொத்த கோபத்தையும்  கதவில் காண்பித்து விட்டு, விடு விடென்று வாசல் கேட்டை ஓங்கி அடித்துச் சார்த்திவிட்டு மறைகிறான் சிவராமன்.
துர்வாசர் புனர்ஜென்மம் எடுத்து … அப்படியே இவன் மூக்கு மேலே அட்டென்ஷன்ல நிக்கிறாரு போல. வயசுப் பிள்ளைக்கு இத்தனை கோபம் ஆகாதுப்பா. அலுத்துக் கொண்டே காலித்தட்டை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கிப் போகிறாள்.
பாவம் சிவராமன்… அவன் மட்டும் என்ன செய்வான். ‘வெறும் பி.ஏ  வுக்கு இங்க வேலையில்லைப்பா’… என்று சொல்லி அவனை ஓவ்வொரு கம்பெனியும் நிராகரிக்கும்போதேல்லாம்… ’சார்… இது உப்புப் போட்டு தின்ன பி.ஏ ஸார் ‘ என்று உரக்க கத்திவிட்டு வரவேண்டும் போலத் தானிருக்கும்.
சாரதாவுக்கு  தாகம் தொண்டையை அடைக்க, ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டில் எடுக்கக் குனிந்து பார்க்கும் போது தான் தெரிந்தது.. பேருக்கு ஒரு பாட்டில் கூட அங்கு இல்லை…
‘கஷ்டம் கஷ்டம்….ஒரு பாட்டில் தண்ணீர்  கூட பிடிச்சு வைக்க ஒரு மனுஷன் கிடையாது இங்கே… எல்லாம் நானே தான் செய்ய வேண்டியிருக்கு. நான் தண்ணியப்  பிடிச்சு ஃப்ரிட்ஜ்ல வெச்சா மாத்திரம், ஒரு மணி நேரத்தில் அத்தனை பாட்டிலையும் காலி பண்ணி உருட்டி விடத் தெரியும். அங்க பாரு… ஏதோ பறக்கும் தட்டு வி​ளையாடினாப்போல மூலைக்கு மூலை காலி பாட்டிலும், காப்பி டம்பளரும் சிதறிக் கிடக்கறத. இந்த லட்சணத்துல இவிங்களுக்கு  கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.’ முனகியபடியே குடத்துத்திலிருந்து ஒரு  சொம்பில் தண்ணீரை மொண்டு எடுத்து கட கடவென்று குடித்ததும்… உடம்பு முழுதும் புத்துணர்ச்சி பரவியது போலிருந்தது அவளுக்கு.
“சாரதா” உள்ளிருந்து கணவரின் குரல்….!
“இதோ….வந்துட்டேங்க!” இவளின் பதிலும்.
“உன் சீமந்தப் புத்திரன் வந்தாச்சா….இல்லை இன்னும் பொறுக்கிட்டு தான் இருக்கானா?”
“நானா கண்டேன்….என்னிய ஏன் இப்ப வேண்டாத வம்புக்கு இழுக்கறீங்க ? நீங்களாச்சு உங்க புள்ளயாச்சு..”
“இப்படி விட்டேத்தியா பதில் சொல்ல எப்பக் கத்துகிட்டே..? யார் சொல்லிக் கொடுக்கிறாங்க… அந்தப் பொறம்போக்கா …?” என்று கேட்டபடியே உள்ளிருந்து வரும் கணவரைப் பார்க்கப் பார்க்க எதிர்த்துப் பேச நாக்குத் துடித்தது. அடக்கிக் கொண்டாள். ‘இப்ப நான் என்ன சொன்னாலும் இவர் கிட்ட எடுபடாது….வீணா சண்டை வளரும்… வேண்டாம்’ என்று மனதை அடக்கி வைத்தாள்.
“என்ன பண்ணிருக்கே….போடு. தின்னுட்டு தூங்கறேன். நான் ஒருத்தன் அதுக்கு மட்டும் தானே இருக்கேன்னு உங்க ரெண்டு பேருக்கும் நினைப்பு.”
“என்ன க்ராஸ் வார்ட்ல வார்த்தைங்க  ஒண்ணும் சரியா வந்து விழலையா? அதான் இங்க வந்து கொட்டறீங்களா..? நமக்கு இருக்கறதே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கருவேப்பலை கொத்தாட்டம் ஒத்தப் பிள்ளை… அத்தப் போயி நீங்களே பொறம்போக்குன்னு சொன்னா எப்பிடிங்க?” இட்டிலியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் அதை அப்படியே டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு, எமெர்ஜென்சி கைவிளக்கை எடுத்து வர மீண்டும் சமையலறைக்குள் நுழையும்போது போன மின்சாரம் ரீங்காரமாய் வந்தது.
ஊதா…..ஊதா…..
ஊதாக் கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்….
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்…
ரோஜா……ரோஜா…..கலரு பொம்மி…
உனக்கு யாரு  மம்மி…..!
ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!
ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!
ஊதா……ஊதா…..!
தொலைக்காட்சிப் பெட்டியில் வருத்தப் படாத வாலிபர்கள் ஆடிக் கொண்டிருக்க… சாரதாவுக்கு எரிச்சல் வந்தது.
உன் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போடணும்.. பாட்டைப் பாரு பாட்டை…..டொக்கென்று  டிவியை  அணைத்து விட்டு, கரையான்கள் மாதிரி சினிமா உலகத்துக்குள்ளார நுழைஞ்சுட்டானுங்க.. இவனுங்களாலத் தான் வளருற புள்ளைங்க கெட்டுக் குட்டிச் சுவராப் போறாய்ங்க. ஏற்கனவே நாடு தள்ளாடுது… இனிமேட்டு ஒரு ‘கௌரவமும்’ பார்க்க முடியாது….எல்லாம் டண்டனக்கா தான். அம்புட்டு  சானல்லயும் இதேப்  பாட்டைப் போட்டு மோசம் செய்யுது.
“சாரதா… பார்த்தீல்ல உலகத்த… அதான் சொல்றேன்.. அந்தக் கருவேப்பலைக் கொத்து நாளைக்கு உன்னோட சாவிக்கொத்தைப் பிடுங்கிட்டு ஓடும் போது தான் உனக்கு மண்டேல ஏறும்… அது வரைக்கும் பாசம் கண்ணை மறைக்கும்.”
“அப்ப நீங்க உங்கம்மா அப்பாகிட்ட அப்படித்தான் செஞ்சீங்களா…? நீங்க அவுங்க இருக்குற வரைக்கும் அவுங்களை உங்க உள்ளங்கையில வெச்சுத் தானே தாங்கு தாங்குன்னு தாங்கினீங்க..? உங்க ரத்தம் தான அங்கிட்டும் ஓடுது… உங்க பிள்ளையும் உங்கள மாதிரி தான இருப்பான். பார்த்துக்கிட்டே இருங்க. என் வாக்குத் தான் பலிக்கப் போவுது.”
“கிளிச்சுச்சு. நீ கனவு காணுற அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுடி… நீ இன்னும் புரியாதவளா இருக்கே. நாலு இடம் போனாத் தான் உலகம் தெரியும். நீ கிணத்துத் தவளை. உன்னோட உலகம் சமையல்கட்டும் எச்சப்  பாத்திரமும் மட்டும் தான். அக்கம் பக்கம் வம்படிக்கக் கூட  ஒஞ்ஜோட்டு புள்ளைங்க இங்கன யாரும் கிடையாது. எல்லாருமே ரெண்டு சம்பாத்தியக் குடும்பமாப் போச்சு. ஞாயித்துக் கிழமை தவுற மத்த நாள்ல பூட்டு தானே வீட்டை காக்குது. எங்க ஆபீஸ் அக்கவுண்டண்ட் பார்த்தசாரதி இருக்காரில்ல…?”
“ஆமா… அவருக்கு என்னாச்சு? ஹார்ட் அட்டாக்கா..? அல்லது அவுரு வீட்டாண்ட திருட்டுப் போயிரிச்சா..?”
“ஏண்டி…உனக்கு நல்லதே தோணாதா?”
“இப்பல்லாம் நல்லதே நடக்க மாட்டேங்குதே. எங்கிட்டுப் பார்த்தாலும் இப்படித் தான இருக்குது…அதான்..நீங்க சொல்லுங்க.
அப்ப அவுருக்கு என்னாச்சு?”
“ஹார்ட் அட்டாக் தானா தான் வருமா என்ன..? பெத்ததுங்க நெஞ்சுல ஓங்கிக் குத்தாமல் செய்கையால குத்தினாலும் வலி  வரும்… அவரோட பையன் ரெண்டு மூணு நாளா வீட்டுக்கே வரலையாம். ஆபீசுக்கும் போகலையாம். திடீர்னு நேத்து வந்து மாலையும் கழுத்துமா வீட்டு வாசல்ல வந்து நின்னானாம்.”
“அடப் பாவமே…..! ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிகிட்டானா…?”
“நானே சீரியஸ் விஷயம் சொல்ல வாரேன். உனக்கென்ன  இப்ப ராகத்தோட பாட்டுக் கேட்குது..? நீயும் இப்பல்லாம் இந்தப் பாளா போற டிவி யைப் பார்த்து ரொம்பவே கேட்டுப் போயிட்டே. எப்பப்பாரு…..ஏதாச்சும் பாடிக்கிட்டு….!”
“ம்ம்ம்… சரி, சாரி… சொல்லுங்க…சொல்லுங்க என்னாச்சு? அவரு ஏத்துக்கிட்டாரா.? பார்த்தசாரதி பக்கா அய்யங்காரு குடும்பம்… அந்த மைதிலி மாமி செய்யுற புளியோதரை தொட்டாலே கை மணக்கும்… இல்லீங்க.”
“ஆமாங்க…!” என்று தன் குரலை பெண் குரல் போல மாற்றிச் சொல்லிக் காட்டியவர், “என்னை முழுசா சொல்ல விட மாட்டியே… சரி ஒண்ணும் வேண்டாம்… உன் மரமண்டைக்கு தீனியை தவிர  வேற ஒண்ணும் ஏறாதுன்னு தெரிஞ்சு போச்சு. இட்டிலியைப் போடு.”
“என்னங்க நீங்க….அப்படி என்னத்த சொல்லிப்புட்டேன்னு இம்புட்டு கோபம் உங்களுக்கு…? மேல சொல்லுங்க..இட்டிலி எடுத்து வெக்கிறேன்.”
“கூட வேலை பார்குற ஒரு தெலுங்குக்கார பிள்ளைய . கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்திருக்கான். இவரு பெத்த பிள்ளையின்னு கூட நினைக்காம, போடா வெளிலன்னு துரத்தி விட்டுட்டு இத்தோட முடிஞ்சி போச்சுன்னு சொல்லி ரெண்டு பக்கெட் தண்ணியை தலயில் கொட்டிக்கிட்டாராம்.”
“அதனால ஜலதோஷமில்ல பிடிச்சிருக்கும். இப்பக் கிடந்து வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம்.? ஆரம்பத்திலிருந்து கண்டிச்சு வெச்சிருந்தா இப்ப இந்த நிலை வராதில்ல. இப்ப என்னாச்சு..? பெத்தத தொரத்திட்டு ரெண்டு பெருசும் அழுதுகிட்டு  நிக்கிறாங்களா?  பாவம்ங்க…அவுங்க.”
“அதான் சாரதா …நானும் சொல்றேன்….இன்னைக்கு அவருக்கு,  நாளைக்கு நமக்குன்னு ஆயிடக் கூடாதில்லையா..?”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க..நம்ம பையன் தங்கக்குடம். அந்த வளிக்கெல்லாம் போயிறமாட்டான்.”
“ஆமா..உன்கிட்ட வந்து சொன்னான்… இப்படியே அவனைத் தலையில ஏத்தி வெச்சுக் கெரகமாடிக் கொண்டாடு. அவன் அப்படியே உன்னை நசுக்கிட்டு உருளப் போறான். உன் பாசம் உன் கண்ணை,  காதை,வாயை அடைச்சிடுத்து.. என்ன செய்யறது. உனக்கெல்லாம் பட்டாக் கூடத் தெரியாது..”
“வயசுப் பசங்க கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்குங்க, நாம பெரியவங்க அவங்களை கொஞ்சமாச்சும் நம்பணும். எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்த்தால் கஷ்டமில்லையா. இதோ… இப்ப இட்டிலி கூட திங்காமல் தெருநாய்க்கு போட்டுட்டு கோபத்தோட வெளிய கெளம்பிட்டான். நீங்க எப்பப்பாரு நீங்க அவனை எதாச்சும் சொல்லி அவன் மனசை வேதனை செய்யுறத மொதல்ல கொஞ்சம் நிப்பாட்டுங்க. உலகம் தெரியாத பிள்ள அவன். இப்பத்தான் அவனுக்கு நல்லது கேட்டது விளங்குது.”
“அவனுக்காடி உலகம் தெரியாது. உலகத்தைக் கூறு போட்டு வித்துப்புடுவாங்குங்கடி. அவனும் அவன் கூட்டாளிங்களும். அவன் முழியப் பார்த்தாலே எனக்கு அவன் ஏதோ தகிடுதத்தம் பண்ணிட்டு வந்த மாதிரியே இருக்கும். என்னியப் பார்த்தாலே திருட்டு முழி முழிக்கிறான். அவனை எப்படி நம்பச் சொல்றே நீ?”
“ஹலோ…!” என்று இழுத்த சாரதா “நம்ம முழில கொஞ்சமாச்சும் அவனுக்கும் இருக்குமில்ல. என்னமோ நம்ம ராஜபார்வை பார்க்கிறாப்பல, அவனை என்ன வேணா உங்க இஷ்டத்துக்கு சொல்லிக்கிருங்க. ஆனா அவனைத் திருடு, கொறடுன்னு மட்டும் எதாச்சும் சொன்னீங்கன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும், இப்பமே சொல்லிட்டேன்… ஆமா.”
“அவனைச் சொன்னா உனக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடுமே. எப்டியோ நீ அவனுக்கு அசாத்தியச் செல்லம் கொடுத்து, அவனும்   கெட்டு குட்டிச்சுவரா போயாச்சு. இனிமேட்டு சாண் போனா என்ன முழம் போனா எனக்கென்ன? நேத்திக்கி நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும்போது வழக்கமா வர வழில வராமல் தீபாவளிக் கூட்டமா இருந்திச்சேன்னு  கொஞ்சம் சுத்தி வந்தேன் பாரு… வரக்குள்ள அங்கன  ஒரு பெட்டிக்கடையில நம்ம அய்யா செம ஸ்டைலா நிக்கிறாரு… சாம்பிராணிப் பொகை  போடுற சாயுபு கணக்கா. ஊதி ஊதி புகையை விட்டுக்கிட்டு… கூடவே இன்னும் ரெண்டு தத்தாரிப் பசங்க, இவனுக்கு ஜால்ரா போட. அப்டியே… வண்டியை விட்டு எறங்கி ரெண்டு சாத்து சாத்தினா என்னன்னு தோணிச்சு. இருந்தும் கட்டுப் படுத்திகிட்டேன். எதுக்குத் தெரியுமா?”
“அச்சச்சோ…..என்னது…! .சிகரெட் பிடிக்கிறானா..? எதுக்கு சாத்தாம விட்டீங்க..?”
“என் மானம் போயிறக் கூடாது பாரு….அதுக்காண்டி தான், கண்டுக்கிடாம விட்டுட்டேன். அதான் இன்னிக்கி காலீல நூறு ரூபாய் கேட்டான் பாரு… அப்ப சேர்த்து வெச்சு நான் கொடுத்த டோசுல, இனிமேட்டு வாயில கொள்ளிக்கட்டையை செருகும்போது அவனுக்கு நான் சொன்ன நெனப்பு தான் வரும் பாரு..! “புலம்பிக் கொண்டே இட்டிலியை சாப்பிட்டு முடித்தவர் எழுந்து கையலம்பிவிட்டு பெரிதாக ஒரு ஏப்பம் விட்டுவிட்டு படுக்கையை நோக்கி கொட்டாவி விட்டுக் கொண்டே போனார்.
“என்னங்க நீங்க…இப்படி ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டு போறீங்க. நம்ம சிவராமனா சிகரெட் பிடிக்கிறான் ..? எனக்குத் தெரியவே தெரியாது. ஆச்சரியமா இருக்குதே. நம்பவே முடியலீங்க.”
“சிவராமன்னு பேரு வெச்சா சிகரெட்டெல்லாம் பிடிக்க மாட்டான்னு நினைச்சியாக்கும்? இதுக்கெல்லாம் அவன் ஊருக்கும் உனக்கும் பத்திரிகை வெச்சுட்டுத் தான் ஆரம்பிப்பானா என்ன..? ஹ ஹா….நம்பவே முடியலியாம். இப்படிப் பிள்ளையை நம்பினா, மத்ததெல்லாம் எப்புடி நம்ப முடியும்? சொல்லுறவங்களக் கூட நம்ப முடியாது. எப்பிடியோ போ, எனக்குத் தூக்கம் வருது.”
“இருங்க…..அவன் வரட்டும் இன்னிக்கு. நான் ரெண்டுல ஒண்ணு பார்த்துப்புடறேன். அவன….!” கடைசி இட்டிலி தொண்டைக்குள் இறங்காமல் அடைக்கவும், சாரதா  தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தவள்… ‘இன்னும் இவனால என்னவெல்லாம் பிரச்சனைகள் வரப்போகுதோ…? முருகா…..அந்தப் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுத்து ஒரு நல்ல வேலையையும்  கொடுத்து உட்கார வெச்சிடேன், உனக்குப் பழனிக்கு வந்து பாலாபிஷேகம் செய்யறேன்.’
அதற்குள் வாசல் கேட்டுத் திறக்கும் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்த சாரதாவுக்கு , சிவராமனின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாகவும் நிறைய கோபமும் சேர்த்தே வந்தது.
அவன் உள்ளே வரக் காத்திருந்தவள் போல…
“வர வர உன் போக்குவரத்தே சரியில்லை….ஆமா…நீ சிகரெட் பிடிக்கிறியா?  எங்க ஊது… பார்க்கலாம். அம்புட்டுப் பெரியவனாயிட்டியா  நீ? அப்பா…அன்னிக்கி  உன்னிய தெருவுல சிகரெட்டு பிடிக்கிறதைப் பார்த்துபுட்டு வந்து இங்க குதி குதின்னு குதிக்கிறாரு….என்னமோ நான் தான் உன் கையில திணிச்சு புகை விடுடா மகனேண்டு  சொன்ன மாதிரியும்.. அதான் நீ கேட்ட ரூபாயைக் கூட தராம உன்னை காலீல திட்டினாராம். ஏன் தான் இப்படியெல்லாம் செய்யுறியோ?”
“நீங்க பாட்டுக்கு யாரையோ பார்த்துட்டு நான் தான்னு சொன்னால், அதுக்கெல்லாம் நான் பொறுப்பு ஏத்துக்கிட முடியாது.” கோபத்துடன் கத்திவிட்டு சாப்பிடாமல்,  டிவியைப் போட்டவன் அதை  இன்னும் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டு அதைத் தீவிரமாகப் பார்ப்பது போல சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் சிவராமன்.
“இப்பவாச்சும்…வந்து சாப்பிடு வா…!” பாசம் மேலிட்டது சாரதாவுக்கு.
“நான் சாப்பிட்டாச்சு.”
“சமைச்சது அம்புட்டும் வீணாப் போகுதில்ல….உன் கோபத்தை சாப்பாட்டு மேல ஏன் காமிக்கிறே?”
“அதான் வாசல்ல நாய் இருக்கே,இனிமேட்டு அதுக்குப் போடு….நன்றியாவாச்சும் இருக்கும்…அதான வேணும் உங்களுக்கு..!”
“ஏண்டா இப்படில்லாம் பேசறே..? என்னாச்சுடா உனக்கு…..மூஞ்சியே சரியில்லை..வெளில எதாச்சும் பிரச்சனையா? மூஞ்சியே பேய் அரைஞ்சாப்பல இருக்குது….?”
“காசில்லாம சுத்தினா மூஞ்சி பேயறைஞ்சாப்பல தான்மா இருக்கும். எனக்கு வெளில ஒரு பிரச்சனையும் இல்ல…அம்புட்டும் வீட்டுக்குள்ளாற தான். அதான் பைக் வாங்கித் தரச் சொல்லிருக்கேன். சொன்னியா அவுருகிட்ட. என்ன சொன்னாரு.”
“ம்ம்ம்…சொல்றேன்….சொல்றேன்….” என்று நகர்ந்தவள்,
இவனோட இப்பப் பேசினா சண்டை வளரும், ஊகித்தபடி “டேய்..சிவராமா ,கதவை சார்த்தி பூட்டு….நான் படுக்கப் போறேன். பசிச்சா எடுத்துப் போட்டு சாப்பிடு. ஐயோ ராமா…இந்த இடுப்பு இந்த வலி வலிக்கிதே…அயோடெக்ஸ் எங்கிட்டு இருக்கோ..தேடணும்” சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று மறைந்தாள் சாரதா.
“யாரை நம்பி நான் பொறந்தேன்..
போங்கடாப் போங்க…
என் காலம் வெல்லும்,
வென்ற பின்னே வாங்கடா வாங்க…
குளத்திலே தண்ணியில்லே
கொக்கும் இல்லே மீனும் இல்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே…
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளையின் மனமே கல்லம்மா…
“ஆமா…..இவனுங்க வேற…கல்லு…மண்ணுன்னு… சொல்ல வந்திட்டாய்ங்க” அவசரமாக டிவியை அணைத்தான் சிவராமன்.
அறைக்குள் அப்பாவும் அம்மாவும் காரசாரமாய் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் ஹால் வரைக்கும் கேட்டது.
இவனுக்கும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களும் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“இவனெல்லாம் உருப்பட மாட்டாண்டி…..இவனுக்கெல்லாம் நீ வக்காலத்து வாங்கிட்டு வராத….பைக்கும் கிடையாது…அவனுக்கு எந்த சோக்கும் கிடையாது.உருப்படாத பய…. நடந்து போகச்சொல்லு. அப்பத்தான் சொகத்தோட அருமை தெரியும். நம்ம நிம்மதியைக் கெடுக்கறதே அவனுக்குப் பொளப்பு. எத்தனை பசங்க படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்குறாங்க…நமக்குன்னு…என் கர்மம்….!நாட்டுல என்ன வேலையா இல்லே….? இவனுக்கு சொகுசா உட்கார்ந்து தண்டச் சோறு தின்னக் கேக்குது.
நீ பேசாம படுடி….பிள்ளைக்கு பைக்கு வேணுமாம் பைக்கு…. அவனுக்கு இன்னைக்கு பைக்கு வேணும்பான் ..நாளைக்கு புதுசா செல்ஃபோன் வேணும்பான். அவன் கேக்குறத பறிச்சுக் கொடுக்க எல்லாம் மரத்துலயா முளைச்சு நிக்குது. பெத்தவங்க கஷ்டம் தெரியாத பயபுள்ள… நடுத்தெருவுல நிப்பாட்டினாத்தான் வெவரம் வெளங்கும். நானும் இவன் வயசைத் தாண்டி வந்தவன் தான..ம்க்க்க்க்க்க்க்க்…” என்று செருமிய சத்தம் கேட்டதும்…சிவராமனின் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது அந்த வார்த்தைகள்.
‘இதுக்கெல்லாம் நான் வருத்தப் படமாட்டேன்…இவிங்களுக்கும் நான் யாருன்னு காமிக்கணும்….இது போல உருப்படாத அப்பன்களுக்கு  உணர்த்தணும். எப்பயும் நான் என்ன இப்பிடியேவா இருந்துடப் போறேன்..? என்னவோ சொல்லுவாங்களே..ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு.இவங்க இப்படித் தான். திருந்தாதவிங்க. எப்பப் பாரு கேள்வி கேட்டு கொடஞ்செடுத்து உசுர வாங்கிருவாய்ங்க. இவிங்களுக்கு சம்பாதிச்சாப் போதும்…அது எப்பிடியிருந்தா என்ன?’ சடக்கென்று எழுந்திருந்த சிவராமன் தனக்கு தேவையானதை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு கிளம்பினான்.
‘இப்படிப்பட்ட அப்பா,அம்மா இருக்கிறதாலத் தான் நாட்டுல கொலை, கொள்ளை, செயின் ஸ்னாட்ச்சிங், ஜேப்படி எல்லாம் சர்வ சாதாரணமா நடக்குது. இங்கன இருந்தாத் திட்டியே கொன்னுருவாய்ங்க.’
‘வீட்டை விட்டே ஓடிறலாமா..? ஓடிறலாம் ..அப்பத்தான் இவிங்க ரெண்டு பேத்துக்கும் என்னோட அருமையும் புரியும்.’
டிவி ஸ்க்ரீனில் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டியவன்,
“நான் உருப்படுவதற்காக போகிறேன்
ஒரு வீட்டு நாய்த் தெருநாயாகிறது
நிம்மதியாக இருங்கள்.”
சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் அதன் மேல் கொட்டை எழுத்தில்  எழுதிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு, மெல்லக் கதவைச் சார்த்திவிட்டு  வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
வீடு இருளில் மூழ்கிப் போகிறது.
வாசற்படி கடந்து தெருவுக்கு வந்ததும், அங்கு ஓரமாகப் படுத்திருந்த தெருநாய் இவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு தலையை நிமிர்த்திக் கொண்டு இவனைப் பார்த்து, “இந்நேரத்துக்கு இங்கிட்டுப் புறப்பட்ட…’?… விடாமல் குறைக்க ஆரமபித்தது. வீட்டை விட்டு நடக்க நடக்க…நாயும் தொடர்ந்து குரைத்துக் கொண்டே வந்தது.
முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேறிப் போகிறோம் என்றதும், அவனையும் அறியாமல் ஒரு பயம் வந்து அவனை சூழ்ந்து கொண்டது. நாம சொன்னது போலவே திருடனாகி விடுவோமோ? போலீஸ் லத்தியால் முட்டிக்கி முட்டி அடி வாங்கிக் கம்பி எண்ணுவோமோ? காசு கிரிமினல் ஆக்கிடும்… யாரும் தட்டிக் கேட்க ஆளில்லையின்னா நல்லவன் கூட கிரிமினல் ஆயிறுவானே. நான் செய்யுறது மட்டும் சரியா? நான் இப்போ எங்கிட்டுப் போவேன்?
கால்கள் வீட்டைக் கடந்து நடக்க நடக்க, மனம் நொண்டியடித்தது. உள்ளிருந்து பொங்கி வந்த எண்ணங்கள்  வீட்டுக்குள் அவனை இழுத்தது. மனசாட்சி சாட்டையை உருவியது. ‘அம்மா பாவம்….அப்பாவும் பாவம்..!’ தன்னை உணர்ந்ததும் பாசம் மேலிட்டது.
“பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளையின் மனமே கல்லம்மா.”.
காதுக்குள் பாடல் வரிகள் மீண்டும் ஒலித்தது. சரியாகத் தான் சொல்லியிருக்காங்க. நான் தான் புரிஞ்சுக்கலை.
சிவராமன் அந்த நாயைப் பார்க்கிறான். அதுவும் உடனே நின்று இவனைப் பார்க்கிறது .
எனக்குத் தெரிஞ்சு நான் உனக்கு இன்னிக்கு மட்டும் தான் இட்டிலி வெச்சேன். அதுக்கே நீ  இப்படி வாலாட்டிக்கிட்டு பின்னாடியே வாரியா …இல்லே… நான் இங்கன இல்லாத போனா உனக்கு நாளைக்கி சோறு கிடைக்காதேன்னு குரைக்கிரியா …சீ …போ….! துரத்திப் பார்க்கிறான்.
ச்சே….நானும் ஏன் உன்னைத் துரத்தோணம்?
அதுவும் வாலை ஆட்டியபடியே குரைத்துக்  கொண்டே கூட வருகிறது.
தெரு முழுதும் கடந்திருப்பான். சிவராமன்… நாய்க்குக் கூட நன்றியும், கடமை உணர்வும் இருக்கு… எனக்கில்லையே..? அப்பா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அவர் சரி தான். நான் தான் மாறணும் .தெரு திரும்புவதற்குள் அவன் மனம் திரும்பிவிட்டது. சிவராமன்  வீட்டை நோக்கித் திரும்புகிறான்.
தான் எழுந்த வேலை முடித்துவிட்டு ஓடிச்சென்று வாலைச் சுருட்டிக் கொண்டு மீண்டும் ஓரமாகப் போய்ப்  படுத்துக் கொள்கிறது அந்த நாய்.
பூனை போல மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறான் சிவராமன்.
நுழைந்ததும், முதல் வேலையாக ,அவன் எழுதி ஒட்டிய வெள்ளைத் தாளை டீவி ஸ்க்ரீனிலிருந்து பிய்த்து, ‘ஒரு தெருநாய் என்னை உருப்பட வெச்சிருச்சு’ என்று சொல்லிக் கொண்டே அதைத்  துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வீசுகிறான்.
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாள
ர்

வியாழன், 14 நவம்பர், 2013

தன்னைச் சுடும்....!




ஹேய்....இங்க பாரேன் கிரி....! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த 'மாண்டசரி ஸ்கூல்ல' சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்...இல்லபா ...நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட  அவன் பொறந்து நாலாவது  மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா....?

நோ....பார்.......!

தெரியாதுங்கறியா....? இல்ல 'நோ பார்'னே சொல்றியா..

இல்ல பார்கவி தெரியாதுன்னு சொல்றேன். நானும் உன்கூட சேர்ந்து இப்பத்தான் இதைப் படிக்கறேன்..

யூ...சோம்பேறி ...டெய்லி இந்த வழியாத் தானே வரே நீ...அதெப்படி உன் கண்ணுலேர்ந்து இவ்ளோ பெரிய ஹோர்டிங் தப்பிச்சது ?

இதெல்லாம் உங்க கண்ணுக்குள்ள மட்டும் தான் சிக்கும் ....நான் பாட்டுக்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கிட்டு எனக்கு முன்னாடி யார் வண்டி ஓட்டறா..? ஏதாவது அம்ச ஃபிகர் கண்ணுல மாட்டாதான்னு  டைம் பாஸ் சைட் அடிச்சுண்டு இருப்பேன்..போயும் போயும் இதெல்லாம் யாருக்கு வேணும்? நான் தனியா வெளில வந்தாச்சுன்னா அவ்ளோ தான். சென்ட் பெர்செண்ட் பாச்சலர் ரா...! 

அதே .தான் நானும் திங் பண்ணேன்...உன்னைப் பத்தி....நீயே  அதை அக்செப்ட் பண்ணீட்டே...ஹேய் மிஸ்டர் கிரி....நீ தான் மிஸஸ் பார்கவியாகி ரெண்டு வருஷமாயாச்சு....அதுக்கு அடையாளமா..?

உன் கழுத்துல தாலி தொங்கலை....!

ம்கும்....உன் காதுல கடுக்கண்  மின்னறது மச்சான்....மண்டைக்கு சூடு போட்டுக்கோ  சொல்லிட்டேன்....ஒழுங்கா ஆபீஸ் போனமா....வேலையை மட்டும் பார்த்தோமா...பார்கவிக்கும், கீட்சுக்கும் பிடிச்சதை வாங்கித் தந்தோமான்னு நல்ல பையனா லட்சணமா சமத்தா நடந்துக்கணம்.....சரியா....காரை ஒட்டிக் கொண்டிருந்த கிரியின் காதைத் திருகி அழகு காட்டினாள் பார்கவி.

அங்க பாரேன்... பார்....அந்தப் பொண்ணு எப்படி பைக்குல அவனோட ஒட்டிக்கிட்டுப் போறாள்னு....நீயும் இருக்கியே....ஆயிரம் சொல்லு பைக் பைக்கு  தான் கார் ....கார்...தான். இல்லியா பார்....!

நீ திருந்தவே மாட்ரா ..! உன்னோட லொள்ளும்...ஜொள்ளும் ..

என்னோட கவச குண்டலங்கள் மாதிரி...!

வீட்டுக்கு வா...அம்மா காதுல போட்டு வைக்கிறேன்.....உன்னோட திருவிளையாடலை....! உங்கம்மா பண்ற அர்ச்சனைக்கு மட்டும் தான் நீ அடங்குவே..!

வேண்டாண்டி...பார்....என் பாவமான மூஞ்சியைப் பாரேண்டி ..! அம்மாவுக்கு, ஆரம்பிச்சா நிறுத்தத் தெரியாதுன்னு உனக்கே தெரியுமே.

.சரி.சரி...ஜோக்ஸ் அபார்ட்.....இப்ப விஷயத்துக்கு வா......நம்ம கீட்ஸுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சாச்சு...நாளைக்கே போயி விசாரிக்கணம்....அட்ரெஸ  மெசேஜ் பண்ணி சேவ்ல போட்டு வெச்சுக்கோ.

கஷ்டம் கஷ்டம்..இவன் பொறந்து வெறும் நாலே  மாசம் தானே ஆறது....அதுக்குள்ளே உனக்கு என்னாச்சு பார்  .? இவ்ளோ அவசரப் படறே.  அட...நான் தான் மறந்தே போய்ட்டேன்....நீ தான் ஒன்பது மாசம் முடிஞ்சதுமே ஹாஸ்பிடல்ல ரூம் போட்டு, இன்னிக்கு இந்த நட்சத்திரத்துல தான்  என் குழந்தை பொறக்கணும்னு அடம் பிடிச்சு சிசேரியன் கேஸாச்சே.உன் கிட்ட என் பருப்பு வேகாது.....!. 

ஆஸ்பத்திரி வாசல்ல  நாதஸ்வரம் ஏற்பாடு பண்ணி வெச்சு குழந்தை பொறந்த உடனே  வாசிக்க சொல்லியிருந்தேனே அதை நீ பாராட்டவேயில்லை...கிரி ....!

ஆமாமா.....அதான் குழந்தை பயத்தில்,  பிறந்ததும் இன்குபேட்டர்ல போய் படுத்துண்டான்...இதெல்லாம் என்னமோ...தெரியலை....நீ மட்டும் தான் அப்படியா இல்லை உன் குடும்பத்துல வேற யாராச்சும் இப்படி மரை கழண்ட கேஸுகள் இன்னும் இருக்கா...?

உனக்குத் தெரியாதா....? இதெல்லாம் கூட வாஸ்து மாதிரி தான்...இப்பல்லாம் இதெல்லாம்  ஃபேஷனாவே ஆயாச்சு.. இப்படில்லாம் பண்ணாதவா தான் குறைவு.


நான் இதுல ஜீரோ....பட் நோ..பெயின் ......நோ கெய்ன்டி பார்....!  

ம்கும்...நோ பெயின்  பட் கெய்ன்..கீட்ஸ்...! 

நான் உன்ன மாதிரி..என்னை மாதிரியெல்லாம் நம்ம குழந்தையை வளர்க்க மாட்டேனாக்கும். எனக்குன்னு ஒரு ப்ளான். என் கசின் சிஸ் திவ்யா தெரியுமா.?..ஞாபகம் இருக்கா?

ம்ம்....அந்த பரட்டைத் தலை.....அச்சச்சோ....அந்த பாப் தலைவி...!

அது.....! அவள்....குழந்தை வயித்தில இருக்கும்போதே அதுக்குன்னு எதோ ஒரு கிளாசுக்கு போயிருக்கா...அதனாலத் தான் அவ குழந்தை பிரேமுக்கு ஒரு வயசு தான் ஆறது...அதுக்குள்ளே புத்தகத்துல இருக்கும் அத்தனை படத்தையும் ஐடெண்டிஃபை 
பண்ணி டக்கு டக்கு ன்னு சொல்றானாம். இவளுக்கு ரொம்பப் பெருமையா இருக்காம்...போன வாரம் கூட ஃபோன் பண்ணிச் சொல்லி சந்தோஷப் பட்டாள் .

ரொம்ப முக்கியம்....!  இல்ல.....இல்ல....பிரேம் இப்பவே நம்ம கீட்ஸ் க்கு வில்லனாயிட்டானா..? ன்னு.

என்ன நீ கிரி.....நம்ம கீட்ஸ் கூட அவனை மாதிரி வரவேண்டாமா...? அதுக்குத் தான் இந்த ஸ்கூல்.

இந்த விஷயத்தில் நீ அவசரப் படாதே பார்...! அம்மாட்டயும் கேட்கணும்..அவாளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இருக்காது நீ வேணாப் பாரேன்......எவனோ காசு பிடுங்க போடற ஐடியாவில் நீங்க முதலீடு செய்யாதேங்கோன்னு சொல்வா.

ஆமாமா...அப்டித் தான் சொல்வா...நான் சொல்ற எதுக்கு உங்கம்மா உடனே அப்படியா சரின்னு சொல்லிருக்கா..?அதெல்லாம் கேட்டுண்டு இருந்தா நம்ம குழந்தை கடைசி பெஞ்சுல கண்ணைக் கட்டிண்டு உட்காரணம், பரவாயில்லையா..? உங்களுக்கு வேணா பரவாயில்லைன்னு இருக்கலாம்....என்னால முடியாது.ஐ வில் மேக் ஹிம்  தி பெஸ்ட் கிட் ...! உலகம் எவ்வளவு வேகமா போறது தெரியுமா? அதுக்கேத்த வேகம் இருந்தாத் தான் வர காலத்துல பிழைக்க முடியும்.

வீட்டுக்குள் போனதும் என்ன மாதிரியான  வாக்குவாதம் நடக்கப் போறதோ....இப்பவே மனத்தில் 70mm அளவுக்குத் திரை விழுந்து  அதில் பார்கவி ஃபுல்  ஸ்க்ரீனில் முறைத்துக் கொண்டு தெரிந்தாள் . அதை ஜூம் அவுட் பண்ணுவதற்குள் வீடு வந்து விட்டது.

காரைப் பார்க் செய்து விட்டு, ஹேய்....கமான் பார்.....பி ரிலாக்ஸ்ட்....இங்கேர்ந்தே மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்காதே....அம்மா கண்டு  பிடிச்சுடுவா...! ஒ கே. கூல் பேப்..கொஞ்சம் சிரியேன் .

எனக்குத் தெரியாதா..? உங்கம்மாக்கு உடம்பெல்லாம் கண்ணுன்னு..இதுக்கொண்ணும் குறைச்சலில்லை.....ஈஈஈஈ ......போதுமா...? 

அது சரி...ரொம்ப வாராதே..! ரொம்ப ஜாஸ்தி....கொஞ்சம் குறைச்சுக்கோ பரவாயில்லை 'சின்ன  இ' யே...போதும்.

நான் என்ன இங்க ஈயாப்  பிடிக்கறேன்....'சின்ன ஈ'  போதும்...வெ வெ வெ வெ ..கிரியைப் பார்த்து அழகு காட்டினாள்...இங்க பாரு .அம்மாக்கிட்ட எனக்கு நீ சப்போர்ட் பண்ணிப் பேசணம் ..புரிஞ்சுதா? நான் என் குழந்தைக்கு எது செஞ்சாலும் அவன் நல்லதுக்குத் தான் செய்வேன்.

அது சரி.....எல்லாருக்குமே  அப்படித்தான் குழந்தை மேல பாசம் உண்டு பார்.

யார் இல்லைன்னா.....அப்டி இருந்தால் எனக்கு யார்ட்டயும் இதுக்காக கெஞ்சவே வேண்டாமே..நாளைக்கே அந்த ஸ்கூல்ல சேர்த்துடலாம்....இல்லையா?

வீட்டுக்குள் நுழையும் வரை பேசிக் கொண்டே செருப்பைக் கழற்றி விட்டு, உள்ளே நுழைந்ததும், 

ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டே 'சரவணன் மீனாட்சி ' சீரியலில் ஐக்கியமாகி பார்த்துக் கொண்டிருந்த  சுபத்ரா , ஊஞ்சலை நிறுத்தி விட்டு, ஷாப்பிங் போய்ட்டு வந்தாச்சா...?  கீட்ஸ் பசிச்சு அழுதானா....முதல்ல அவனுக்கு திருஷ்டி சுத்திப் போடணம். என்றபடி  ஊஞ்சலிலிருந்து இறங்கினாள் .

ம்மா.....உன் மருமகள் சொல்வா....கேளேன்.....நம்ம கீட்ஸ்சை நாளையிலேர்ந்து ஸ்கூல்ல சேர்க்கப் போறாளாம்..

என்னடாது கூத்தாயிருக்கு...?.பொறந்து நாலு மாசம் கூட கழியலை...இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கெல்லாம் யார் ஸ்கூலை கட்டி வெச்சுண்டு உட்கார்ந்திருக்கா . நன்னாருக்கு போ..!

அதெல்லாம் இருக்கு. குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே சொல்லித் தர ஸ்கூல் எல்லாம் கூட வந்தாச்சாம். பார்கவி சொல்றா. நமக்கு தான் இதெல்லாம் ஒண்ணும் தெரியலை.

அதுக்குள்ளே ஸ்கூலாவது....கீலாவது ... நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். ப்ளே ஸ்கூலுக்கு போக மூணு வயசானவட்டு பார்த்துக்கலாம்.

ம்மா...நீ கொஞ்சம் சும்மா இரேன்....கிரி அம்மாவின் வாயை அடைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பார்கவி,
ஏன் நிறுத்திட்ட கிரி...நீயே  அம்மாட்ட சொல்லியாச்சா..?

இல்லையில்ல இப்பத் தான் சொல்லிண்டு இருக்கேன்.

இதோ பார் பார்கவி...அவன் எல்லாம் சொன்னான்....ஆனா அதெல்லாம் நம்மாத்து குழந்தைக்கு இந்தக் கூத்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பொறந்து நாலு மாசம் ஆகும் குழந்தையை யாராவது ஸ்கூல்ல சேர்ப்பாளா ? இன்னும் முகம் பார்க்கவே முழுசா ஆரம்பிக்கலை.

இப்பல்லாம் வயித்தில் இருக்கும் குழந்தைக்கே பாடம் சொல்லித் தர ஸ்கூல் இருக்கு தெரியுமா?

அந்தக் கண்றாவியெல்லாம் நமக்கெதுக்கு? யாரோ பைத்தியம் பிடிச்சவா பண்ணினா நம்மளும் பண்ணணமா ? குழந்தைக்கு செர்லாக் கரைத்துக் கொண்டே சொல்லும் சுபத்ராவைப் பார்த்து,

அதெல்லாம் ஒண்ணுமாகாதும்மா . கீட்ஸ் கண்டிப்பா இந்த ஸ்கூல்ல சேருவான். ஒரே வருஷத்தில் அத்தனையையும் கத்துப்பான்...நீங்களே பார்த்து அசந்து போயிடுவேள்.

கிரிதரனை நாங்க அஞ்சு வயசுல தான் ஸ்கூல்லயே சேர்த்தோம்...அவனுக்கு என்ன படிப்பா வரலை...? அவன் அப்பா பள்ளிக் கூடம் போன வயசென்ன தெரியுமா..? பத்தோ பன்னெண்டோ...அவர் என்ன வக்கீலாகலையா?

அது அந்தக் காலம்...நீங்க அந்தக் காலத்துலேயே இன்னும் இருந்தாக்கா நான் என்ன செய்றது? காலத்துக்கேத்தா மாதிரி மாறித் தானே ஆக வேண்டியிருக்கு.  கோபத்துடன் அடம் பிடிக்கும் கீட்ஸின் வாயில் செர்லாக்கைத் திணித்தபடியே சொன்னாள் பார்கவி.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னால் கேளு. காலம் ஒண்ணும் அப்படியே தலை கீழா மாறிப் போகலை. கொஞ்சம் மாடர்னா இருக்கு..ஒத்துக்கறேன்.கட்டினவனை வாங்கோ...போங்கோ..ன்னு கூப்பிடறதிலிருந்து வா..போ..ன்னு பேசறது வரைக்கும்...மத்தபடி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை.

நீங்க இந்த வீட்டுக்குள்ள இருந்துண்டு இவ்ளோ தான் மாற்றம்னு சொன்னா ஆச்சா?

இல்லையே...டீவி சீரியல்ல இப்பத் தான் கேட்டேன்..சரவணனை மீனாட்சி...வாடா...போடான்னு ஏலம் போடறாளே, அதை வெச்சுத் தான் சொல்றேன். ஏன்....நம்மாத்தில் நடக்கலையா?

இதைக் கேட்டதும், படக்கென்று குழந்தையை மடியிலிருந்து வாரியெடுத்து தோளில் சார்த்திக் கொண்டு கிண்ணங்களை தொப் தொப்பென்று கிட்சன் சிங்கில் போட்டு விட்டு விருட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறாள் பார்கவி.

ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்ளோ கோபமா? சிவ சிவா....! இந்தக் காலத்துப் பொண்களுக்கு பேருக்கு ஆம்படையான் பேரைப் பின்னாடி வாலாட்டமா எழுதறாப்பல.முன்னால கோபிஷ்டின்னு சேர்த்தாலும் தேவலை போலத் தோணறது.

டேய்...கிரி....நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சா? வெளில வாசல்ல போயிட்டு வந்தாலே கூடவே ஏதாவது பிரச்சனையையும் சேர்த்து வாங்கீண்டு வந்தால் நான் என்ன பண்ணுவேன் ? எல்லார் சௌகரியம்...நான் சொல்லியாச்சு...கேட்டால் கேளுங்கோ...கேக்காட்டா எப்படியோ ஆகட்டும்....அறுத்தவ சொல்லு அந்த அடுக்களை முட்டும் தான் எந்த அம்பலமும் ஏறாதுன்னு தெரியும்.....இருந்தும் நான் மாமியார் பவுசு காட்டறேன் பார்...என் புத்தியைச் சொல்லணம் ...அவாள்லாம் படிச்சவா....பல இடம் போறவா....வரவா......ம்ம்ம்ம்....டேய்...கிரி......பார்கவியை சாப்பிடக் கூப்பிடு. மத்தபடி அவளோட எந்த விஷயத்துலயும் நான் என் ஜலதோஷ மூக்கை நுழைக்கலை. சொல்லிக் கொண்டே வாஷ்பேசினை நோக்கிச் சென்று மூக்கைச் சீந்தி அலம்புகிறாள்.

ம்ம்மா....போகட்டும் .விடேன்...நீ வீணா இதுல தலையிடாதே. அவளுக்கு நம்ம கீட்ஸ் ரொம்ப சின்ன வயசிலயே நிறைய படிச்சுடணம்னு ஆசைப்படறா . நான் ஏற்கனவே சொல்லிப் பார்த்தாச்சு...உனக்குத் தான் அவ குணம் தெரியுமே. 

நல்ல குணம்..!தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ....!

கொஞ்சம் விட்டுப் பிடிச்சா சரியாயிடும்மா..!

என்ன...தும்ப விட்டு வாலைப் பிடிக்கச் சொல்றே? நான் விடறேன் நீ பிடிச்சுக்கோ. நீயாச்சு...உன் பொண்டாட்டியாச்சு. நானா சம்பாத்திக்கறேன்...நானா காசு கட்டப் போறேன்...?

அப்போ சும்மா இரேன்...!

எப்பவும் நான் சும்மா இருந்தா உங்களுக்கு சந்தோஷம் தானேப்பா.

ம்மா, பார்த்தியா கோச்சுக்கறே.

இப்பல்லாம் உங்க காட்ல மழை.....ஜமாயிங்கோ. நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்..? அந்தக் காலம் போலையா இந்தக் காலம்...அதான் இந்தக் காலத்துக்கு புதுசா கம்ப்யூட்டர் கொம்பு முளைச்சிருக்கே...!

இந்த ஒரு வார்த்தை பச்சைக் கொடியில் , பார்கவி 'கீட்ஸ்'ஸுக்கு அடுத்த நாளே அட்மிஷன் போட்டு விட்டாள். நம்ம கீட்ஸ் கிட்ட ஒரு போட்டோவை காண்பிக்க, அவன் எவ்வளவு உன்னிப்பா அதையே பார்த்துண்டு  இருந்தான் தெரியுமா..? 

ஏதோ பெரிய விஷயமாக அதைச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஆமா.....எல்லாம் சரி தான்..இதுக்கு அவாளுக்கு  எவ்வளவு தட்சணை எடுத்து வெச்சேள் ?

நாலு மாசத்திலேர்ந்து ஒரு வயசு வரைக்கும் இருபதாயிரம் ஃபீஸ். அதுக்கப்பறம் கூட பத்தாயிரம் ஆகுமாம்.

பேஷ்....பேஷ்...ரொம்ப நன்னாருக்கு....முகம் பார்க்க ஆரம்பிக்கிற குழந்தைக்கு என்னத்தை அப்படி சொல்லித் தந்துடுவா? அப்போ என் பேரன் ஐஸ்டின் மாதிரியோ இல்லாட்டா அப்துல் கலாம் மாதிரியோ வரப் போறானா?

இந்த நக்கல் தானேம்மா வேண்டாங்கறது...நிச்சயமா என்னை மாதிரியோ உங்க பிள்ளை மாதிரியோ இருக்க மாட்டான்...முகத்தில் பெருமை பொங்கச் சொன்னவள் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் .இவனும் ஏதாவது புதுசாக்  கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பான். அதுக்கு இப்பல்லாம் நிறைய ஆப்பர்ச்யூனிட்டி இருக்கு. இவாளுக்குத் தான் இனிமேல் நிறைய ஓபனிங்ஸ். அம்மா...இன்னைக்கு நிஜம்மா நீங்க இவனுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கோ...அப்டியே எனக்கும்...! என்று சொன்ன பார்கவியைப் பார்த்து,

அது சரி....! என்னமோடிம்மா ...உன் ஆசைக் கனவு ஜெயிச்சால்  நான் நல்ல மாமியார்...தான்..என்று கேலியாகச் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைகிறாள் சுபத்ரா.

என்னம்மா நீங்க...இதுக்குப் போயி அலட்டிகறேள். ஐம் சாரிம்மா.....கெஞ்சலான குரலில் ஐஸ் வைத்து சொல்வதைக் கேட்டதும் சுபத்ராவும் உருகித் தான் போனாள்.

  


காலச் சக்கரச் சுழற்சியில் பத்து வருடங்களை முழுங்கியிருந்தது. சுபத்ரா தெய்வமாகி சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்....மென் மேலும் பதவி உயர்வில் கிரி நேரமே இல்லாமல் தவித்தான். பார்கவி கூடிப்போன பத்து கிலோவை தன் உடம்பிலிருந்து கரைக்க அரும்பாடு பட்டு டயட்டில் தவித்துக்  கொண்டிருந்தாள். கீட்ஸ் மட்டும் பத்து வயது சிறுவனா அல்லது இருபது வயது வாலிபனா என்று அனைவரையும் சிந்திக்க வைத்தான்.

கீட்ஸ்...படிச்சுட்டியா...ஹோம் வொர்க் பண்ணியாச்சா?

ஓவர்....நத்திங் பெண்டிங். படிக்க ஒண்ணுமேயில்லை ...ஐம் கோயிங் டு  வாட்ச் மூவி நௌ .

மா....இட்ஸ் ஸோ போரிங் ...எனக்கு வெளில போகணும்....கார் சாவி தாயேன் ..ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்..

அய்யய்யோ வேண்டாம்டா ப்ளீஸ்....!

....ம்ம்ம்மா......ஐ கான்ட் டாலரேட் யூ .மாம்...நீங்க சும்மாயிருங்க ..எனக்கு இப்பவே காரை எடுத்துண்டு வெளில போகணும்...நான் போறேன்...பை....என்று துள்ளிக் குதித்து வெளியில் ஓடும் போது, பார்கவி ஆடித்தான் போவாள்.

ஒண்ணா....ரெண்டா....பத்து வயதுப் பையனுக்கு என்ன தோணுமோ, அதெல்லாம் அவனுக்கு மூணு வயசிலயே தெரிஞ்சு போன மாதிரியும், இப்போ அவன் ஒரு காலேஜ் படிக்கிற பையனைப் போல நடந்து கொள்ளும்போது மனசு கலங்கித் தான் போனது பார்கவிக்கு.

நாளாக நாளாக , இதுவே பெரிய தலைவலியாகிப் போனது அவளுக்கு.

டாட்....எனக்கு ஐ போன், வேணும்....ப்ளூ ரே கேம் சிடீஸ் வாங்கிக்கறேன்...ஒரு டென் தௌசண்ட் செக் எழுதுங்கோ. 

இவன் பார்க்கும் தோரணையில், கிரியின் கை,  தானாக செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடும். 

டாட்...எனக்கும் ஒரு பேங்க் அக்கௌண்ட், கிரெடிட் கார்ட் எல்லாம் வேணும்..ப்ளீஸ் டூ இட். ஒரு பெரிய பிஸ்னெஸ் பண்ணப் போறேன்....கேமிங்....!

போச்சுடா...! ரெண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொள்வார்.

ஸ்கூல் டீச்சர் தினசரி போன் செய்து, உங்க சன் கீட்ஸ் மத்த பசங்களைக் கெடுக்கிறான்....பர்ஸ்ட் ரேங்க் மட்டும் வாங்கினாப் போதாது...மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது..அவனுக்கு நாங்க டபிள் ப்ரமோட் பண்ணி வேற கிளாஸ்ல போடலாம்னு யோசிக்கறோம்..ஹி இஸ் ஓவர் ஸ்மார்ட்...வெரி வெரி இன்டெல்லிஜென்ட். அதான்...என்று தயங்க.

பெருமை ஒரு பக்கம் இருந்தாலும்.....இது எங்கே கொண்டு விடுமோ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பயந்து கொண்டே இருந்தாள் பார்கவி. 

ஒரு நாள் அவள் பயந்தது கூட நடந்தது.

டபிள் பிரமோஷனில் இன்னும் துளிர் விட்டுப் போனது கீட்ஸ்ஸுக்கு. தன்னுடன் படிக்கும் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போக, மைனர் பெண்ணின் கவனத்தைச் சிதறல் செய்கிறான் என்று அவர்கள் வீட்டிலிருந்து நாலு பேர்கள் இவர்கள் வீட்டை முற்றுகையிட்டு எச்சரித்து விட்டுப் போகையில், பார்கவிக்கும், கிரிக்கும்...கீட்ஸ்ஸுக்குமிடையே பூகம்பமே வெடித்தது.

கடைசியில் இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பார்கவி நீ ?  நீ நினைச்சது ஒண்ணு ...நடக்கறது ஒண்ணாச்சே....ஆரம்பத்தில் அம்மா சொன்னதைக் கேட்டிருந்தால்...இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ.?

கற்றுக்கொள்ளும் வயதில் அத்தனையும் தெரிந்து விட்ட நிலையில் அடுத்தது என்ன என்ற தேடலின் உச்சியில் இருந்தாலும் அங்கு அவனுக்கென்று ஒன்றுமே இல்லாதது போலவும்...உலகப் பாடத்தில் கற்றுக் கொள்ளவென்று எதுவுமே தனக்கு இல்லை என்றும் உணர்வுகளோடு நடந்தான்  கீட்ஸ்.

எப்போதும் எல்லோரையும் பார்க்கும் போதும் தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்து விடுகிறது என்ற ஆளுமையும் அதிகார உணர்வும் மேலோங்கிய  அவனை யார் கண்டாலும் 'திமிர் பிடித்தவன்' பெரிய கர்வம் பிடிச்சவன்....என்றெல்லாம்  பட்டம் கொடுத்து கேலி பேசுவார்கள். இவன் வருவதையும் தவிர்ப்பார்கள்.

பட்டமும், கேடயமும், பரிசுக் கோப்பைகளும் ஒரு புறம் நிரம்பி வழிந்தாலும்...அதைத் தரை மட்டமாக்கும் நிகழ்வுகளும் கூடவே நடக்கத் தொடங்கி அவனை நிலை குலைய வைத்தது.

அது கோபமாக வெளியேறத் துவங்கிய போது பார்கவிக்கும் கிரிக்கும் பிள்ளைப் பாசத்தைக் கடந்து 'இவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது கடினம் என்று தோன்றியது'.

பார்...இப்பப் பார்....! எவ்ளோ சொன்னேன்...அப்பவே சொன்னேன்...இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு. உலகத்தோட ஒத்துப் போகத் தெரியாமல் உன்னோட பேராசைக்கு நம்ம பையனை பலியாடாக ஆக்கி வைச்சுட்டியே..

டாக்டரே சொல்லிட்டார். அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இன்ஃ பாக்ட் சின்னக் குழந்தையா இருக்கும்போதே அவன் படு சுட்டி..ஹைபர் ஆக்டிவ் சைல்ட். தெரிஞ்சுக்கோ. வாட்ஸ் நெக்ஸ்ட்....! இது இப்ப அவனை மனசுக்குள் ரொம்பப் படுத்தறதுன்னு நினைக்கறேன். 

அவனை ஒரு சைக்கியார்டிஸ்ட்ட அழைச்சிண்டு போனால் எல்லாம் சரியாய்டும். பார்கவி சமாதானப் படுத்தினாள் .

இப்பத் தானே பதினைந்து வயசாறது. அதுக்குள்ளே எங்க வந்து நிக்க வெச்சுட்டான் பாரேன் ? பார்.கிரி புலம்பிக் கொண்டிருந்தான்..எல்லாம் உன்னால...வந்த வினை.

அதே சமயம் அவனைப் பாராட்டு கிரி.....அவன் ஷேர் ட்ரேட் பண்றான்....ரியல் எஸ்டேட்ல என் பேர்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கான். லேப்டாப் ரிப்பேர் பண்றான்...கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்றான்...இதெல்லாம் அவனோட பிளஸ்...தெரியுமா?
வி ஷுட் கவுண்ட் ஹிஸ் குட் திங்க்ஸ் டூ...! எவ்ளோ அட்வான்ஸ்டா திங் பண்றான்.

அவனுக்கு எது வேணும் எது வேண்டாம்னு நம்மால சிந்திக்க முடியலை. நம்ம நினைக்கறது எல்லாமே அவனுக்கு அவுட் டேட்டட்டா இருக்கு. இப்பவாவது உனக்கு புரியறதா? என்னால நிம்மதியா இருக்க முடியலை பார்.

இதெல்லாம் ரொம்ப காமன் தான்...கிரி. நாம தான் இன்னும் கொஞ்சம் அவனுக்கேத்தா மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

நாம பண்ணிக்கலாம்....வெளி உலகம் பண்ணிக்குமா? போடா சர்தான்னு சொல்லிட்டுப் போகும். எல்லாத்துலயும் நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு இருந்தா, ஹௌ எனி ஒன் வில் டாலரேட் திஸ்.? இப்பக் கூட ஒரு நல்ல ஃப்ரெண்ட் இல்லை அவனுக்கு.

நீ சொல்றாப்பல லாப்டாப், கம்ப்யூட்டர், ன்னு எல்லாத்தையும் பிரிச்சு மேயறான்...சரி தான். அதே நேரம் அவனுக்குக் கோபம்  வந்தால் அதே கம்ப்யூட்டரைத் தூக்கிப் போட்டு உடைக்கிறானே. கேட்டது கிடைக்கலைன்னு தெரிஞ்சா  சுவத்துல ஓங்கி குத்தி தன் கையைத் தானே காயப் படுத்திக்கறானே....எல்லாம் அவனுக்கு சாதகமா நடக்கணும்னு யோசிக்கறானே இதெல்லாம் தப்பில்லையா ?  அஃப் கோர்ஸ்....அது ஜெனெடிக்னு வெச்சிக்கலாம்.

கோபத்தில் தன் கையிலிருந்த காப்பி டம்ப்ளரைத் தூக்கி எறிகிறாள் பார்கவி.

இத...இத....இதத் தான் சொன்னேன்...என்று கிரி சொல்லவும் 

பார்கவி 'ஓ' வென தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.

சரி...சரி....ஸாரி ...அழாதே...நீ மட்டும் என்ன செய்வே.?..நாளைக்கு டாக்டர்கிட்ட  போகலாம். அப்பாயின்ட்மென்ட் வாங்கிடறேன் சரியா...அவளை சமாதானப் படுத்தி விட்டுப் படுத்துக் கண்களை மூடிக் கொள்கிறார் கிரிதரன். வழக்கம் போலவே தூக்கம் அவருக்கு 'டா டா...பை பை ' சொல்லிக்கொண்டு ஓடியது. எத்தனை இரவுகள் தூக்கம் போயிருக்கும்..? தூக்கம் மட்டுமா...அப்படியே தலையைத் தடவிப் பார்க்கும் போது மொழு மொழுவென்று வழுக்கைத் தலையில் விரல்கள் வழுக்குகிறது.




அடுத்த நாள் இரவு...!

என்னங்க மேடம் இது...இதுக்குப் போயா உங்க பையனுக்கு கவுன்சிலிங் பண்ண அழைச்சிட்டு  வந்தீங்க. தயவுசெய்து உங்க வீணான கவலையை விட்டுத் தள்ளுங்க.  நான் அவன்கிட்ட தனியாப் பேசிப் பார்த்த பிறகு தான் இதைச் சொல்றேன்....உங்க சன் செம ஸ்மார்ட். மூளைதான்  அவனோட மூலதனம். எங்க போனாலும் பின்னிப் பெடலெடுப்பான் . டோன்ட் வொர்ரி. என்ஜினீயரிங் சேர்த்து விடுங்க...கோல்ட் மெடல அள்ளிட்டு வந்திடுவான். அப்பப்பப்பப்பா....எதைக் கேட்டாலும் டக்கு டக்குன்னு நெத்தியடியா பதில் சொல்ற பிள்ளைய கைல வெச்சிட்டு நீங்க கலங்கினா...ஐம் சாரி....உங்களைத் தான் பார்க்கறவங்க தப்பு சொல்லுவாங்க...சம்திங் ராங்ன்னு...! இப்ப இருக்குற காலத்துக்கு இவ்ளோ ஸ்பீட் ரொம்ப ரொம்ப அவசியம். உங்களுக்கு இப்பப் புரியாது. போகப் போகப் பாருங்க..!

டாக்டர் சொல்லியனுப்பியத்தை நினைத்துக் கொண்டே கண்களை வெறுமனே மூடியபடி படுத்திருந்தாள் பார்கவி.

நிம்மதியா தூங்குவதா.....? இவ்வளவு இண்டெலிஜெண்ட் கீட்ஸ்ஸுக்கு ஏன் அடிக்கடி விரக்தி வருகிறது...? கோபம் வருகிறது?
வீட்டிலும் இருக்கப் பிடிப்பதில்லை.....பள்ளியில் இருக்கவும் பிடிப்பதில்லை.....மனம் அமைதியில்லாமல் அலைபாய்கிறது.
எங்க போனாலும் தனக்கு மிஞ்சியவர் யாருமே இல்லைங்கற ஒரே எண்ணத்தில் தானே நுழைகிறான். அவனுக்குள் இருக்கும் சுபீரியர் தாட்ஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். அவன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்னு நினைச்சால்..பேசவே விட மாட்டேங்கறான். என்னன்னு சொல்லறது..?

நாட்களும் வாரங்களும் மாதங்களுமாக ஓடி வருடங்களைக் கடத்திச் சென்றன.

மனசுக்குள் புகுந்து கொண்டு இறங்க மறுத்த வருத்தம் பார்கவியின் வயதை இருபது வருடங்கள் கூட்டியது.சுகரும், இரத்த அழுத்தமும்  கூட துணைக்கு வந்து அவளுடன் கைத்தடி போலச் சேர்ந்து கொண்டது.

பாதி நாட்கள் வீட்டுக்கே வராமல், படிப்பையும் முடிக்காமல்  கீட்ஸ், இமயமலை வரைக்கும் சென்று வந்து...மாம்....ஐ லைக் ஒன்லி ஹில்ஸ்...அதும் ஹிமாச்சல் ..நான் அங்கயே கூட போய் இருந்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.....கீட்ஸ் இதைச் சொன்னதும், அவள் தலையில் இமயமலையையே  ஏற்றி வைத்தது போலிருந்தது பார்கவிக்கு.

என்னடா சொல்றே....கீட்ஸ்..? உனக்கு இப்பத்தான் முப்பது வயசாகுது....ஒரு கல்யாணம் காட்சி செய்யாமல்...குடும்பம்னு ஒண்ணு இருந்தால் இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் வராது...! வாழ வேண்டிய வயசில் நீ இப்படிச் சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை.

மாம்....டாட்...நீங்க தான் நான் இன்னும் சின்ன வயசா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..பட் ....எனக்கு இந்த மெட்டீரியல் வேர்ல்ட்ல எதுவும் பெரிசா இருக்கறதாத் தெரியலை. ஐ ஹேட் எவெரிதிங். ப்ளீஸ் லீவ் மீ அலோன். ஐ கான்ட் ஸ்டே எனிமோர் ஹியர்.
ஐ நீட் பீஸ்....அமைதி மட்டும் தான் நிரந்தரம்...அது தான் எனக்கு வேணும்.இந்த உலகம் ரொம்ப ஸ்லோ...அதனால தான் ஒரு அமைதியான இடத்தில் என்னை அமைதியாக்கிக்க பழகிக்கப் போறேன்..ஏன்னா எனக்கு இந்த மைண்ட் ஸ்பீட் பிடிக்கலை.

இதைக் கேட்டு அதிர்ந்தே போனாள்  பார்கவி. அவள் தலை தானாகக் குனிந்தது. கிரிதரன் விழிகளில் கண்ணீர் நிறைந்த பார்வை  அவனது அம்மாவின் படத்தின் மேல் விழுந்தது. 

இந்த வார்த்தை தான் அவர்களை பெற்றவர்களாக அழைத்து  மதித்து அவன் பேசிய கடைசி பேச்சு. அன்று தான் கீட்ஸை அவர்கள் கடைசியாகப் பார்ப்பது என்பதை  அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மகன் கிளம்பிப் போய் வீடு வெறிச்சென்று சூனியம் பிடித்தாற்போலிருந்தது. ஒரே நாளில் அனைத்தையும் இழந்த செல்வந்தரின் நிலை போல உணர்ந்த இருவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்துவது போல ஒரு அழைப்பு மணி அடித்தது.

மீண்டும் மகன் வந்து விட்டானோ....? ஓடிச்சென்று கதவைத் திறந்த பார்கவியால் நம்ப முடியவில்லை..

அங்கு, கையில் ஆறு மாதக் குழந்தையுடன் அழகானப்  பெண்றொருத்தி  " ஐ ம் தீட்சா...திஸ் இஸ் கீட்ஸ்'ஸ் சன்..."  சொல்லிக் கொண்டே பார்கவியைத் கடந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------