ஞாயிறு, 31 மார்ச், 2013

1990's ஆஷீக்கி


கலியுகத் தாயின் கீதா உபதேசம்..!



காலேஜுக்குள் நுழைந்ததும்  காலேஜ் பிரின்சிபால்  வேதவல்லிக்கு கிலி பிடித்துக் கொண்டது. அதற்கேற்றார்போல அவளது அலுவலக அறை வாசலில் மாணவர்கள்  'கச முச ' வென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.. போச்சுடா ...!இன்னைக்கு என்ன பிரச்சனையை சந்திக்க வேண்டி வருமோ? என்று நினைத்த போதே லேசாகத் தலை வலிக்க ஆரம்பித்தது  வேதாவுக்கு. 

இவள் வருவதைக் கண்ட மாணவர்கள், நிசப்தமாகி அப்படியே லேசான தயக்கத்துடன்..."மேடம்.. ஒரு பெட்டிஷன்" என்று நீட்டவும்.

என்ன விஷயம்...? சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டே மாணவர்களைப் பார்க்கிறாள்.
 
இந்த இலங்கைத் தமிழ் பிரச்சனையை முன்னிட்டு நாங்க இன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப் போகிறோம்...மேடம்...நம்ம காலேஜ் வாசல்ல...அதான்.

ம்ம்ம்...நீங்கள்ளாம்  "ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள்..  நீங்கள் அடுத்த வருஷம் பல மாணவரை மேய்க்கப் போகிறவர்.." இதிலெல்லாம் நீங்கள் தலையிடுவது சரியில்லை. நான் பிறப்பதற்கும் முன்னாடி ஆரம்பித்த இந்த இலங்கைப் போராட்டம் உங்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தால் தீர்ந்து விடாது.மேலும்....என் பேச்சை மீறி ஏதாவது போராட்டத்தில் ஈடுபட்டால்...அடுத்த மாதம் பரீட்சை வருது நினைவு இருக்குல்ல.. உண்ணா விரதத்தில் யாரெல்லாம் போராட்டம் செய்வாரோ அவர்களுக்கு

நான்  ஹால் டிக்கெட் தர மாட்டேன்...பி கேர்ஃ புல் ..என்று லேசாக சிரித்தபடியே .எல்லாரும் அவங்கவங்க கிளாஸ் ரூமுக்குப் போங்க...! ஸ்ட்ரைக் எல்லாம் ஒண்ணும் கிடையாது....இதைச்   சொல்லிவிட்டு தன்  வேலையில் மும்முரமாவதைக் கண்ட மாணவர்கள் தயங்கித் தயங்கி  கலைந்து செல்கிறார்கள்.வேதாவுக்கு மூச்சு வந்தது.

அப்போது அவள் மனம் வேறு கல்லூரியில் படிக்கும் அவளது  மகன் ஆனந்தை நினைத்தது. அவனும் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறான். அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்திற்காக கல்லூரி மூடப்படும். பத்து நாள் கல்லூரிப் பாடங்கள் நடக்கும்,  பிறகு ஒரு வாரம் மூடிக் கிடக்கும்.  ஏதாவது போராட்டம் நடந்து  கொண்டே கல்லூரி முடங்கும்.. நிலத்தின் மேல் கடன் வாங்கி, இவனுக்கு 40,000 ரூபாய் கப்பம் கட்டி கல்லூரியில் சேர்த்திருக்கு. .இன்று என்னாச்சோ..? நினைத்துக் கொண்டே கைபேசியை எடுத்து அவனைத் தொடர்பு கொள்ள முயன்றாள் .

"நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்.."

பழையபடி அதே வசனம்.....கேட்டுக் கேட்டு அலுத்துப் போயாச்சு....ஆனந்த்..எப்போடா தொடர்பு எல்லைக்கு உள்ளே வருவே...?.என்று மனம் தவியாய்த் தவித்தது. மகனை.அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஆனந்திடம் இருந்து அழைப்பு "அதில் காலேஜ் காலவரையறையின்றி மூடியாச்சு..ஏதோ இலங்கைப் பிரச்சனையாம்.!.அம்மா நான் வீட்டுக்கு வர லேட்டாகும்.!


அட கடவுளே !.....நீ ஏண்டா இதிலெல்லாம் தலையிடறே.? இதுக்கா உன்னை காலேஜுக்கு சேர்ந்திருக்கு?...நீ பத்திரமா  வீடு வந்து சேரு...வேதவல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப் படுகிறது. ஆனந்த் காலேஜை விட்டு நல்லபடியா வீடு வந்து சேரணுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே கைபேசியை அணைக்கிறாள்.

வேதவல்லிக்கு அன்று காலேஜில் இருப்புக் கொள்ளாத நிலை..தானும் காலேஜுக்கு விடுப்பு அறிவித்துவிட்டு வீடு வந்து சேருகிறாள். ஆனந்த் இன்னும் வரவில்லையே என்ற கவலை மனம் முழுதும் பரவ...நாமே ஒரு தடவை அவனது காலேஜுக்குச் சென்று பார்த்துவிட்டு அப்படியே அவனையும் கையோட  அழைத்து வந்து விடலாம் என்று ஒரு துணிச்சல் தோன்றவும் தனது காரைக் கிளப்பிக் கொண்டு மகனின் காலேஜை நோக்கிப் புறப்படுகிறாள்.

வழியெல்லாம் பெட்டிக்கடை முன்பு அன்றைய செய்தித் தாளின் தலையங்கச் செய்தியாக  "மாணவர் உண்ணாவிரதப் போராட்டம்" முழுக் கடையடைப்பு" அனைத்துக் கல்லூரியும் காலவரையறையின்றி மூடல் " என்று கொட்டை கொட்டையாக எழுதி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது...கூடவே.... வழக்கம் போல "மாணவர்கள் பலி"  "சிறுமி பலாத்காரம்" "மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு  அரை பவுன் திருட்டு" என்றெல்லாம் தமிழ் நாட்டின் மானத்தை தொங்க விட்டு அது காற்றில்  பறந்து கொண்டிருந்தது.
ஆனாலும் இந்த  அரசியல் விஷயத்துல கல்லூரி மாணவர்களைத் தூண்டி விடுவது சமூகக் குற்றம். இதை நாம சும்மா விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டே காலேஜ் வரை வந்து சேர்ந்தாள் வேதவல்லி. வாசலில் பெரிய பானர் கட்டி....அதன் கீழே கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் என்று அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும்....இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்? யாரோ சொன்னதும் அப்படியே செய்யத் தான் தெரியும் ..ஏன் எதற்கு என்ற கேள்வி கூட கேட்க தோன்றாதோ? அந்தக் கூட்டத்தின் நடுவே ஆனந்தும்  அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதும்..."தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல உள்ளுக்குள் துடித்துப் போனாள் வேதவல்லி.

இத்தனை வருஷத்தில் ஒரு நாளாவது அவனை நாம் பட்டினி போட்டிருப்போமா? ...இப்போப் பாரேன்..நிலைமையை. என்று  நம்ப முடியாதவளாக...திகைத்தாள் .

கூட்டத்தில் மைக்கில் யாரோ பேச ஆரம்பிக்கிறார்கள்.அதில் ஏதோ அரசியல் கட்சி முன்னோடியாக இருப்பது மட்டும் புரிகிறது. "போராடுவோம்...நீதி கிடைக்கும் வரை போராடுவோம்...இல்லையேல் ஆயுதத்தைக் கையிலடுப்போம் ...மாணவர்களின் சக்தி சுனாமியைப் போன்றது....நீதி கேட்கப் புறப்பட்டு விட்டோம் இனி தயங்க மாட்டோம்... இறுதிவரை உண்ணாவிரதமிருந்து போராடி ஜெயிப்போம்......"இலங்கையில் நீதி கிடைக்கத் தனிப்பட்ட சர்வதேச விசாரணை அவசியம்"  குரல் கொடுக்க இங்கிருந்தே எங்கள் படை..அதிரும்...மாணவர்களின் கடல் போன்ற அணி திரட்டு.." என்று பேசிக் கொண்டே போகிறார் அவர்.

இன்னோரு மாணவனின் முதிராத குரல்  "கைது செய்..கைது செய்....ராஜபாச்சை கைது செய்.." என்று கத்த முயற்சி செய்து கொண்டிருந்தது.

இதைக் கேட்ட வேதவல்லிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.....'ஒரு பெயரைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை...பாச்சை...பல்லி ...பெருச்சாளின்னு '...சின்னப் பசங்களை வைத்துக் கொண்டு பெரிய விளையாட்டு விளையாடுறாங்க....!
சும்மா இருக்குற சங்கை எப்படி ஊதி ஊதி ஊரைக் கூட்டறான் பாரேன்..இந்த மாதிரிப் பேச்சாலத் தான் நாடே கெட்டு நாசமாப் போச்சு. இப்போ படிச்சிட்டிருக்கிற பசங்களைத் தூண்டி விட்டு மாணவர்கள் என்றாலே என்னவோ அராஜகம் செய்ய அத்தனைத் தகுதியும் ரெடிமேடா இருக்கிறாப்பல அல்லவா  இருக்கு இவங்க  சொல்றது. பெத்த வயிறு பத்திண்டு எரியறது.எத்தனை மாணவர்கள்...!

அவா அவா  வாயைக் கட்டி வயித்தைக் கட்டி., வீட்டை, நகைகளை அடமானம் வைத்து , கடனை வாங்கி ..லட்ச லட்சமா பணத்தைக் கொட்டி காலேஜ் காலேஜா பார்த்து அலைஞ்சு திரிஞ்சு கொண்டு வந்து சேர்த்தா....படிச்சு முடிச்சுட்டு குழந்தைகள் வெளில நல்ல படியா வந்து ஒரு வேலையில்  உட்காரும்...நாம, பெத்தவா கொஞ்சம் மூச்சு விடலாம்னு நினைச்சா...இதென்னடா வம்பாப் போச்சு.? அரசியல்ல இவங்களைக் கோத்து விட்டு குளிர் காயும்  கையாலாகாத் தனம்..

வேதவல்லியால்  இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவளுக்குள் எழுந்த நெருப்புப் பொறி இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க தன்னாலும் முடியும் என்ற முடிவோடு...அங்கு பேசிக் கொண்டிருந்தவரிடம் சென்று...."ஐயா....கொஞ்சம் அந்த மைக்கைத் தரீங்களா.....இத்தனை நேரம் நீங்க பேசினீங்க.....நாங்க கேட்டோம்...இப்போ நாங்க....சமுதாயம்...தாய்க்குலம்  பேசப் போகுது....கொஞ்சம் நீங்களும்..இங்க கூடியிருக்கும் மாணவர்களும் கேட்க வேண்டும்...என்று கணீரென்று சொல்லியபடியே மைக்கை கைப் பற்றுகிறாள்...

என்ன தான் பேசப் போறாங்க.என்ற ஆவலில் மைக் கைமாறுகிறது. கூட்டத்திலும் அமைதி நிலவுகிறது...அருகில் போலீஸ் இருக்கும் பாதுகாப்பும்  , இந்தக்  கூட்டத்தில் ஆனந்த் இருக்கிறான் என்ற தைரியமும் ஒன்று சேர..தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள் வேதவல்லி..அவளது குரல் கணீரென்று ஆலயமணி போல அங்கங்கு வைத்திருக்கும் அத்தனை குழல் பெருக்கி வழியாக சென்று கொண்டே ஒவ்வொருவரின் இதயத்தையும் தொடத் தயாராகிறது.



"அன்பான மாணவர்களே...! "

நான் ஒரு தாயாக உங்கள் முன் பேசுகிறேன்.  உங்கள் மீதுள்ள பேரன்பால் பேசுகிறேன்.  

உங்கள் சக்தி  மாபெரும் சக்தி எண்ணிக்கை அளவில்.  அதை அரசியவாதிகள் நன்கு அறிவர் !  ஆனால் படிக்கிற காலத்தில் அதை ஆக்க சக்தியாக உங்களின் சுய முன்னேற்றத்திற்கு நீங்கள் உபயோகப் படுத்துங்கள்.  அரசியல்வாதிகள் அதை அழிவு சக்தியாக திருப்பப் பார்க்கிறார்

ஒரு சிறிய பிரச்சனையை ஒன்றுமில்லாமல் செய்ய அதைவிடப் பெரிய பிரச்சனையால் தான் முடியும். அது போலத் தான் இப்போது உங்களைத் யாரோ தூண்டி விட்டு பரீட்சைகள் நெருங்கும் இந்த நேரத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு இப்படி சமுதாயச் சிக்கலில் உங்களை மாட்டி வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

இதில் கலந்து கொண்டால் தற்காலிகமாக நீங்கள் உங்கள் ப்ராஜெக்ட் வொர்க், லேப்,டெஸ்ட்,,ரெகார்ட் வொர்க்,இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற  எண்ணம் மட்டும் உங்களுக்கு இருக்கும். அதையும் தாண்டி கல்லூரி  விடுமுறை.....காலவரையற்ற விடுமுறை...! இதில் யாருக்கு என்ன லாபம்.?.விடுமுறை உங்களுக்கு என்ன சுகம் தந்தது..? வேகாத வெயிலில் பசி என்றால் என்ன என்று தெரியாத நீங்கள் எல்லாரும் இப்போது உண்ணாவிரதம் என்ற பேரில் பசியோடு உலர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதனால் அரசியலில் அல்லது நாட்டில் எந்தப் பிரச்சனையும் தீர்ந்து விடப் போவதில்லை.

நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே எரிந்து கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனையும் இது வரையில் அப்படியேதான் இருக்கிறது அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் அது அரசியல் சட்டத்தால் மட்டும் தான் முடியுமே தவிர....உங்களின் கொந்தளிப்பால் இயலாது...என்று மனசுக்குள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் இப்போது  வாழ்க்கையில் பொறுப்பேற்கும்  தருணத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு அரசியல் வில்லுக்கு அம்பாகி அழிந்து போக வேண்டிய நிர்பந்தம் உங்களுக்குத் திணிக்கப் படுவது அநியாயம்.

யார் கல்லூரி மாணவர்களைப் பகடைக் காயாக்கி குளிர் காய்கிறார்களோ அதே மாணவர்களைக் காக்கும் பொறுப்பு உங்களைப் பெற்ற தாய்மார்கள் எங்களுக்கும் உண்டு. நம்  பிள்ளைகளுக்கு ஒன்று என்றால்..ஒரு இழப்பு வந்து விட்டால் அந்த இழப்பும் வலியும் நமக்குத் தானே? ..அது நேராமல் நம் பிள்ளைகளைக் காப்பாற்றுவது எங்களது கடமை.அதற்கு ஒரே தீர்வு....பெற்ற பிள்ளைகளைக் காக்கும்

பொருட்டு தாய்மார்களாகிய நாமும்  அவர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்போம்...வாருங்கள்...திரளுங்கள்...ஒன்று கூடுங்கள்...சமூகம் என்பது நாம் தானே..?

மாணவர்களே...! நீங்கள் வருங்காலத்தில் குடும்பத்தைத்  தாங்கும் தூண்கள்...! உங்களை  ஓட்டுக்கும், நாட்டுக்கும் ஏவுகணைகளாக ஆக்க விடாதீர்கள் ! உங்களை ஏவி விட்டு ஆதாயம் தேடும் அனுபவசாலிகளை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

மாணவர்களே..! அரசியல் தலைவர்கள் சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டு கட் அவுட்டில் நிற்க, படித்து வேலைக்குப் போய் உங்கள் வாழ்கையை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள பொறுப்பை மறந்து தேவையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸ் காரர்களின் கையிலிருக்கும் லத்திக்கு இரையாகாதீர்கள் .

ஏற்கனவே உங்களை சினிமா மோகமும்...ஹீரோக்களின் ஆதிக்கமும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. இப்போது அரசியல் தூண்டிலுகுள்ளும் புழுவாக உங்களையே மாட்டி வேடிக்கை பார்க்கும் போது உங்களை  பெற்ற எங்களால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க  முடியவில்லை..!

கல்லூரிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவ மாணவியின்  உயிரும் உத்தரவாதமின்றி அராஜகத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட அவலநிலை உருவாகிக் கொண்டு வரும் வேளை இது..! இதிலிருந்து பொறுப்பையோ பாதுகாப்பையோ அந்த நிறுவனங்கள் ஏற்காத போது  நாமாவது கவனிக்க வேண்டாமா?  தயவுசெய்து  அரசியலுள் கல்லூரி மாணவர்களை நுழைக்காதீர்கள். வேரிலே விஷத்தைக் கலந்தது போதும் இப்போது வித்திலும் விஷத்தை ஏற்றாதீர்கள். நாளைய இந்தியா இவர்கள் கையில்...கலப்படமில்லாமல் காக்கப் படட்டும்.. இவர்கள் காணும் உலகம் புதிது. ஆதலால் மாணவர்களே...முதலில் படித்துப் பட்டம் பெற்று வெற்றியோடு....

வேதவல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே,.உண்மை சூடேறி ஆவி பறக்க ஆரம்பித்தது...!  

என்னய்யா...இது நீ பாட்டுக்கு அந்தம்மா கையில் மைக்கை கொடுத்துட்டு வாயைப் பார்த்துட்டு நிக்கிறீங்க ..அந்தம்மா நமக்கு எதிரால்ல பேசிட்டு இருக்கு...போயி மைக்கைப் பிடுங்குங்கப்பு....! கூட்டத்தில் இருந்து ஒரு குரல்.

அட...இருல்ல ...எம்மாந்தூரம் போகுதுன்னு பார்ப்பம். அங்கிட்டு காலேஜு பசங்க வேற.. பப்ளிக் கூட்டத்தைப் பார்தீல்ல...இப்ப எங்கிட்டிருந்து மைக்கைப் புடுங்குறது....அத்த நீ செய்யலாமுல்ல ...பெரீசா சொல்ல வந்துட்டியா.? மைக்கைக் கொடுத்தவன் தவிக்கிறான்.

இவரு என்ன இப்படிப் பேசுறாரு...இத்த நம்ம தலைவரு கேட்டா உனக்கு சங்கு தாண்டி...! என்று சொல்லிக் கொண்டே நகரந்தான் அவன்.

தலைவா....பார்த்துப் போ...கோளாறா .....எதுனா செஞ்சு வெச்சுப்புடாதே...மொதலுக்கே மோசம் போயிருவோம்....என்று மைக்கை வாங்கப் பரபரத்தவர்....திரும்பிப் பார்க்கும் தருணத்தில்..!


சர மாரியாக கருங்கற்கள்  பேசிக் கொண்டிருக்கும் வேதவல்லியின்  தலையைப் குறி பார்த்து வந்து விழுகிறது.

எதிர்பாராத தாக்குதலால் அப்படியே ரத்தம் வழிந்தோட  மயங்கிச் சரிந்தவளை பார்த்து ஓடோடி வருகிறான் ஆனந்த்.

ஐயோ....அம்மா...! என் அம்மா மேலே எவண்டா கல்லெறிஞ்சது ? ஆக்ரோஷத்தோடு கேட்டுக் கொண்டே ரத்தம் பீறிட்டு  வழிந்து கொண்டு மயங்கிக் கிடக்கும் அன்னையைத் தாங்கிய ஆனந்தை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கூட்டம்....திரண்டு.....என்னது  ஆனந்தோட அம்மாவா? என்று பரபரப்போடு செயல் படுகிறார்கள்.

கூட்டத்தில்   "மாணவன் கல்லெறிந்து மகளிர் காயம்.." என்று யாரோ பத்திரிகைக்குச் தலைப்புச் செய்தி தந்து கொண்டிருந்தார்கள்.

என்னாது? மாணவன் கல்லெறிந்தானா ..? நல்லாருக்கு நியாயம்....நாம எங்கடா இத்தச் செஞ்சோம்...?

நியாயம் சொன்ன ஆனந்தோட அம்மாவைத் தூக்கப் பார்த்தாங்கடா..... இந்த விஷயம் காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்தது.

அதற்குள் ஆம்புலன்ஸ் வரவும் , அதில் வேதவல்லியை ஏற்றிக் கொண்டு ,ஆனந்தும் தோழர்களும் மருத்துவமனை நோக்கிப் பறக்கிறார்கள்.

"ஆனந்தின் அம்மாவை" அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட விஷயம் அறிந்து அப்பல்லோ மருத்துவமனையின் முன்பு மாணவர்களின் கூட்டம் அலைமோதியது.

ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கடா...நம்ம அம்மாவும் இப்படித் தானே?  நம்மளுக்கு இது மாதிரி ஏதாச்சும் ஒண்ணு ஆகி போச்சுனா இப்ப நாம துடிக்கிறாப்பல தானே துடிப்பாங்க.! அவங்க பேசினது  தான் நிஜம். மாணவர்களின் மனங்கள் மருத்துவமனை நோக்கித் திரும்பியது.

அதற்குள் பி.எட்.கல்லூரி முதல்வர் வேதவல்லியை கல்லால் அடித்துத் தாக்கிய கல்லூரி  மாணவர்களை  கைது செய்யும்படி வந்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க வந்திருக்கிறோம் என்று மருத்துவமனைக்குள் நுழைந்தனர் போலீஸ் அதிகாரிகள்.

 வேதவல்லி கண்விழிக்கக் காத்திருந்த அவர்கள் அவசர பிரிவின் கதவருகில் பொறுமையின்றி காத்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

அதிர்விலிருந்து விழித்த வேதவல்லி....அருகில் ஆனந்தனைப் பார்த்ததும் மெல்ல நினைவு வந்தவளாக   அவனையே பார்க்கிறாள்.

தலையில் கட்டுகளோடு தன்  அம்மாவைப் பார்க்க அவன் கண்கள் கலங்குகிறது. தண்ணீர் தண்ணீர் என்று சைகை செய்ததைப் புரிந்து கொண்டு ஆனந்த் மெல்ல மெல்ல தண்ணீரை தனது தாயின் வாயில் ஊற்றுகிறான் அருகில் நின்று கொண்டிருந்த அவனது தோழர்களும் தலை குனிகிறார்கள்.

நியாயம் தராசில் கனமாக நிற்கத் தொடங்கியது.


வேதவல்லி விழித்துக் கொண்ட செய்தி கேட்டதும், போலீஸ் அதிகாரி ஒருவர் நேரில் வந்து...."ரொம்ப சாரி மேடம்....நீங்க ரெஸ்ட் எடுங்கள். பிறகு ஒரு புகார்க் கடிதம் கொடுங்கள். ...நாங்க அந்த மாணவர்களை கைது செய்வோம்....அவங்களை முட்டிக்கி முட்டி தட்டினாத் தான் உருப்படுவாங்க...." என்று ஒரு தோரணையில் சொல்ல ஆரம்பிக்கிறார்.

ஐயா...பழிக்குப் பழி...கண்ணுக்குக் கண் என்ற நிலை நீடித்தால் இந்த உலகத்தில் பார்க்க யாருக்கும் கண்களே இருக்காது. இறைவன் கொடுத்த எந்த நல்லதும் இறுதி வரைக்கும் மனிதனால் உணர  போவதற்கு இந்தப் பாழாய்ப் போன பழி வாங்கும் உணர்வு தான்.

அதானால் ப்ளீஸ்...என்னை யார் அடித்தார்கள் என்று தேடி உங்கள் நேரத்தை வீணாக்காமல் என் சார்பில் அவர்களை மன்னித்து  விட்டு விடுங்கள்.இது எனது வேண்டுகோள்  அவர்கள் அப்பாவி மாணவர்கள்,  பரீtசை எழுதும் நேரத்தில் சிறைக் கம்பிகள் எண்ணக் கூடாது ! என்று சொல்லியபடியே.கண்களை மூடிக் கொண்டாள் வேதவல்லி.

அங்கிருந்த அனைவரும் வேதவல்லியின் வாக்கை வேதவாக்காக ஏற்று அதற்குக் கட்டுப்பட்டது போல மௌனமாக நின்றார்கள். அந்த மௌனத்திலிருந்து 'நீதி' பிறந்ததை சொல்லு ம் விதமாக பக்கத்திலிருந்த பிரசவ வார்டில் இருந்து புதிதாகப் பிறந்த சிசுவின் இனிய அழுகுரல் முதன்மையாய்க் கேட்க ஆரம்பித்தது.

பாரதக் குருச்சேத்திரக் களத்தில் கிருஷ்ண பராமாத்மா "போருக்குப் போக வேண்டும் அர்ஜுனா" என்று கீதை  ஓதினார்.   கலியுகத் தாய் வேதா கல்லூரி மாணவர் படிக்கும் போது, அரசியல்  போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று புதிய கீதா உபதேசம் செய்தாள் !  அதற்கு வெகுமதி  தலையில் பலத்த கல்லடி !




 

திருவாசகம்






நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உளமகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சிற்றார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்ட எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிப்
கல்லாய் மனிதரைப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஒம்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லை, அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெயகலந்தார் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தில்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே அத்தா மிக்காய் நின்ற
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக் குடம்பின் உள்கிடப்பப்
ஆற்றேன் எம் ஐயா அரனேஓ என்று

போற்றி புகழ்ந்து இருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைபிறவிச் சாரமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நல் இருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானேஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

அக்னிஹோத்ரம்..!





பண்டைய காலத்தில் ஆன்மீகத்தின் மூலம் தனி மனிதரை தூய்மை படுத்துதல் மற்றும் மனதை இதமாக்குதல் (குணப்படுத்துவது என்பார்கள்) என்பது ஒரு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஒவ்வொரு மனிதரும் தான் இறந்தப் பிறகு நல்ல கதி அடைய வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். நாம் ஒவ்வொருவரும் மோட்ஷம் பெற வேண்டும் என நினைப்பது தவறு இல்லை. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் மன அமைதியுடன், திருப்தியான மனதுடன் இருந்தார்கள். அவர்கள் கனவெல்லாம் நாம் இறந்தப் பின் மோட்ஷம் அடைய என்ன வழி என்பதே. அதற்காக அதற்கு என்ன வழி என்று தேடி அலைந்தார்கள். குருமார்களை தேடி அலைந்தார்கள். ஆலயங்களுக்குச் சென்று மனபூர்வமாக வழிபட்டார்கள். யாகங்களில், ஹோமங்களில் கலந்து கொண்டார்கள். புனித நதிகளில் நீராடினார்கள்.


ஆனால் மாறிவிட்ட இந்த காலங்களில் என்ன நடக்கின்றது ? அனைவருமே உயர்ந்த நிலை வாழ்கையை பெறவும் , சமூகத்தில் ஒரு தனி அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டி உள்ளது. அமைதி இன்றி போட்டி பொறாமைகளில் உழன்று கொண்டு இருக்கும் அவர்கள் யாரைப் பிடித்தால் அந்தஸ்தைப் பெறலாம் என அலைகிறார்கள். ஒ.....இவரிடம் நெருக்கமாக இருந்தால், அவரிடம் நெருக்கமாக இருந்தால் நமக்கு சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும் என நினைக்கின்றார்கள். பலவிதமான குருமார்களிடம் செல்கிறார்கள்.


சரி குருமார்களிடம் சென்றால் அங்கு என்ன நடக்கின்றது? அங்கும் போட்டி....பொறாமை....நீ பெரியவனா, நான் பெரியவனா.. குருமார்களிடம் சென்று ஆசி வாங்க வேண்டும் என்றாலும் கூட பணம் இருந்தால்தான் அருகில் நெருங்க முடிகின்றது, தனிப்பட்ட ஆசியும் கிடைக்கின்றது. ஆலயங்களில் சென்றால் காசிருந்தால் முதலில் தரிசிக்கலாம் என்பது நிலை. இப்படிப்பட்ட நிலைமை இருப்பதினால் தமது குடும்பத்தையே பணம் சம்பாதிக்க வேலைக்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முடிவாக மன அமைதியும் கிடைப்பது இல்லை, ஆனந்த வாழ்வும் அமைவது இல்லை. தம்மை பணம் படைக்கும் இயந்திரமாகவே மாற்றிக் கொண்டு விட்டார்கள் என்பதே உண்மை. ஆகவே நாம் அனைவரும் நமக்கு உள்ளது போதும்... நமக்கு பூர்வ ஜென்ம பாபங்களினால் ஏற்படும் மனத் துயரங்களுக்கு வடிகால் கிடைத்தால் போதும் என்றே எண்ண வேண்டும். நமக்கு மன அமைதி கிடைப்பது எப்படி? இயந்திரமாகவே மாறிவிட்ட நாம் ஹோமங்களில், யாகங்களில் கலந்து கொண்டு புண்ணியத்தை பெறுவது எப்படி? நாம் உள்ள இடம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது ?


இதற்கெல்லாம் விடிவு இல்லாமல் இல்லை. அங்காங்கே பல ஆன்மீக நிலையங்கள் உள்ளன. அங்காங்கே பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன. ஆனால் அங்கு செல்ல நேரம்தான் கிடைக்கவில்லை என்பதினால் மன அமைதியை வீட்டிலேயே அடைய அக்னிஹோத்ரம் எனும் மிக எளிய வழி உள்ளது என ஒரு யோகினி கூறுகிறார்.

அக்னிஹோத்ரம் என்பது என்ன ?
பூமியை சுற்றி சந்திரன், சூரியன் மற்றும் பல கிரகங்கள் ஓடுகின்றன. பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ளும்போது அந்த கிரகங்கள் ஒவ்வொரு இடங்களிலும் நிற்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட நேரங்களில் மனிதன், மிருகம் மற்றும் நமது எண்ணங்கள் என அனைத்தும் ஒரு மாறுதலுக்கு உள்ளாகின்றன. உண்மையைக் கூறினால் அலைகழிக்கப்படும் மனதையும் கூட அந்த குறிப்பிட்ட நேரங்களில் ஸ்திரப்படுத்தினால் நாமும் மனத்தைக் கட்டுப்படுத்தும் திறமையைப் பெற்று விடுவோம். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சுற்றி உள்ள பிரபஞ்சத்தின் வெளியை சுத்தப்படுத்தினால் போதும். அப்படிப்பட்ட நேரத்தில் நம் வீட்டில் உள்ள வெற்று இடத்தையும் நம்மையும் தூய்மைப்படுத்தும் , மன அமைதியைத் தரும் . அதை பெற சில நிமிடங்களே செய்ய வேண்டிய சிறிய வேள்வியே அக்னிஹோத்ரம் என்பது.


அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுன்கீனப்படுத்தும் நம் வீட்டில்
வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.


அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும்- ரிக், யுஜுர்வன, சாம மற்றும் அதர்வண வேதங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. அக்னிஹோத்ராவை வேத நாராயணனை வேண்டியே செய்தார்கள். ரிஷி முனிவர்கள் துவக்கி வைத்த அதை அப்போது சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த பிராமணர்களே செய்து வந்துள்ளார்கள். வேதத்தில் கூறப்பட்ட முறையிலான அக்னிஹோத்ராவை இன்னமும் கேரளாவில் சில நம்பூத்ரி பிராமணர்கள் கடைப்பிடித்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் காலப்போக்கில் அதே ஹோமத்தை நமக்குத் தேவையான அளவில் மாறுதலாக்கித் தந்து உள்ளார்கள். கடைபிடிக்கப்படும் முறைதான் வேறுபட்டு உள்ளதே தவிர அதன் முடிவில் நமக்கு கிடைக்கும் பலன் இரண்டும் ஒன்றுதான்.
அக்னிஹோத்ரா செய்ய தேவையான பொருட்கள் என்ன?

ஒரு பிரமிட்
பசு வரட்டி
நல்ல நெய்
முழு அரிசி
நான்கு வரி மந்திரங்கள்.

இதை எங்கு, யார் செய்யலாம் ?

இதை வீட்டிற்குள் எந்த அறையிலும் செய்யலாம்
சிறியவர் பெரியவர் என்ற பேதம் இல்லை
ஜாதி மத பேதமும் இல்லை
ஆண்கள் இல்லை பெண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்
இதற்கு விரதம் இருந்துவிட்டே செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை
குறிப்பிட்ட நேராத்தில் மட்டும் செய்ய வேண்டும் என்பதே விதி.

இதை ஆரம்பித்தப் பின் சில நாட்களில் நிறுத்தி
விட்டால் ஏதாவது தீமை வருமா ?
நிச்சயமாக அப்படி எதுவுமே இல்லை. செய்தவரை அதற்கான நல்ல பலன் கிடைக்கும். விட்டுவிட்டால் எப்போதும் போலத்தான் இருப்பீர்கள். நாம் பல பூஜைகளை ஆரம்பித்துவிட்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் பாதியில் நிறுத்தி விடுவது இல்லையா ? அப்படித்தான் இந்த அக்னிஹோத்ரமும்.

சரி அக்னிஹோத்ராவை எப்படி செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட நேரத்தில் காலை சூரிய உதயத்தின்போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் சிறிய பிரமிட் போன்ற தாமிர குண்டத்தில் பசு வரட்டியை வைத்து கற்பூரத்தை முதலில் ஏற்றி அடந்த தீயினால் நெய்விட்ட பசுவரட்டியை பற்ற வைத்து அதை பிரமிட் போன்ற குண்டத்தில் வைத்து எரிய விடவேண்டும். அப்போது அந்த நான்கு வரி மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டே பசு நெய்யினால் ஈரப்படுத்திய சிறிது அரிசியை ஐந்து விரல்களினாலும் எடுத்துக் கொண்டு ஸ்வாகா எனக் கூறிக்கொண்டே அந்த ஹோம குண்டத்தில் போட வேண்டும். அவ்வளவுதான்.
அக்னிஹோத்ர மந்திரம்

காலையில் கூற வேண்டிய
அக்னிஹோத்ர மந்திரம்
அக்னயே ஸ்வாகா
அக்னயே இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாகா
பிரஜாபதயே இதம் ந மம

மாலையில் கூற வேண்டிய
அக்னிஹோத்ர மந்திரம்
சூர்யாய ஸ்வாகா
சூர்யாய இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாகா
பிரஜாபதயே இதம் ந மம

அப்படி செய்து முடித்தப் பின் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.ஹோமம் முடிந்தது. வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை. அதன் பலன் பத்தே நாட்களில் தெரியத் துவங்கும் என்கிறார்கள். வீடு அமைதியாக உள்ள உணர்வு ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் செய்யும் காரியங்கள் தடங்கல் இன்றி நடக்கும்.

சிந்தாமணி பஞ்சகவ்யம் !

கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும், பாலுக்கு சந்திரனும் தயிருக்கு வாயுவும் நெய்க்கு விஷ்ணுவும் அதிபதிகள் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. இதை பஞ்சகௌவ்யம் என்றும் கூறுவர். ஆபிசாரப்ரயோகம், காத்து, கருப்பு, துர்தேவதை தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சகவ்யம் கொடுத்தால் அவை நீங்கிவிடும்.

அபிதான சிந்தாமணி என்னும் நூலில் ஐந்து வெவ்வேறு நிறத்தில் உள்ள ஐந்து பசுக்களிடம் இருந்து கிடைத்த ஐந்து பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அறிவியல் ரீதியாக இது எந்த அளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவில் பஞ்சகவ்யம் பற்றி அரிய தகவல்கள் பல உள்ளன.

பஞ்சகவ்யம் சாப்பிடுவோர்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பஞ்சகவ்யத்துக்கு உண்டு.

பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர். பசும்பால் 7 பங்கு, பசுந்தயிர் 3 பங்கு, பசு நெய் 1 பங்கு, கோஜலம் (பசுவின் சிறுநீர்) 1 பங்கு, பசுங்சாணத்தைக் கரைத்து வடிகட்டிய நீர் (கோமய ரஸம்) அரைபங்கு என்னும் ஐந்தையும் கலந்து தர்பைப் புல் ஊறிய நீரில் கலந்து உடனடியாக உட்கொள்ள வேண்டும். வேதம் கற்றவர்கள் கோ சூக்தம் என்னும் மந்திரத்தை உச்சரித்து பஞ்சகவ்யம் தயாரிப்பார்கள்.

இதை அருந்தினால் மனித சரீரம் தூய்மை அடைகிறது என்று நமது சாஸ்திரம் கூறுகிறது. பழங்காலத்தில் ஆலயங்களில் பூஜை செய்பவர்கள் தினசரி பஞ்சகவ்யம் அருந்திவிட்டுத்தான் கர்பகிரகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்னும் விதி பின்பற்றப்பட்டு வந்தது.

வியாழன், 28 மார்ச், 2013

ஒரு தாயின் கீதா உபதேசம் ..!



வாசல்ல யாருன்னு சித்தப் போய்ப் பாரேன்டா ஆனந்த்… நிழலாடறது… ஊஞ்சலிலிருந்து தனது கனத்த சரீரத்தை சிறிதும் அசங்காமல் தன்னுடைய கனத்த சாரீரத்தில் ஆணையிட்டாள் அலமேலு.

இருங்கோ பெரீம்மா பார்த்துட்டு வரேன்….சொல்லிக் கொண்டே ஆனந்த் ரேழியைக் கடந்து செல்கிறான்.

யாரு…? என்றபடியே அந்த கனமான மரக் கதவை இன்னும் லேசாக திறக்கவும்..

நான் தான்டா ஆனந்து… முனுசாமி …! மெல்லிய குரலில் தனது கல்லூரித் தோழனின் குரலைக் கேட்டதும் ஆனந்துக்கு பகீர் என்றது.

டேய்…நீ ஏண்டா இங்க வந்தே..? ஆனந்தின் குரலில் அவசரம்.ஐயோ பெரீம்மா வேற இங்க தான் பக்கத்துல இருக்கா…நீ போய் பஸ் ஸ்டாப்ல நில்லு…நான் ஷர்ட் போட்டுண்டு வந்துடறேன்…..போ…சீக்கிரம் போ….பாக்கி அங்க வந்து பேசறேன்.

சரிடா ஆனந்து…. நீ …வந்துடு சீக்கிரம்…நான் காத்துட்டு நிப்பேன்.

அறைக்குள் அவசரமாக நுழையப் போன ஆனந்தை பெரியம்மா அலமேலுவின் குரல் இழுத்து நிறுத்தியது.

யாருடா…வந்தது? சொல்லிட்டுப் போகணும்னு தோணலையா நோக்கு?

தயக்கத்துடன்…ம் ….ம்,, ….முனுசாமி வந்திருந்தான்….காலேஜுல என் கூடப் படிக்கிறவன்.

அவனுக்கு இங்க என்ன வேலை…நம்மாத்துல.? இல்ல…உன்னண்ட தான் என்ன காரியம் பேசணும்?

ஐயோ பெரீம்மா சித்த வாயக் கிளறாமச் சும்மா இரேன்.இப்படி நீ ஆரம்பிச்ச உன்னோட ‘அக்ரஹார எக்ஸ்பிரஸ் ‘ நிறுத்தாமல் சாதி, மதம்,,இனம், காதல், கொலை, தற்கொலைன்னு ஊரெல்லாம் சுத்தி சுத்தி கடைசீல கூவத்துக்கிட்ட நின்னு தான் மூச்சு வாங்கும்..!

அது சரி…வெளில எல்லாம் கெட்டுக் கிடக்கு. உனக்கு ஏதானும் ஒண்ணு ஆச்சுன்னா நான் தானே உன் அம்மாக்கு பதில் சொல்லணும்.எங்களை நம்பித்தானே உன்னை படிக்க இங்க விட்டுட்டு போயிருக்கா.

இனிமேல் இப்படியெல்லாம் யாரையும் நம்மாத்து வாசல்ல வந்து நிக்கச் சொல்லாதே. தெரிஞ்சுக்கோ. நம்மாத்துல வயசு வந்த பொண்ணு கல்யாணி இருக்கா.. நினைவிருக்கோ நோக்கு? காலம் கெட்டுக் கெடக்கு. அதட்டும் குரல் பெரியம்மாவுக்கு.

சிரிப்பு வந்தது ஆனந்துக்கு…ம்ம்…இருக்கு…
இருக்கு…. என்னைத் தேடிண்டு தான் யாரும் இங்க வரக் கூடாது…நான் போகலாமோல்லியோ….நான் கொஞ்சம் பக்கத்துல போய்ட்டு இப்போ வந்துறேன்…பெரீம்மா.இப்பவே மணி ஏழாறது….நேரத்தோட ஆத்துக்கு வரணும்…இல்லையானா நான் ரேழிக் கதவப் பூட்டிடுவேன்…நோக்கு அப்பறம் திண்ணையில் தான் படுக்கை. புரிஞ்சுதா? அப்படியே வரும்போது நாளைக்கு ரசத்துக்கு கொஞ்சம் கொத்தமல்லியும் தக்காளியும் வாங்கிண்டு வந்துடு…வெறுங்கையை வீசீண்டு ….”மறந்தே போயிட்டேன்னு”….சாக்கு சொல்லீண்டு வந்து நின்னாப் பார்த்துக்கோ …ஆமாம்…! என்று உறுமினாள் .



ம்ம்..சரி..சரி…வாங்கிண்டு வரேன்….என்றவன் தன்னை விட்டால் போதும் என்பது போல ஷர்ட்டை மாட்டிக் கொண்டு பட்டன் போட்டபடியே வாசலைக் கடந்து பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைகிறான் ஆனந்த்..

கல்யாணி அடுக்களையில் சப்பாத்தி செய்யும் வாசனை வீடு பூரா மணத்துக் கொண்டிருந்தது. இருபத்தொன்பது வயதாகியும் இன்னும் பிறந்த வீடே கதி என்று இருப்பவள். வரன் வரும்போதெல்லாம் இதாவது அமைய வேண்டுமே என்று எண்ணும் போதே தட்சிணையில் தட்டிப் போய் பழைய படி பாம்பு கடித்த பரமபத காயாக கீழே இறங்கி நின்று விடுவாள் கல்யாணி. கல்யாணம் என்பது பெயரோடு இருப்பதால் தானோ என்னவோ வாழ்க்கையில் அது வருமா வராதா என்ற பயம் கூட லேசாக எட்டிப் பார்த்தது அவளுக்கு. தன கூடப் படித்த தோழிகளுக்கு அவர்கள் குழந்தைகள் கூட பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இவளுக்கு மணமேடை வரை கூட செல்ல விசா கிடைக்க வில்லை.

அலமு……அலமு…..! வரும்போதே அதிகாரத் தொனியில் மனைவியை அழைத்தபடியே உள்ளே நுழைகிறார் கிருஷ்ணஸ்வாமி .

ஏன்னா….நான் இங்கே தானே இருக்கேன்….! ஏன் இப்படிக் கூச்சல் போடறேள்? யாருக்கு என்னாச்சு?

மணி எட்டாறது….இப்ப என்ன ஜோலி வெளில ஆனந்துக்கு …? யாரோ ரெண்டு மூணு ரௌடி பசங்களோட தெண்டரான்….என்ன பிரச்சனயை நம்மாத்துக்கு எடுத்துண்டு வந்து நிக்கப் போறானோ, தெரியலியே …. உன் தங்கை பிள்ளை …நான் தான் சொன்னேனே படிக்க வைக்கணும்ன்னு நினைச்சால் வயசு வந்த பசங்களை இப்படி சொந்தக்காரா ஆத்தில் விட்டுட்டு போறதுக்கு பதிலா ஹாஸ்டல்ல விட்டுட்டு போயிருக்கலாம். இப்ப அவன் என்ன பண்ணினாலும் நாம தான் ஜவாப்தாரி…! காலம் வேற கெட்டுக் கெடக்கறது. வெளில பேசறதைக் கேட்டால் வயசுப் பசங்கள வளர்க்கறது இந்தக் காலத்துல பிரம்ம பிரயத்தனம் பண்றாப்பல. எதுக்கும் உன் தங்கைகிட்டக்க காதில் போட்டு வைய்யி . நாளைக்கு ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா வீணா நம்ம தலை உருளக் கூடாதோன்னோ..!

ஆமாம்னா…நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான். நேக்குத் தான் இதெல்லாம் தோணலை. ஆனந்த் நாளுக்கு நாள் ரொம்ப மாறிண்டே வரான். அவனோட சேத்தி சரியில்லை. நானும் கவனிச்சுண்டு தான் இருக்கேன். இன்னிக்கு வரட்டும்….கேட்டுடறேன். போனாப் போகட்டும்னு பார்த்தால் ரொம்பப் பண்றான். சுலோச்சனாவுக்கும் ஃபோன் பண்ணி அவனை ஒரு நல்ல ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்க்கச் சொல்லலாம். போதும் ரெண்டு வருஷம் நாம உள்ளூரில் இருந்துண்டு பார்துண்டாச்சு. இனி மகளே அவள் சமத்துன்னு நாம இதிலேர்ந்து நைசா கழண்டுக்கணும். நம்ம குடும்பத்து கவலையே நமக்குத் தீர மாட்டேங்கறது. இதுல அவளோட கவலை வேற நாம ஏன் சுமக்கணும் ? இந்தப் பிள்ளையை ஒண்ணொண்ணா சொல்லி மேய்க்க நாம என்ன கடமைப் பட்டவாளா? இப்பவே நான் அவளுக்கு ஃபோனைப் போட்டுப் பேசி நாளைக்கே இங்க வரச் சொல்றேன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கல்யாணி…”அம்மா…..ஏன்மா அப்படிச் சொல்றே? பாவம்மா ஆனந்த்….அவனும் நம்மோடவே இருந்துட்டுப் போட்டுமே நமக்கும் ஒரு துணை தானே? சித்தி உன்னைத் தான் தப்பா நினைச்சுக்கப் போறா….நீ ஃபோன் பண்ணாதே…என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

அலமேலு தன தங்கை சுலோச்சனாவிடம் விஷயத்தை போட்டு உடைத்துக் கொண்டிருந்தாள்.

“அதாண்டி சுலோ..நான் சொல்றதைச் சொல்லிட்டேன்….நேக்கும் வயசாறது….சுகர், பிபி…..இத்தோட கல்யாணியோட கல்யாண கவலை வேற….நீ சீக்கிரம் வந்து உன் பிள்ளையை ஹாஸ்டல்ல போடு…இதோ பாரு இப்போ கூட அவன் ஆத்துல இல்லை…வெளில போயிருக்கான்….சொன்னாக் கேட்டாத் தானே..? நீ தப்பா நினைச்சாக் கூட நேக்குப் பரவாயில்லை…எனக்கு இந்த வயசில் இந்தத் தலை வலி வேண்டாம்…உன் அத்திம்பேரும் பாவம்…ரொம்பப் புலம்பறார்..!

“சரி….நான் நாளைக்கே வரேன்….என்ற சுலோவின் பதிலில் நிம்மதி அடைந்தவளாக , நீ கண்டிப்பா வந்துடு ..ப்ளீஸ். என்று சொல்லிவிட்டு கைபேசியை அணைக்கிறாள் அலமேலு.

மனைவி அலமேலு தனக்கு சாதகமாக எடுத்த முடிவில் மேற்கொண்டு ஏதும் பேசாமல் நிம்மதியாக கை கால் அலம்பிக் கொண்டு சாப்பிட அமர்ந்தார் கிருஷ்ணசுவாமி.

சொல்லிட்டியா….? நான் தான் சொல்லாதேன்னு உள்ளேர்ந்து கரடியாக் கத்தறேனே…..காதுலயே வாங்கிக்கலைம்மா நீ..என்று கல்யாணி சமையலறை விட்டு வெளியே வருகிறாள்.

நோக்கொண்ணும் தெரியாது. பொழுது விடிஞ்சு பொழுது போனா வரும் செய்தியைப் பார்த்தால் தலையைச் சுத்தறது. காலேஜ் பசங்க எந்த நேரம் என்ன செய்வான்னே தெரியலை..குடிப்பழக்கம், டிரக்கு, கேர்ள் ஃபிரண்டு இந்த வம்பில் மாட்டும் வயசு இது ! இது நம்ம மேற்பார்வையில் வந்தால், நம்ம தலை உருளும். ஏன் கவனிக்க வில்லைன்னு பழி நம்ம மேல் விழும் ! இவனும் சொன்னாக் கேட்க மாட்டேங்கறான். எதுலயாவது மாட்டிண்டு நின்னா…..! அதான்…அவாவா பிரச்சனையை அவா அவா பார்த்துக்கட்டும்.எதோ இந்த ரெண்டு வருஷம் கழிஞ்சதே பெரிசு. என்று கல்யாணியின் வாயை அடைத்தவளாக கொட்டாவி விட்டபடி…நானே “ராமா…கிருஷ்ணா…கோவிந்தான்னு” இருக்கணும்னு நினைக்கறேன்….என்று வாயருகே சொடக்குப் போட்டபடி…..”ஹூம்ம்ம்ம் ” என்று அலுப்புடன் சொல்லிக் கொண்டே ஊஞ்சலை விட்டு எழுந்திருக்க ஊஞ்சல் ஆடாத ஆட்டம் ஆடி நிற்கிறது..

பஸ் ஸ்டாப்பில் முனுசாமி தனது கைபேசியில் வந்த குறுஞ் செய்தியை ஆனந்திடம் காட்டிய படி…..பார்த்தியாடா…இதுக்குத்தான் அம்புட்டு அவசரமா நான் வந்தது….நீ தான் தலைமை தாங்கறே …என்னடா சொல்றீங்க சிவா, அர்விந்த், கோபிநாத்….சரி தானே …”ஆனந்த் தான் ஹெட் …இவனே இருக்கட்டும் ” இப்போ பானர் எழுதறோம்….நாளைக்கு காலீல கட்டி பஸ் ஸ்டாண்ட் வாசலண்ட போயி உட்கார்றோம்…நீயும் உனக்குத் தெரிஞ்ச அம்புட்டு பேத்துக்கும் மெசேஜ் கொடுத்துடு……சரியா..? டேய்…பேசுடா….இவனைப் பாருடா…பயந்தாங்கொள்ளி பக்கோடா..!

டேய்…என்னா முனுசாமி…நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்றே? என்னால இதுக்கெல்லாம் தலைமை தாங்க முடியாதுடா சாமி…நானே என் பெரியம்மா வீட்டில் வந்து புண்ணியத்துக்கு தங்கி இருந்து படிக்கிறேன்…இதுல நான் இருக்கேன்னு தெரிஞ்சா அவ்ளோ தான்…..பின்னாடி டப்பா கட்டி விட்டுடுவாங்க….! என்ன ஆள விடுங்கடாச் சாமி…நான் போறேன்….வீட்டில் தேடுவாங்க…இப்பவே லேட் ..நம்மால திண்ணையில எல்லாம் தூங்க முடியாதுப்பா.

அட…என்னடா இவன் இப்படிச் சொல்றான்…இவனையாடா நாம நம்பிகிட்டிருந்தோம்…..டேய்..மச்சி….இவன் சரியான தயிர்சாதம்டா..! இதுங்களத் திருத்த முடியாது….நீங்கள்ளாம் ஏண்டா காலேஜுக்கு படிக்க வாறீங்க? பேசாம “மாங்கல்யம் தந்துனானேனா…” ன்னு மூக்கைப் பிடிச்சுக்கிட்டு, குடுமி வெச்சுக்கிட்டு…தட்சிணை தரேளா?…ன்னு போக வேண்டியது தானே…?

இதைக் கேட்டதும் ஆனந்துக்கு ரத்தம் சூடேறுகிறது. “அடேய்ங்…கொக்க…. மக்கா….போட்டேன்னு வெய்யி அப்படியேப் பொடிமாஸ் ஆயிடுவே …! நீங்கள்ளாம் பேசராப்புல ஆயிடுச்சு இப்ப என் நிலைமை…! நான் மட்டும் இந்நேரம் என் ஊரில் என் சொந்த வீட்டில் இருந்தா நெலமையே வேற. பெரியம்மா வீட்டில் இருக்கும்போது இதெல்லாம் வேண்டாமேன்னு பார்க்கறேன்….சொன்னாப் புரிஞ்சுக்கிட்டு விடுங்களேன்டா…என்கிறான் ஆனந்த்..

அரே …காதுல காலிப்ஃப்ளவரை வச்சுப் பார்காதடா …! உன் உதாரெல்லாம் சும்மா….உள்ளாங்காட்டிக்கி ..! உனக்கு மட்டும் ‘தில்’ இருந்தா தைரியமா வாடா பார்க்கலாம். மறுபடியும் கூட இருந்து உசுப்பேத்தும் நண்பர்கள் மத்தியில் சிக்கித் தவிக்கிறான் ஆனந்த்..

இப்படி சொல்லிச் சொல்லியே என்னை உங்க விளையாட்டுல சேர வெக்கிறீங்க இல்ல….சுத்த மோசம்டா நீங்க…என்று மீண்டும் மறுத்து பேசுகிறான் ஆனந்த்.

அடடா..இவரு பெரிய “அக்மார்க் பிராண்ட்” வாழ்கையில ரிஸ்க் எடுக்கறதெல்லாம் சும்மா ரஸ்க் சாப்பிடறது மாதிரி நெனைக்கோணும் டா அத்த விட்டுப் போட்டு…..பெரியம்மா….ஸ்ட்ரிக்ட்….பெரியப்பா லூஸுன்னு …கதையெல்லாம் அடிக்கப் படாது..! “மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்….அப்படீங்குற ‘தில்லும் திண்ணாக்கமும்’ தாண்டா நம்ம கெத்து…அத்த கெடாசிட்டு சும்மா தயிர்சாதமும் மாவடு ஊறுகாயும் தின்னுப்போட்டு எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார்னு இருக்கலாமாடா ஆனந்து …? மஜா பண்ணுடா ஆனந்து …காலேஜு லைஃப்ல இதெல்லாம் சகஜமப்பா..அரியர் வெக்காம எஞ்சினீயர் ஆக முடியாது…..ஸ்ட்ரைக் பண்ணாத கல்லூரி மாணவன் இருக்க முடியாது தெரியாதோ நோக்கு தெரியாதோ…? என்று கிண்டலடிக்கிறார்கள்.

மெல்ல மெல்ல ஆனந்த் ரசத்துக்கு வாங்க வேண்டிய தக்காளியை மனதில்இருந்து பின்னுக்குத் தள்ளி விட்டு…”ஒகே… திண்ணையில் தூங்கலாம் இன்று” என்று சொல்லிக் கொண்டு சமாதானமாகி நடுநிசி வரைக்கும் அரட்டை அடித்துக் கொண்டும் ”நீதி கிடைக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் ” என்று கொட்டை எழுத்தில் எழுதிய பானர் தயார் செய்து கொண்டும் .அவர்களுக்கு வந்த மெசேஜை மற்ற மாணவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துக் கொண்டும் இருந்து விட்டு கடைசியில் கிளம்பி வீட்டின் வாசத் திண்ணையில் வந்து படுத்துக் கொண்டு தன்னை ஒரு ‘ஹீரோ’வாக கற்பனை செய்து கொண்டு உறங்கக் கண்மூடும் போது மணி மூன்று அடித்து ஓய்ந்தது.

விடியற்காலை கல்யாணி அக்கா வாசலைத் தெளித்து விட்டு மீதம் இருக்கும் தண்ணீரை இவன் முகத்திலும் தெளித்து விட்டு ” டேய்…ஆனந்த் ..! எழுந்து உள்ள வந்து படு…வா ” என்று அழைத்து விட்டு கூடவே….ஆச்சுடா…இன்னிக்கு உன் அம்மா வரப் போறா….உன்னை ஹாஸ்டலில் கொண்டு போய் விட…இங்க உன்னைக் கட்டிக் காக்க சரிப்படாதுன்னு உன் பெரீம்மா சொல்லிட்டா…தெரியுமோ? என்று தூபம் போட்டு விட்டுப் போன கல்யாணி, அவள் சொன்னது காதில் விழுந்ததும். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த ஆனந்த் , “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா….” என்று விசிலடித்தபடியே உள்ளே நுழைகிறான். அவன் மனசு சொல்லியது இன்றிலிருந்து இந்தச் சிறையிலிருந்து உனக்கு விடுதலை….. ஹாஸ்டல் தான் சுதந்திரம்…என்று. நிம்மதி பெருமூச்சுடன் அறைக்குள் இருக்கும் கட்டிலில் சாய்கிறான்.

டீ …அலமு…! அவன்ட்ட கண்டீஷனாச் சொல்லிடு இன்னிக்கு…என்ன ? என்று கேட்கும் கணவரைப் பார்த்தாள் .

அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ..அவன் இஷ்டப் படி இருந்துட்டுப் போகட்டும்…என்று காற்றுப் போன பலூனாக அடங்கினாள் அலமேலு..

சொன்னபடியே கிளம்பி பஸ்ஸைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்து வீடு செல்ல ஆட்டோவை எதிர் பார்க்க….தெருவே வெறிச்சோடிக் கிடந்தது.
ஏன் ஒரு ஆட்டோ கூட இல்லை..எண்ணியவல்லாகத் திரும்பிய சுலோச்சனா அங்கு ஓரமாக இருந்த ஆட்டோவின் அருகில் சென்று…
“இந்தாப்பா ஆட்டோ… காந்தி நகர் போகணும் ” என்றதும்.

இன்னைக்கு ஆட்டோ வராதும்மா….ஸ்ட்ரைக்…என்று சொல்லிவிட்டு அந்த சீட்டில் சுருண்டு படுத்துக் கொள்கிறான் அவன்.

என்னது…! ஸ்ட்ரைக்கா…? உங்களுக்கு என்னப்பா வந்தது இப்படி திடீர் திடீர்னு? …மாசத்துல அஞ்சு நாள் இப்படி ஆட்டோ பந்த் பண்ணினா எங்க கதி என்ன?

ம்ம்….அரசு அம்மாட்ட கேட்க வேண்டிய கேள்வி இது….எங்கிட்ட வந்து காலீல கேட்டா….? என்று லுங்கியை இழுத்துத் தலைக்கும் சேர்த்துப் போர்த்திக் கொள்கிறான்.

கொஞ்சம்..காந்தி நகர் வரைக்கும் வாயேன்பா………விஷயம் தெரியாமல் கிளம்பி வந்துட்டேன். என்று கெஞ்சியதும்.

“இருநூறு ரூபாயாகும்” சரியா? என்கிறான்.

சமயத்துக்கு ஏத்தாற்போல ஆதாயம்…ஆதாயம்…! மனசு ஊளையிட்டது….”எதற்காகக் கொடுக்க வேண்டும் இருநூறு ரூபாய்….ஐம்பது ரூபாயில் சேர வேண்டிய இடம் அது…மானம் கெட்டவனே…..மாமனா மச்சானா…? ரத்தம் கொத்திக்க வீர வசனம் பேச வேண்டும் போலத் தான் இருந்தது….’அடக்கி வாசிடீ சுலோச்சனா…என்று உள்ளிருந்து வந்த குரல்…அடங்கிப் போய் “சரி தரேன் வா…” என்று இதுவும் இன்று காந்தி கணக்கு என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள். அவளது மனசு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது.

வழியெல்லாம் பெட்டிக் கடை முன்பு அன்றைய செய்தித் தாளின் தலையங்கச் செய்தியாக ” மாணவர் உண்ணாவிரதப் போராட்டம்”
முழு கடையடைப்பு” அனைத்துக் கல்லூரியும் காலவரையறையின்றி மூடல் ” “காலிகளுக்குப் பயந்து அயல்நாட்டு அழகி மாடியிலிருந்து குதிப்பு,” என்று வித விதமான தலைப்பில் கொட்டை கொட்டையாக எழுதி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது…கூடவே…. வழக்கம் போல “மாணவர்கள் பலி” ”சிறுமி பலாத்காரம்” “மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அரை பவுன் திருட்டு” என்றெல்லாம் தமிழ் நாட்டின் மானத்தை தொங்க விட்டு அது காற்றில் பறந்து கொண்டிருந்தது.

படிக்கப் படிக்க, சந்திரபாபு பாடிய “டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே உலகம் போறப் போக்கைப் பாரு தந்தனத் தில்லாலே….”
என்று நினைத்துப் பார்த்தது. அவர்களெல்லாம் தீர்க்கதரிசிகள்….சொல்லிவிட்டுப் பறந்து விட்டார்கள்..காலம் கெட்டுப் போச்சு நினைத்துக் கொண்டே தான் பயணம் செய்யும் ஆட்டோவின் எண்ணை மனதுக்குள் குறித்துக் கொண்டாள்…அப்படியே கண்ணாடி வழியாக அந்த டிரைவரின் முகத்தையும் பார்த்து வைத்துக் கொண்டாள் . இதனால் தானே சொந்த அக்கா விட்டில் கூட படிக்கிற பையனை வைத்துக் கொள்வதற்கு யோசிக்கிறார்கள்..

எதிர் சாரியில் வரும் ஆட்டோவைப் பார்த்ததும்…சுலோச்சனா …”ஏம்பா….ஆட்டோ ஓடுது போலிருக்கே…? நீ சும்மா சொன்னியா ஸ்ட்ரைக்குன்னு..?

அவன் திரும்பிப் பார்த்தபடியே , எல்லாம் ஒண்ணுக்கு நாலு மடங்கு கொடுத்தா ஓடும்…இப்ப இங்க ஓடலியா ? என்கிறான்.

உன்கிட்ட லைசென்ஸ் எல்லாம் சரியா வெச்சிருக்கியா? மீண்டும் வந்த கொக்கிக் கேள்வியில் திகைத்தவனாக…

ஏன்மா….? இல்லாதையா ஓட்டுறேன்…பத்து வருஷ சர்வீஸு …! என்கிறான்.

இல்ல நான் நீ கேட்ட பணத்தைக் கொடுத்துருவேன். நான் போகப் போற வீடு டிராஃபிக் போலீஸ் ஆபீசர் வீடு. எங்கண்ணன் தான்.
ஒருவேளை அவரு எதாச்சும் உன்கிட்ட கேட்டு, அதை உன்னால கொடுக்க முடியலையின்னு வெய்யி….! அதான்..முன்னாடியே கேட்டுக்கிறேன்….நீ ரோட்டைப் பார்த்து ஓட்டுப்பா.. !…என்றவள் மனசுக்குள் அவன் பயந்து போனதை எண்ணி சிரித்துக் கொள்கிறாள் சுலோச்சனா.

ஏம்மா….இப்படிநானும் புள்ள குட்டிக் காரன் தானே. டீசல் விக்கிற விலையைப் பார்தீங்கல்ல .நெனச்ச போதெல்லாம் விலைய ஏத்திட றானுங்க. நாங்க மட்டும் எங்கிட்டுப் போவோம்? மாசத்துல பாதி நாள் பந்த். ஸ்கூல் சவாரி மட்டும் தான் ஒழுங்கா போவுது. மத்தபடி கிராக்கி ரொம்ப கம்மி. அதான்..வந்த சவாரியை விட வேணாம்னு கூட கேட்குறோம் . போவட்டும்மா…நீங்க அம்பது ரூபாயே கொடுங்க போதும். பாக்கியை நான் காந்தி கணக்குல எழுதிக்கிடறேன்.

எதை…?

பாக்கி நூத்தம்பது ரூபாயைத் தான்.

ஹுக்கும் …..நல்லாத்தான் பேசறே போ. நியாயமா உழைச்சு சம்பாதிக்கும் பணமே நிலைக்க மாட்டேங்குது. இதுல அடிச்சுப் புடிச்சு அடுத்தவங்க வயித்தெரிச்சலோட கொடுக்கிற எந்தப் பணம் ஓட்டும்? அதான் சொன்னேன்..என்றவள்…இதோ வீடு வந்துடுச்சு அங்க நிறுத்து…..இந்தா நியாயமான அம்பது ரூபாய்…நியாயமா சம்பாதிக்க ஆரம்பி. அப்போ தான் உன் மனசாட்சி கூட உன்னைக் கண்டு பயப்படும். சொல்லிக் கொண்டே இறங்கி திரும்பிப் பாராமல் வீட்டை நோக்கி நடக்கிறாள் சுலோச்சனா.

“ஏம்மா இன்னும் பத்து ரூபா தந்தால் என்ன ? ஸ்டிரைக்கில எப்படி அஞ்சாம ஓட்டி வந்திருக்கேன் !”

சுலோச்சனாவுக்கு அது காதில் விழவில்லை.

அவளை இறக்கி விட்டு விட்டு தப்பித்தோ பிழைத்தோம் என்று தலை தெறிக்கப் பறந்தது ஆட்டோ.

அம்மா…அம்மா.! சித்தி வந்தாச்சு….கல்யாணி உள்ளே குரல் கொடுத்து கத்திக் கொண்டே வாசல் வரைக்கும் வந்து சுலோச்சனாவின் கையில் இருந்த பையை வாங்கிக் கொள்கிறாள்…வாங்கோ சித்தி…சித்தப்பா சௌக்கியம் தானே?

ம்ம்ம்…இருக்கார்…என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஹாலில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து லேசாக ஆட ஆரம்பிக்கிறாள்.

“வாடிம்மா சுலோ….சொன்னபடியே வந்துட்டே….ரொம்ப சந்தோஷம் ” என்ற அலமு…அனைத்து உபசரிப்புக்குப் பிறகு மெல்ல விஷயத்தைப் பக்குவமாக ஆரம்பித்து சொல்கிறாள்.

ஆமாம்….நீ சொல்றது சரி தான். பொழுது விடிஞ்சு பொழுது போனா வெளில போற பிள்ளை வீட்டுக்கு வந்தபின்ன தான் உயிரே வருது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா செய்தி வரும்போதே மனசு பதைக்கிறது. உன்கிட்ட எனக்கு ஒரு கோபமும் இல்லை. நீ சொல்றாப்பல அவனை ஹாஸ்டல்ல சேர்த்துடலாம். ஒண்ணும் பிரச்சனை இல்லை. என்றவள் “ஆனந்த்…ஆனந்த்…என்று அழைத்தபடியே அவனது அறைக்குள் எட்டிப் பார்க்கிறாள்.

அங்கு அவன் எப்போதோ வெளியே சென்று விட்டதற்கான அறிகுறி தெரியவே….அதான் காலேஜே இன்னிக்கு லீவாச்சே…இவ்ளோ சீக்கிரத்தில் இவன் எங்கே எழுந்து போயிருப்பான்…? என்று பொதுவில் கேட்க.

நேத்திக்கு அவன் வந்த நேரம் என்ன தெரியுமா? நடுராத்திரி மூணு மணி இருக்கும். என்று மேலும் சொல்கிறாள் அலமேலு.

அச்சச்சோ….என்னதிது…ரொம்ப அநியாயமா இருக்கு…இருங்கோ நான் கேட்கிறேன்..என்ன தான் பண்றான் ராத்திரி இவன்?
இப்படி இருந்தால் என்னத்த சொல்றது? அலுத்துக் கொள்கிறாள் சுலோச்சனா.

சரிக்கா..நான் கொஞ்சம் இங்க காலேஜ் வரைக்கும் போயிட்டு வரேன். துணைக்கு கல்யாணியை அழைச்சுண்டு போறேன்…அப்படியே என்னிக்கு காலேஜ் திறப்பா எந்த ஹாஸ்டல்ல சேர்க்கலாம்னு ஒரு பார்வை பார்த்தால் தான் தேவலை…இல்லையா? என்கிறாள்.

“இந்த ஸ்டிரைக் சமயத்தில் பெண்கள் வீதியில் போவதே ஆபத்தானது. நீங்க போய் கல்லூரிக் கதவு திறக்கப் போவுதா ?”

அவர்கள் அஞ்சவில்லை . அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்யாணியும், சுலோச்சனாவும் கல்யாணியின் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு காலேஜை நோக்கி செல்கின்றனர்.

போகும் வழியில் அங்கங்கே பஸ் மறியல், போராட்ட, ஊர்வலம், அதன் நடுவில் கோரிக்கைகளுக்குத் தேவையான புகைப் படத்தின் பானரைப் பிடித்தபடியே “நீதி வேண்டும் நீதி வேண்டும்…எங்களுக்கு நீதி வேண்டும்..” என்று கத்திக் கொண்டே செல்லும் மாணவ ஊர்வலங்கள்..

என்ன கல்யாணி….நீ ஒரு காலேஜ் பிரின்சிபலா இருந்தா இது போன்ற நடவடிக்கைக்கு எது மாதிரி ரியாக்ட் பண்ணுவே? இப்படியா அரசியல் எண்ணங்களுக்கு மாணவர்களை ஊக்கம் கொடுப்போம்,

நானா இருந்தா…சொல்லிடுவேன்….எவனாவது ஸ்ட்ரைக் பண்ணினா கண்டிப்பா அவனுக்கு ஹால் டிக்கெட் தரமாட்டேன்னு நோடீஸ் போர்ட்ல எழுதி போட்டுட்டு அவன வேற எதைப் பத்தியும் நினைக்க விடாமல் செய்து விடுவேன்….அதுதானே சரி சித்தி.

ம்ம்ம்…சரி..சின்னப் பசங்களுக்குப் புரியாது…கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு இருப்பாங்க ..பெரியவங்க நாம தான் சொல்ற விதமா சொல்லணும். ஆனாலும் இந்த அரசியல் விஷயத்துல கல்லூரி மாணவர்களைத் தூண்டி விடுவது சமூகக் குற்றம். இதை நாம சும்மா விடக் கூடாது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே…காலேஜும் வந்து விட..அதன் வாசலில் பெரிய பானர் கட்டி….அதன் கீழே கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் என்று அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும்….இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்? யாரோ சொன்னதும் அப்படியே செய்யத் தான் தெரியும் ..ஏன் எதற்கு என்ற கேள்வி கூட கேட்க தோன்றாதோ? அந்தக் கூட்டத்தின் நடுவே ஆனந்தும் அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதும்…”தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல உள்ளுக்குள் துடித்துப் போனாள் சுலோச்சனா.

இத்தனை வருஷத்தில் ஒரு நாள் அவனை நாம் பட்டினி போட்டிருப்போமா கல்யாணி? …இப்போப் பாரேன்..நிலைமையை. என்றவள் நம்ப முடியாதவளாக…திகைப்பில் நிற்கவும்.

கூட்டத்தில் மைக்கில் யாரோ பேச ஆரம்பிக்கிறார்கள்.அதில் ஏதோ அரசியல் கட்சி முன்னோடியாக இருப்பது மட்டும் புரிகிறது.
“போராடுவோம்…நீதி கிடைக்கும் வரை போராடுவோம்…இல்லையேல் ஆயுதத்தைக் கையிலெடுப்போம் …மாணவர்களின் சக்தி சுனாமியைப் போன்றது….நீதி கேட்கப் புறப்பட்டு விட்டோம் இனி தயங்க மாட்டோம்…இறுதிவரை உண்ணாவிரதமிருந்து போராடி ஜெயிப்போம்……”இலங்கையில் நீதி கிடைக்கத் தனிப்பட்ட சர்வதேச விசாரணை அவசியம்” குரல் கொடுக்க இங்கிருந்தே எங்கள் படை..மாணவர்களின் கடல் போன்ற அணி திரட்டு..” என்று பேசிக் கொண்டே போகிறார் அவர்.

கல்யாணி…இந்தப் பேச்சைக் கேட்டியா…? சும்மா இருக்குற சங்கை எப்படி ஊதி ஊதி ஊரைக் கூட்டறான் பாரேன்..இந்த மாதிரிப் பேச்சாலத் தான் நாடே கெட்டு நாசமாப் போச்சு. இப்போ படிச்சிட்டிருக்கிற பசங்களைத் தூண்டி விட்டு மாணவர்கள் என்றாலே என்னவோ அராஜகம் செய்ய அத்தனைத் தகுதியும் ரெடிமேடா இருக்கிறாப்பலன்னா இருக்கு இவா சொல்றது. பெத்த வயிறு பத்திண்டு எரியறது.
அவா அவா வாயைக் கட்டி வயித்தைக் கட்டி…லட்ச லட்சமா பணத்தைக் கொட்டி காலேஜ் காலேஜா பார்த்து அலைஞ்சு திரிஞ்சு கொண்டு வந்து சேர்த்தா….படிச்சு முடிச்சுட்டு குழந்தைகள் வெளில நல்ல படியா வந்து ஒரு வேலையில் உட்காரும்…நாம, பெத்தவா கொஞ்சம் மூச்சு விடலாம்னு நினைச்சா…இதென்னடா வம்பாப் போச்சு.? அரசியல்ல இவங்களைக் கோத்து விட்டு குளிர் காயிர கையாலாகாத் தனம்..

இங்கே இவர்கள் இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே….அருகில் ஒரு பஸ் எரிக்கப் பட்டு…கத்தலும், கூச்சலும்…ஆர்ப்பாட்டமுமாக…..இதில் தாங்கள் எதற்காக இதைச் செய்கிறோம் என்றே புரியாமல் “இளங்கன்று பயமறியாது’ என்பது போல கண்மூடித் தனமாக அவர்களுக்குள் இருக்கும் வெறியை வெளிக் கொண்டு வந்து சேதாரம் செய்கிறார்கள்.

சுலோச்சனாவால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவளுக்குள் எழுந்த நெருப்புப் பொறி இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க தன்னாலும் முடியும் என்ற முடிவோடு…அங்கு பேசிக் கொண்டிருந்தவரிடம் சென்று….”ஐயா….கொஞ்சம் அந்த மைக்கைத் தரீங்களா…..இத்தனை நேரம் நீங்க பேசினீங்க…..நாங்க கேட்டோம்…இப்போ நாங்க….சமுதாயம்…தாய்க்குலம் பேசப் போகுது….கொஞ்சம் நீங்களும்..இங்க கூடியிருக்கும் மாணவர்களும் கேட்க வேண்டும்…என்று கணீரென்று சொல்லியபடியே மைக்கை கைப் பற்றுகிறாள்…

என்ன தான் பேசப் போறாங்க.என்ற ஆவலில் மைக் கைமாறுகிறது. கூட்டத்திலும் அமைதி நிலவுகிறது. சுலோச்சனா “வேண்டாம் சித்தி….ப்ளீஸ் வந்துடு…” என்று கண்களால் கல்யாணி சொல்லும் எந்த கெஞ்சலையும் சட்டை செய்யாமல்…அருகில் போலீஸ் இருக்கும் பாதுகாப்பும் மீறி தன மகன் இருக்கிறான் இந்தக் கூட்டத்தில் என்ற தைரியமும் ஒன்று சேர..தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள்…அவளது குரல் கணீரென்று ஆலயமணி போல அங்கங்கு வைத்திருக்கும் அத்தனை குழல் பெருக்கி வழியாக சென்று கொண்டே ஒவ்வொருவரின் இதயத்தையும் தட்டத் தயாராகிறது.

” அன்பான மாணவர்களே…உங்கள் சக்தி பெரிது தான். ஆனால் படிக்கிற காலத்தில் அதை உங்களின் சுய முன்னேற்றத்திற்கு நீங்கள் உபயோகப் படுத்துங்கள்.ஒரு சிறிய பிரச்சனையை ஒன்றுமில்லாமல் செய்ய அதைவிடப் பெரிய பிரச்சனையால் தான் முடியும். அது போலத் தான் இப்போது உங்களைத் யாரோ தூண்டி விட்டு பரீட்சைகள் நெருங்கும் இந்த நேரத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு இப்படி சமுதாயச் சிக்கலில் உங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள்.ஏவு கணைகளாய் உங்களை ஏவி விட்டுத் தங்களுக்கு கவசமாகவும் வைத்துள்ளார்கள் !

இதாவது உங்களுக்குத் தெரியுமா? என்னமோ….இதில் கலந்து கொண்டால் தற்காலிகமாக நீங்கள் உங்கள் ப்ராஜெக்ட்,லேப்,டெஸ்ட்,
ரெகார்ட் வொர்க்,இதிலிருந்து விடுதலை கிடைக்கும் எண்ணம் மட்டும் உங்களுக்கு இருக்கும். அதையும் தாண்டி கல்லூரி விடுமுறை…..காலவரையற்ற விடுமுறை…! இதில் யாருக்கு என்ன லாபம்.?.விடுமுறை உங்களுக்கு என்ன சுகம் தந்தது..? வேகாத வெயிலில் பசி என்றால் என்ன என்று தெரியாத நீங்கள் எல்லாரும் இப்போது உண்ணாவிரதம் என்ற பேரில் பசியோடு உலர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.இதனால் அரசியலில் அல்லது நாட்டில் எந்தப் பிரச்சனையும் தீர்ந்து விடப் போவதில்லை.

நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே எரிந்து கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனையும் இது வரையில் அப்படியேதான் இருக்கிறது யாராலும், எந்த போராட்டத்தாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்படியே அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் அது அரசியல் சட்டத்தால் மட்டும் தான் முடியுமே தவிர….உங்களின் கொந்தளிப்பால் இயலாது…என்று மனசுக்குள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் இப்போது வாழ்க்கையில் பொறுப்பேற்கும் தருணத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு அரசியல் வில்லுக்கு அம்பாகி அழிந்து போக வேண்டிய நிர்பந்தம் உங்களுக்குத் திணிக்கப் படுவது அநியாயம். அரசியல்வாதிகளுக்கு மாணவர் இலவச ஏவு கணைகள் அல்ல !

அந்த அராஜக வில்லை முறிக்கத் தான் இன்று… இங்கு…. நாங்கள்…..உங்களைப் பெற்ற தாய்மார்கள் வந்திருக்கிறோம். எங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க…ஆம்…உங்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் எங்கள் “தாய்மார்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டம்….எங்கள் குழந்தைகளை அரசியல்வாதிகளின் கையில் இருந்து காப்பாற்ற ” புறப்படுங்கள் தாய்மார்களே….வீட்டுக்குள் இருந்து வெறும் செய்தியும், சீரியலும் பார்த்து அழுதது போதும்… போதும்….! புறப்படுங்கள் ..!

யார் கல்லூரி மாணவர்களைப் பகடைக் காயாக்கி குளிர் காய்கிறார்களோ அதே மாணவர்களைக் காக்கும் பொருட்டு தாய்மார்களாகிய நாமும் உண்ணாவிரதம் இருப்போம்…வாருங்கள்…திரளுங்கள்…ஒன்று கூடுங்கள்…சமூகம் என்பது நாம் தானே..? நம் குழந்தைகளுக்கு ஒன்று என்றால்..ஒரு இழப்பு வந்து விட்டால் அந்த இழப்பும் வலியும் நமக்குத் தானே? ..அது நேராமல் நம் குழந்தைகளைக் காப்பாற்றுவோம்.

மாணவர்களே…! நீங்கள் வருங்காலத்தில் குடும்பத்தைத் தாங்கும் கோபுரத் தூண்கள்…! உங்களை ஓட்டுக்கும் நாட்டுக்கும் ஏவுகணைகளாக ஆக்க விடாதீர்கள் ! உங்களை ஏவி விட்டு ஆதாயம் தேடும் அனுபவசாலிகளை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

“பசியோடு இருக்கும் படைவீரர் சண்டை செய்ய முடியாது” என்று நெப்போலியன் கூறுகிறார்.பட்டினி கிடக்கும் உங்களை வலுவிழக்கச் செய்யத் தான் இந்த ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே. அரசியல் தலைவர்கள் சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டு கட் அவுட்டில்
நிற்க, படித்து வேலைக்குப் போய் உங்கள் வாழ்கையை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள பொறுப்பை மறந்து தேவையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸ் காரர்களின் கையிலிருக்கும் லத்திக்கு இரையாகாதீர்கள் .

ஏற்கனவே உங்களை சினிமா மோகமும்…ஹீரோக்களின் ஆதிக்கமும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. இப்போது அரசியல் தூண்டிலுகுள்ளும் புழுவாக உங்களையே மாட்டி வேடிக்கை பார்க்கும் போது ..பெற்ற எங்களால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை..!

ஆதி காலத்தில் அதாவது ராஜா காலத்தில் போர் புரிய வீட்டுக்கொரு பிள்ளையை கட்டாயமாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற ஒரு நியதி.அந்தப் போரில் சில நேரங்களில் அவனுக்கு வீர மரணம் நேரும்.. அன்றும் பெற்றவள் பயந்து பயந்து தான் வளைய வந்தாள் இன்றைய நாகரீக மாற்றங்கள் மட்டும் என்ன பெரிதாக செய்து விட்டது? அன்றைக்கு இருந்த அதே நிலை தான்…மீண்டும் அதே பாதுகாப்பின்மை தான். அதே பயம் தான்.இப்படிப் பட்டப் படிப்பு அறிவு நமக்குத் தேவையா? இப்படியாவது கல்வி தேவையா? கல்லூரிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவ மாணவியின் உயிரும் உத்தரவாதமின்றி அராஜகத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட அவலநிலை உருவாகிக் கொண்டு வரும் வேளை இது..! இதிலிருந்து பொறுப்பையோ பாதுகாப்பையோ அந்த நிறுவனங்கள் ஏற்காத போது நாமாவது கவனிக்க வேண்டாமா? தயவுசெய்து அரசியலுள் கல்லூரி மாணவர்களை நுழைக்காதீர்கள். வேரிலே விஷத்தைக் கலந்தது போதும் இப்போது வித்திலும் விஷத்தை ஏற்றாதீர்கள். நாளைய இந்தியா இவர்கள் கையில்…கலப்படமில்லாமல் காக்கப் படட்டும்.. இவர்கள் காணும் உலகம் புதிது. ஆதலால் மாணவர்களே….எழுந்திருங்கள்…உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்…..! கல்லூரி திறக்கட்டும் !

இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே,.உண்மை சூடேற்ற ஆரம்பித்தது…! இது சுட்ட உண்மை ! சுடாத உண்மை இல்லை….!

என்னய்யா…இது நீ பாட்டுக்கு அந்தம்மா கையில் மைக்கை கொடுத்துட்டு வாயைப் பார்த்துட்டு நிக்கிறீங்க ..அந்தம்மா நமக்கு எதிரால்ல பேசிட்டு இருக்கு…போயி மைக்கைப் பிடுங்குங்கப்பு….! கூட்டத்தில் இருந்து ஒரு குரல்.

“அம்மா தாயே ! வீட்டுக்குப் போங்க. உங்களைக் கும்பிடுறோம். அடுப்பிலே சோறு பொங்கி நீங்க தின்னுங்க ! நாங்க உண்ணா விரத மிருந்தால் நீங்க பார்க்காத மாதிரி போங்க !” கூட்டத்தில் முணுமுணுப்பு ஆரம்பமானது.

அட…இருல்ல …எம்மாந்தூரம் போகுதுன்னு பார்ப்பம்……………………போலீசு வேற இருக்கு…அங்கிட்டு காலேஜு பசங்க வேற..பப்ளிக் கூட்டத்தைப் பார்தீல்ல…இப்ப எங்கிட்டிருந்து மைக்கைப் புடுங்குறது….அத்த நீ செய்யலாமுல்ல …பெரீசா சொல்ல வந்துட்டியா ….? மைக்கைக் கொடுத்தவன் தவிக்கிறான்.

இவரு என்ன இப்படிப் பேசுறாரு…இத்த நம்ம தலைவரு கேட்டா உனக்கு சங்கு தாண்டி…! என்று சொல்லிக் கொண்டே நகரந்தான் அவன்.

தலைவா….பார்த்து தல….எதுனா செஞ்சு வெச்சுப்புடாதே…மொதலுக்கே மோசம் போயிருவோம்….என்று மைக்கை வாங்கப் பரபரத்தவர்….திரும்பிப் பார்க்கும் தருணத்தில்..!

“ஊருக்கு உழைத்தால் உதைபட்டுச் சாவாராம்.” சர மாறியாக கருங்கல் வந்து பேசிக் கொண்டிருக்கும் சுலோச்சவின் தலையைப் பார்த்து குறி வைத்து விழுகிறது…!.

எதிர்பாராத தாக்குதலால் அப்படியே மயங்கிச் சரிந்தவளை பார்த்து ஓடோடி வருகிறான் ஆனந்த்.கல்யாணியும் கதறிக் கொண்டு போய் பிடிக்கிறாள்.

ஐயோ….அம்மா…! என் அம்மா மேலே எவண்டா கல்லெறிஞ்சது ? ஆக்ரோஷத்தோடு கேட்டுக் கொண்டே ரத்தம் வழிந்து கொண்டு மயங்கிக் கிடக்கும் அன்னையைத் தாங்கிய ஆனந்தை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கூட்டம்….திரண்டு…..என்னது../ ஆனந்தோட அம்மாவா? என்று பரபரப்போடு செயல் படுகிறார்கள்.

கூட்டத்தில் “மாணவன் கல்லெறிந்து மகளிர் காயம்..” என்று யாரோ பத்திரிகைக்குச் தலைப்புச் செய்தி தந்து கொண்டிருந்தார்கள்.

என்னாது? மாணவன் கல்லெறிந்தானா ..? நல்லாருக்கு நியாயம்….நாம எங்கடா இத்தச் செஞ்சோம்…? நியாயம் சொன்ன ஆனந்தோட அம்மாவைத் தூக்கப் பார்த்தங்கடா….. இந்த விஷயம் காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்தது.

அதற்குள் ஆம்புலன்ஸ் வரவும் , அதில் சுலோச்சனாவை ஏற்றிக் கொண்டு முதலுதவி அளிக்க கல்யாணியும்,ஆனந்தும் தோழர்களும் மருத்துவமனை நோக்கிப் பறக்கிறார்கள்.

நியாயம் தராசில் கனமாக நிற்கத் தொடங்கியது.

ஒரு நிமிசம் யோசித்துப் பாருங்கடா…நம்ம அம்மாவும் இப்படித் தானே? நம்மளுக்கு இது மாதிரி எதிர்பாராமல் தாக்கப்பட்டு உயிருக்கு எதுனா ஆகி போச்சுனா இப்ப நாம துடிக்கிறாப்பல தானே துடிப்பாங்க…அவங்க நியாயத்தைத் தான் பேசினாங்க….! அவங்க பேசினது தான் நிஜம். மாணவர்களின் மனங்கள் மருத்துவமனை நோக்கித் திரும்பியது.

பாரதக் குருச்சேத்திரக் களத்தில் கிருஷ்ண பராமாத்மா “போருக்குப் போக வேண்டும் அர்ஜுனா” என்று கீதை ஓதினார். கலியுகத் தாய் ஒருத்தி கல்லூரி மாணவர் படிக்கும் போது, அரசியல் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று புதிய கீதா உபதேசம் செய்து தலையில் கல்லடி பட்டாள் !

=======================================

வியாழன், 7 மார்ச், 2013

மணிக்கொடி ஏற்றிய வெற்றிக்கொடி ...!




"மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்..."இந்த சாதாரண சினிமாப் பாடலின் அசாதாரணமான வரிகள், ஒவ்வொருவரின் சாதாரண இதயத்திலும் கூட அசாதாரண அதிர்வலைகளை நிச்சயமாக எற்படுத்தி இருக்கும். சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு இந்த வரிகள் தான் ஊக்கபானமாக இருந்திருக்கும்.

இதைப் பற்றி சிந்தனை செய்யும் போதே, சிந்தனைகள் செயலாகி செயல் புத்தகமாகி எழுதிய புத்தகம் அனைத்தையும் தாண்டிச் சென்று புகழ்க்கொடியை விரித்து "வெற்றிக் கொடி " ஏந்தி வெளிவந்து , அதை எழுதியவருக்கு "மலர் மாலையை" அணிவித்து அழகு பார்த்தால்..!
ஆம்...அதுவும் நடந்தது. உண்மையின் அடிப்படையில் செய்யும் இந்த விமர்சனம் நிலைக்கும் என்று நம்புகிறேன் நம்புகிறேன்.

இரவும், பகலுமாக கருமமே கண்ணாக ஊன், உண் மறந்து துயில் துறந்து சமுதாயச் சிந்தனையோடு பல தலை முறைகளுக்கும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு "மணியான சுதந்திர எண்ணங்களை" 'மணிக்கொடி' கதையாக 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வரலாற்றில் இடம் பெரும் வண்ணம் நாவலை எழுதி முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டதும்....அந்த 'மணிக்கொடி' மகளே தன்னை ஈன்ற தாய்க்கு மலர்மாலையை பெற்றுத் தந்து அணிந்தவரை அழகு பார்க்கும் பாக்கியம் எழுத்தாளருக்கு மட்டும் தான் கிட்டும் ஒரு வரப்பிரசாதம்.
அந்த இன்பத்தை தமது வாழ்வில் அனுபவித்தவர் பிரபல சமூக எழுத்தாளர், சீரிய சிந்தனையாளர்.'ஜோதிர்லதா கிரிஜா' அவர்கள் என்று இந்த உலக மகளிர் தினத்தில் சொல்லிப் பெருமைப் படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவலால், நாடகங்கள் என்று எழுத்தோடு வாழ்வை பின்னிக் கொண்ட "சாதனைப் பெண்மணி"
காலங்களைக் கடந்து பேசப்படும் பொக்கிஷமான 'மணிக்கொடி' என்ற புத்தகத்தை தன் வாழ்நாளின் சாதனையாக எழுதிப் படைத்தவர்.

சிதம்பரம் அண்ணாமலைச் செட்டியார் பரிசும், விருதும் பெற்றது மணிக்கொடி.ஏதோ...பிறந்தோம்....இருந்தோம்...வாழ்ந்தோம் என்று மட்டும் இல்லாமல் 'நாட்டுக்கு நீ என்ன செய்தாய்'..? என்ற கேள்விக்கு இடம் வைக்காமல் 'நாட்டுக்காக இவர் இதைச் செய்தார்..' என்று சொல்லும் பட்டியலில் இவரது 'மணிக்கொடி'யே ...'தாயின் மணிக்கொடி பாரீர்' என்று 'வெற்றிக் கொடியை ' உயரே பிடித்தபடி, தன்னையும் உயர்த்தி தன்னைப் படைத்தவரையும் உயர்த்தி நிறுத்தும் போது ...மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்மணிகளை நினைவு கூர்ந்து வாழ்த்துச் சொல்லும் விதமாக என்றென்றும் அழியாப் புகழ் கொண்ட எழுத்தாளர் 'ஜோதிர்லதா கிரிஜா ' அவர்களுக்கு வாழ்த்துக் கூறி நல்லாசிகள் வேண்டுவோம்.

வல்லமைப் பெண்மணி பவளசங்கரி..!


Pavala Sankari
பாரதி கண்ட புதுமைகளை 
கனவுகளாய்  மறையாது 
நிழலாய் கண்ட மாதருக்குள் 
நிஜமாகக் நிமிர்ந்திடத் தானோ 
அழகாய் எழுந்தவள் நீ..!

நமக்கேன் வம்பென பேசாமல் 
'சரவணன் மீனாட்சி'யில் மனம் மகிழ 
புரட்டு சீரியலுள் புதைந்து போகாமல் 
அகத்து பெண்மணிகளின் வல்லமையை 
கோபுரத்திலேற்றிக்   காட்டிய 
சாபமெனும் பெயரில் கல்லெனக் 
கிடந்திடாத வல்லமைத் தடம் 
பட்ட இன்னுமோர் அகலிகை நீ..!

உறங்கிக் கிடக்கும் உயிர்களுக்குள் 
உரத்தைத் தூவி உயிர்ப்பை இருத்தி  
கடலுக்கடியில் பாறையாய் பதுங்காது 
வெட்ட வெளியிலே ஊர்வலமாக்கி 
உன்னதத்தின் மேன்மைகளை 
உழைப்பவளின் உன்னதத்தை 
பேனா முனையில் எழுத்தாண்டவள் நீ..!

புத்தாண்டுப் பரிசுகளாய் 
'விடியலின் வேர்'களை  வெளிச்சத்துக்கு 
அழைத்து வந்து - பெண்மை வாழ்க..!
எனக் கூத்திட்டு  - சக்திதனை 
நிர்கதியென நிறுத்தாது..!
வானம்பாடியாக்கி  திக்கெட்டும் 
பறை சாற்றிய இலக்கிய தேவி நீ..!
      
ஓயாத உழைப்பில் 
தன்னலமற்ற தியாக தீபமேற்றி 
சாதனைப் பெண்களின் அணிவரிசையில் 
தீபம் ஏந்தும் பவளம் நீ ..! 
வல்லமைக்கே ஒளி கொடுக்கும்
இன்றைய உலக மகளிர் தினத்தில் 
உந்தன் சிந்தனைக செயலாவதில் 
செருக்கடைகிறது எந்தன் மனம்..!
உயரட்டும் உந்தன் கொடி பவளசங்கரி..!

=======================================