வெள்ளி, 23 மே, 2014

என் பார்வையில் கண்ணதாசன் – ஆயிரத்தில் ஒருவன்

வாணியைச் சரண்புகுந்தேன்
-ஜெயஸ்ரீ ஷங்கர்kannadasan - jayasri

முன்னுரை
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ‘இல்லை’ என்ற பதிலே என்னுள்ளிருந்து வந்தாலும், அவரது எழுத்தின் பரம ரசிகை என்ற அந்த ஒரு தகுதி  போதாதா, என்று என்னையே நான் தேற்றிக் கொள்கிறேன். ஊர்க் குருவி ஒன்று உயரப் பறக்கும் பருந்தானதாக எண்ணம் கொண்டு சின்னஞ் சிறிய சிறகுகளை  விரித்து வானத்தைப் பார்க்கிறேன். சரி…எழுதலாம்.
எனது தந்தை திரு. பேரை. சுப்ரமணியன் அவர்கள் கண்ணதாசனின் நண்பராம். ஒரு சமயம், மதராஸில்  இருந்து 1965-இல் கவிஞர் செகந்திராபாத் வந்திருந்த போது எங்கள் வீட்டுக்கும் நண்பர் எனும் முறையில்  எனது தந்தையைக் காண வந்திருந்தார். அப்போது நான் சிறுமி.  கவியரசர் எங்கள் இல்லம் வந்திருந்த அந்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து’ என்று மானசீகமாகக் கவியரசர் கண்ணதாசன் அவர்களையே வணங்கிக்கொண்டு எனது பார்வையில்  அவர்களின் பன்முகங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.
வானவில் ஒன்றுதான் அதில் வண்ணங்கள் ஏழு; ஸ்வரங்கள் ஏழுதான் அதனுள் பிறப்பது எத்தனை ராகங்கள்? அது போலத்தான் கவியரசருக்குள் பல மனங்கள்.
அவர் தனது வாழ்நாளில் பல அவதாரங்கள்  எடுத்து வாழ்ந்திருப்பது கவிஞரின் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம் ஆகும். என்னைப் பொறுத்தமட்டில், கண்ணதாசன் என்னும் அந்தக் கோடிப் புண்ணியம் செய்த ஆன்மா, வெறும் மானிடன் அல்லன்! அதையும் தாண்டித் தனது பிறப்பைப் பல்லாண்டு காலங்கள் உயிர்ப்புடன் இருக்க வரம் கொண்டு வந்த கர்மயோகி!
கலியுகத்துக் கண்ணனின் மற்றுமொரு அவதார புருஷராகவும் அவரை எடுத்துக் கொள்ளலாம். கண்ணன்பால் அவர் கொண்ட அன்புக்கும், சரணாகதிக்கும் அவரின் எழுத்துகளே சாட்சி. கண்ணனைச் சாமான்ய மக்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான்.
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக்
 கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்…”
என்ற பாடல் ஒலிக்காத மனங்களும் உண்டா?
ஒரு சராசரி மனிதன்,  எண்ணங்களையே அஸ்திவாரமாகக்  கொண்டு, எண்ணங்களையே  வண்ண வானவில்லாக மாற்றி வானம்தொட்ட அவரது இலக்கையும் கடந்து நின்றது சத்தியமே. எந்த முகத் திரையும் இன்றி, தனக்குள் இருந்த நல்லவனும், தன்னை வழி நடத்தும் தீயவனும் எல்லாம் நானே என்று பகிரங்கமாகத் தன்னைத் தானே விமரிசித்துக் கொண்ட புனிதன் அவர்.
எல்லோரும், ’ஊரே  தன்னை நல்லவன் ’என்று போற்றி மதிக்க  வேண்டும் என நினைக்கும் மனிதர்களிடையே,  “எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்; ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு” என இத்தனை ஆணித்தரமாகத் தனது அனுபவத்தை மற்றவர்க்கு அனுபவப் பாடமாக  எடுத்துச் சொல்லும் தைரியம் எத்தனை மனங்களுக்கு கைவல்யமாகும்? சிந்தித்துப் பார்க்கிறேன்.
’எனது பார்வையில் கண்ணதாசன்’ என்பவர் யார்? அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதைத் தவிர,  ஒரு இலக்கியவாதி, சிந்தனையாளன் என்பதையும் மீறி, மனிதனுக்குள் இருக்கும் தேவையற்ற ‘நெஞ்சத்து நஞ்சாகிய’  தீய குணங்களை மனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்ததால், அவருக்குள்  இறைவனே குடி கொண்டார்!
ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது!
ஒரு எண்ணத்தின் அவதாரம் அத்தனை வடிவங்கள் பெறும்போது, அந்த எண்ணங்கள் கைவரப் பெற்றவர் எத்தனை பக்குவம் பெற்றவறாயிருந்திடல் வேண்டும்?  அப்பேர்ப்பட்ட அவரது எழுத்துகளைப்  படிக்கப் படிக்க ஆனந்தம் மனத்தை ஆளுகிறது!
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
என்று சொன்னவர் தான் அவர். ஆனால், படைப்பது மட்டுமா செய்தார்? அவரது திரையிசைப் பாடல்கள் எத்தனையோ நெஞ்சங்களை வாழ வைத்துக் காத்து இரட்சித்திருக்கிறது. அவரது சிந்தனை எத்தனையோ நெஞ்சங்களில் ஊடுருவிச் சென்று அதனுள் கிடந்த நஞ்சுகளை வெளியேற்றி அழித்திருக்கிறது. இன்றும் காலத்தைக் கடந்து  அதன் செயல்பாடு நடந்து கொண்டே இருப்பதால், கண்ணதாசன் மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவே தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னாலும், அது மிகையாகாது.
அவரது எண்ணப்  பொக்கிஷங்கள் நல்ல நல்ல புத்தகங்களாக மாறி , அவரே அவற்றையெல்லாம்  பாரி போல வாரி வாரி வழங்கி இருக்கிறார்.
கோபத்தையும், பொறாமையையும், பேராசையையும் ஒருவர் தன்  இதயத்தின் வெளியில் நிறுத்தினால், அவரின் நெஞ்சம் முழுதும் அன்பு, பாசம், காருண்யம், அமைதி, ஆனந்தம், வீரம், செல்வம், நகைச்சுவை, அழகு  என்று மும்மடங்கு பலன் குடி கொள்ளுமாம். இதைச் சிறப்பாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அனுபவ ஏட்டில் பொறித்து நமக்குத் தந்த காலத்தைக் கடந்து வாழும் சித்தர் அவர்.
சாதாரணமாக, புதிய பாடல்கள் பிறந்ததும் பழைய பாடல்கள் மறக்கப்பட்டு   விடும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது கவிதை நயமும், உணர்வுப் பிரயோகமும் தான் காரணம் ஆகும்.
கவியரசர்  தமது  வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளைப் பல்வேறு சூழ்நிலையில் திணித்துப் பாடலாக வடித்தார். அது எந்தவொரு  சராசரி மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்துடனும்  இணைந்துவிட்டதால், ஒவ்வொரு பாடலும் ரசிகர்களாகிய நம் மனதை விட்டு இன்றளவும் நீங்காது பதிந்து விட்டது.
காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசனைப்  போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அதற்கும் வழியிருக்காது…எத்தனை உயர்ந்த தர்மங்கள் செய்தவர், பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்.  எனக்கான நிறைவு என்னவென்றால், அவர் வாழ்ந்திருந்த காலத்தில் நானும் வாழ்ந்து வந்தேன் என்பது தான்!
காதலும், கண்ணதாசனும் கடலும் அலையும் போல ஒன்றிணைந்தவர்கள் என்பது நாமறிந்ததே. காதலையே உயிர்த் துடிப்பென கொண்டவர் கவியரசர். காதலின் அத்தனை பரிமாணத்தையும் ரசித்து, உணர்ந்து, தேன்கூடாகக் கட்டி வைத்தவர். காதலென்ற மாய உணர்வுக்கு இதயத்துக்கு இதயம் உருக்கொடுத்த பிரம்மன்! அவர் எழுதிய வரிகளில் இல்லாதவை எதுவும் காதலிலேயே இல்லை எனலாம். காதலின் கர்ப்பக்கிரகம்வரை சென்று வந்து எழுதியவர்  நமது கண்ணதாசன்!
’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’
இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை  இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.
உடலுக்குள் குருதிக்கு பதிலாக எண்ணங்களே ஓடத் தமது எழுதுகோலுக்குள் உணர்வுகளை நிரப்பி அத்தனை உணர்வுகளையும்  அருவியெனக்  கொட்டித் தீர்த்தவர் அவர். அவரது ஒவ்வொரு படைப்பிலும் சமூகச் சிந்தனை நிறைந்திருக்கும். சோர்ந்த இதயங்களைத்  தமது   எழுத்தைக் கொண்டே உற்சாகப்படுத்துவார்.  எவரது கற்பனைக்கும் எட்டாத வார்த்தைகள் கூட அவருக்கு கிட்டும்!
அவரது திரையிசைப் பாடலுலகில்  பல்லாயிரக்கணக்கான பாடல்களுள் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற நிலை உருவாகும் போது,
உங்களுக்காக நானே சொல்வேன்உங்களுக்காக நானே கேட்பேன்,
தெய்வங்கள்
 கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா?”
இந்த வரிகளில் திரையிசையையும் மீறி, ஒரு தவிப்பு… மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்ற  கோரிக்கையாக வைப்பார்  கவிஞர்.
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
சொல்லாத
 சொல்லுக்கு விலையேதும் இல்லை
அனைவருக்குமான பொக்கிஷம்  இந்தப் பாடல். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ எனும் போது, சில சமயங்களின் பேசும் மௌனங்கள்  விலை மதிப்பில்லாதது, மேலும்  பெருந்தன்மை என்ற குணத்துக்கும் மகுடம் சூட்டி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார் கவியரசர்.
கடைசியாகக் கவியரசர் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் அவர் தமது ஆழ் மனக் கடலிலிருந்து நமக்கு எடுத்துத் தந்த வலம்புரிமுத்து.
அந்திப்  பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை
  இதைத் தான் கேட்கிறேன்
இந்த வரிகளில் மனம் சொக்கும் இதமான தாலாட்டு தொனிக்கிறது. இன்றும் நம் ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.
கொட்டித் தீர்க்கும் அருவியாய், காட்டாற்று வேகமாய், தெளிந்த நீரோடையாய் அவரது வாழ்வில் தான் எத்தனை சுருதிகள்…நல்ல எழுத்தென்பது அறிவை உழுவதற்குச் சமம். தமது காலம் முடிவதற்குள், அவர் நமக்குத் தந்திருக்கும் பொக்கிஷங்கள் கணக்கிலடங்காதவை. தன்னையே உருக்கி ஒளி தரும் மெழுகுத்திரியாகி  இரவும் பகலுமாக எழுதியெழுதித்  ‘தானம்’ செய்த பரந்தாமன்.
இப்போது திரைக்குப் பாடல் எழுதக்கூட இங்கே கவிஞர் தட்டுப்பாடு. ஒரு பெரிய இலக்கிய ராஜவீதியிலிருந்து மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுவிட்டோம். இதன் முடிவு…நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பை இன்றைய இளைஞர்கள் இழந்து விட்டனர். பொருள் பொதிந்த பாடல்கள், சிந்தையைச் சீர் செய்யும் நளினங்கள் எதுவுமின்றிக் கேட்கப்படும் இசைக்குள் தொலைந்து போகிறார்கள். ஒரு சமுதாயச் சீர்கேடு மெல்ல உருவாகி வருகிறது. பாசத்தைப் பக்குவமாகச் சமைத்து விருந்து படைத்துக்கொண்டிருந்த ‘அன்னபூரணியை’ நாம் இழந்து விட்டோம். ‘அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்!’.
அவரோ பெரிய விழுதுகள் தாங்கிய ஆலமரம். இன்றோ, நாம் அந்த மரத்தின் மகாத்மியத்தைப் பற்றிப் பேசிச் சிலிர்க்கிறோம்.
அர்த்தமுள்ள இந்துமதம்: ஒரு மதத்தின் தன்மையை, புனிதத்தை ஆராய்ந்து அவரவரின் கடமைகளை வகுத்துச் சொன்னது.
குடும்ப சூத்திரம்: அந்தரங்கம் பற்றிய தொகுப்பு; குடும்பத்துக்கு வழி சொல்லியது.
அனுபவ மொழிகள்: சிந்தையைத் தூண்டும் ஆரோக்கிய பானம்.
பகவத் கீதை: இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளியை நீக்கியது.
மனவாசம் , வனவாசம்: கவிஞரின் மனத்தை, வாழ்க்கையை அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நமக்குக் காட்டிய சரித்திரம்.
கடைசிப் பக்கம்: வாழ்வியலை நடைமுறைக்கு எளிமையாய்ச் சொல்லித் தருவது.
ஜாதி, மத பேதமின்றி குரான், இயேசு காவியம்  என்று அவர் தொட்டுச் செல்லாத இலக்கியப் படைப்புகள் இல்லையே. அவரது படைப்புகளுக்கு நிகர் அவரே.
முடிவுரை
அவரைப் பற்றி எழுதும் போதே இதயம் புல்லரிக்கிறது.  ’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது’;  எனது பார்வையில் கண்ணதாசன் ஆயிரத்தில் ஒருவனாக, கடையெழு வள்ளலைப்போல் ‘கலியுக வள்ளல்’ என்பேன்.

ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்

வியாழன், 22 மே, 2014

அவள் மனது பூ..!



அதிகம் பரிச்சயமில்லாத ஒரு குரல், நான் இருக்கும் வீட்டிற்குக் கீழ் வீட்டிலிருந்து அடிக்கடி ஒலித்ததும், யாராக இருக்கும்? என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அதற்குக் காரணம் அந்தக் குரலில் இருந்த ஒரு வித்தியாசம் தான்.அந்தக் குரலைக் கேட்கும் போது ஏனோ மனசுக்குள் ஒரு சோகம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.அன்று மதியமே அந்தக் குரலுக்குரிய பெண்ணைப் பார்க்கும் சந்தர்ப்பம் தானே நிகழ்ந்தது.


எனக்கு ஏனோ 'மாயாவி' என்ற தமிழ் படத்தில் வரும் பாடல், 'கடவுள் தந்த அழகிய வாழ்வு நினைவில் வந்து மோதியது. நான் இதுவரையில் சொல்லி வந்ததும், இப்போது சொல்வது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள்.2006 -இல் பெங்களூருக்கு என் அக்கா, அவரது இரண்டு வயதுப் பெண் குழந்தை காயத்ரி, நான் மூவரும் (என் அக்காவின் காலேஜ் விஷயமாக ஒரு மீட்டிங் சென்ற போது குழந்தையைப் பார்த்துக் கொள்ள நானும் ) சென்றோம். பெங்களூரில் இருக்கும் கிறிஸ்டியன் காலேஜ். அங்கு வளாகத்தில் இருந்த அறை எங்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. கையில் ஒரு சின்ன டேப் ரிகார்டர் மட்டும் எடுத்துச் சென்றிருந்தோம். கேசட்டுகள் ஒன்றுமில்லை. பெங்களூரில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தன். அன்று பகல் பொழுது முழுவதும் அறையில் அடைந்து கிடைக்காமல் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினேன். அருகில் இருந்த அய்யனார் கோயிலுக்குச் சென்று வரும்போது, ஒரு கடையில் கேசட் ஏதும் இருக்கா? என்று கேட்டதும், அங்கிருந்தவர் எடுத்து பட்டென்று வைத்தார்...அதில் 'மாயாவி' என்று எழுதி இருந்தது. வாங்கிக் கொண்டேன்.

அவ்ளோதான்..அந்த கேசட்டைப் போட்டதும், இந்தப் பாடல் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு...' கல்பனாவின் குரல்...எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது..என்று நான் நினைத்துக் கொண்டேன். அத்தனை அற்புதமான வரிகள். மென்மையான இசை. இதைவிட என்ன வேண்டும். காட்சிகள் இல்லாவிட்டாலும் பாடல் இனிமை. அந்தப் பாடல் முடிந்து 'காற்றாடி...என்று வரும்...குழந்தை..உடனே..அந்தப் பழைய பாட்டை மட்டும் போடு என்று தொடர்ச்சியாக அடம் பிடிப்பாள். நானும் அந்த ஒரு பாட்டை மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அங்கிருந்த கிட்டத்தட்ட நான்கு நாட்களும் இந்த ஒரு பாட்டை மட்டும் தான் கேட்டபடி இருந்தோம். அப்படி என் மனசுக்குள் நுழைந்து கொண்ட பாடல். அதன் பின்பு பெங்களூரை விட்டு வந்ததும் அந்த இடத்தோடு அந்தப் பாடலையும் மெல்ல மறந்து போனேன்....காலங்கள் 8 ஆண்டுகள் ஓடிவிட்டது. அதன் பின்பு அந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பும் வாய்க்கவில்லை என்றே சொல்லலாம்.

இப்போது விஷ்ணுப் ப்ரியாவைப் பார்த்ததும் என் மனசுக்குள் அந்தப் பாடல் ஒலித்தது. 'பூமியில்..பூமியில்..எனக்கேதும் குறைகள் கிடையாது'...ஆஹா.....எவ்வளவு சந்தோஷமாக சிரித்துக் கொண்டு வளைய வருகிறாள்..என்றும் நினைத்துக் கொண்டேன்.


சின்னப் பெண்ணுக்குரிய தோற்றம்.அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். பார்த்ததும் நம்பவே முடியவில்லை. அவளே குழந்தை..அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளா? இறைவா....உனது கருணை தான் என்ன? உனக்குத் தெரியாதா?யாருக்கு எப்போது என்ன தர வேண்டும் என்று. இந்தப் பெண்ணுக்கு நீ ஒருவேளை,பெண் குழந்தைகளைக் கொடுத்திருந்தால், அந்தக் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் இந்தப் பாழும் சமூக அமைப்பிலும், சிந்தனையிலும் சங்கடங்கள் வந்து சேரலாம். அனைத்தும் அறிந்தவன் நீ..உனது தீர்ப்பில் நீ என்றுமே கெட்டிக்காரன்.

அவளது இரண்டு குழந்தைகளும், மணி மணியாக இருந்தனர். அவர்களது கொண்டே இருக்கலாம் போலிருந்தது. குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது பூரா பூரா அவளது அம்மா தான். "அம்மம்மா..அம்மம்மா.." என்று இரண்டு பேரும் அவர்களைத் தொந்தரவு செய்யும் போதும் பொறுமையாக அவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் நேர்த்தி, எனக்குள்..இன்னும் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது இந்த உலகத்தில்...கற்றுக் கொள் ...இவர்களிடமிருந்தே ஆரம்பி...என்ற மனவொலி என்னுள் அதிகாரம் செய்யும்.

உங்க பேர்என்ன சொல்லுங்கோ....?

நான் பெரியவன்...என் பேரு அர்ஜுனா...
உடனே....
நான் சின்னவன், என் பேரு ஆர்யா...
குழந்தைகள் முந்திக் கொண்டு பேர் சொன்னது.
நான் சிரித்துக் கொண்டேன் ...'நல்ல நல்ல பேர் ரெண்டு பேருக்கும்'
எங்கம்மா பேர்...எங்களோட பேரை விட நல்ல பேர் தெரியுமா?
தெரியாதே....?
"விஷ்ணுப் ப்ரியா "
'ஓ ....ரொம்ப நல்ல பேரு தான்...எனக்கும் பிடிச்சிருக்கு'
அப்போ...உங்க பேரு என்ன சொல்லுங்கோ..." மழலைகள் கேட்டனர்.
"ஜெயஸ்ரீ"
நாங்க 'ஜெயா ஆன்டி 'ன்னு கூப்பிடறோம்...
ரொம்ப சந்தோஷம்....நிஜமாகவே ரொம்ப சந்தோஷமான தருணங்கலளாகத் தான் இருந்தது. அந்தக் கடந்து போன சில நிமிடங்கள். அதற்குள்,

'அர்ஜுனா.....ஆர்யா...என்ற குரல் கீழிருந்து வந்ததும், இருவரும் நான் கொடுத்த ஜூஸை வேகமாகக் குடித்து விட்டு மறக்காமல் அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த 'ஹோலி கன் 'னை (அது ஒரு ஹோலி பண்டிகை சமயம்) எடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.

குழந்தையும் தெய்வமும், கொண்டாடும் இடத்திலே....ன்னு மனசுக்குள் ஒரு சந்தோஷம். அதே சமயம் குழந்தைகளின் தைரியம், சுறுசுறுப்பு இதைக் கண்டு எனக்கு ஆச்சரியம் எழுந்தது.
சிறிது நேரத்தில் அவள் என் வீட்டுக்கு வந்தாள் .
"குழந்தைகள் உங்களைப் படுத்தினார்களா"..? அவள் இந்த ஒரு வார்த்தையைப் பேசி முடிப்பதற்குள் எனக்குள் ஏகப் பட்ட வேதனை. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,அவள் இதைத் தான் சொல்லியிருப்பாள் என்று உணர்ந்து புரிந்து கொண்டு..'இல்லையே' என்றேன்.

அவர்களுக்கு இங்க வர ரொம்ப பிடிச்சிருக்காம்....மீண்டும் அதே வேதனை என்னுள். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையையும் அவள் மிகவும் கஷ்டப்பட்டுப் பேசுகிறாள். அந்த வேதனை அவளது தொண்டையின் அசைவில் தெரிகிறது. மேலும் அவ்வளவு கஷ்டப்பட்டு பாதி வார்த்தை தான் வெளியில் கேட்கிறது,. இது எவ்வளவு கொடுமை....தெரியுமா.

சரி..நீங்க கஷ்டப் பட்டு பேசாதீங்க...சொல்ல வார்த்தை துடித்தன..ஆனாலும் அவள் பேசட்டும்....அவளது உணர்வுகள் இங்கு வந்து கொட்டப் படட்டும் என்று பேசாமல் இருந்தேன்.

அடுத்தடுத்த அவளுடைய வருகையில், எனக்கு அவளது பேச்சை எளிதாகப் புரிந்து கொள்ள இயன்றது..ஒரே தடவையில் சற்றும் சிந்திக்காமல் அவளுக்கு பதில் சொல்ல முடிந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அதே சமயம், இது இறைவன் கொடுத்த வரம்...என்று நினைத்துக் கொண்டேன்.அவனை விட என்னை வேறு யார் புரிந்து கொள்ள முடியும்?

நானும் நிறைய விதமான மாற்றுத் திறனாளிகளைப் பார்த்துப் பழகி இருக்கிறேன்.
அப்போதெல்லாம் கூட மனதுக்குள் சோகம் எழும், அழும்.
அப்படி நான் நெருங்கி அமர்ந்து பேசிய மூவரில் மனதைப் பிழிந்து இறைவன் மேல் கோபம் வந்தது அந்த மூவரையும் பார்த்துத் தான் . முதலில், அம்ருதா ...(நாடோடிகளில் நடித்தவர்) நடிகர்.திரு.குமார் அவர்களின் புதல்வி.
அப்போது அவர் நாடோடிகள் நடித்து வெளிவந்த புதிது. அவருக்குத் தெரிந்த உறவினரும் எங்கள் குடும்ப நண்பரும் ஒருவரே என்பதால் அம்ருதாவின் அண்ணன் கல்யாண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். 2009 என்று நினைவு. ஹைதராபாத்தில் அவர்கள் 'தாரனாக்கா "என்ற பகுதியில் வசிப்பவர்கள். அங்கு ஒரு பெரிய நட்சத்திர உணவகத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அந்த விழாவில் ஓடியாடி ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் வீடியோப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார் அம்ருதா . அவரை நான் அதற்கு முன்பு நேரில் பார்த்ததில்லை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் பரிசு பெற்ற பெண் இவர்தான் என்றார்கள்..நான் அதிகம் தொலைகாட்சி நிகழ்சிகள் பார்ப்பதில்லை என்பதால் அதுவும் எனக்குத் தெரிந்திருக்க அன்று வாய்ப்பில்லை.இருந்தாலும் ,அவர்களிடம் சென்று வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வரலாம் என்று அருகில் சென்று, எனது வாழ்த்தைச் சொன்னேன். அவர்கள் பேசியது இன்றும் எனது காதில் ஒலிக்கிறது. அந்த மொழிக்கு வார்த்தை இல்லை.
அரை ஓசை தான். வெறும் காற்றோடு லேசான அதிர்வு. தனது பெயரை எனக்குப் புரிய வைக்க இயலாமல் திணறினார். ஆனால் நான் பேசுவதை எந்த பிரச்சனையும் இன்றி சரியாகப் புரிந்து கொண்டு சிரித்தார். அவர் சிரிப்பில் அத்தனை தெய்வீகம். அவர் முகம் சாந்தம் தவழும் நளின முகம். காது கேட்காது.வாய் பேச முடியாது என்ற உண்மை என்னுள் ஆயிரம் வாட்ஸ் ஆக அடித்தது.அன்று அங்க சாப்பிடவும் முடியவில்லை. அன்று உறக்கமும் வரவில்லை. இறைவா....உனது படைப்பின் ரகசியம் தான் என்ன? அத்தனை அழகைக் கொட்டிக் கொடுத்து விட்டு வேண்டியி இரண்டைப் பறித்துக் கொண்டாயே....என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..என்று வாதிட்டேன். வரை அவரைச் சுற்றியுள்ள சொந்தம் மொத்தமும் , இறைவனிடம் இப்படித் தான் சண்டை போட்டிருக்கும்.

இப்போது இரண்டாவதாக , ராஜி என்னும் ராஜேஸ்வரி. (இரண்டு கண்களும் தெரியாதவர்) வாழ்வது. திண்டிவனம். ஆசிரியை.

2012இல் நடந்த ஆசிரியர் தேர்வு எழுத அவர்களும் பாண்டிச்சேரி வெற்றி வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு வந்திருந்தார். அப்போது அங்கு நான் எனது அக்கா (அப்போது அவர் அங்கு முதல்வர்) வுக்கு உதவிக்குச் சென்றிருந்தேன். பரீட்சை துவங்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்த சமயம் பார்த்து , 'ஒரே ஒருத்தர் இரண்டு கண்களும் பார்வையற்றவர், தேர்வெழுத வந்துள்ளார்.அவர்களுக்கு உதவி செய்ய யாருமில்லை என்றார்கள். என் அக்கா என்னிடம், நீ செய்கிறாயா? நீ கேள்வியை வாசித்தால் போதும், சிறிது நேரம் கொடுத்ததும் அவர் சொன்ன பதிலில் மை கொண்டு நிரப்பி விடு. வெறும் 100 கேள்விகள்...காலை மாலை இரண்டு வேளை மட்டும் தான் ஆசிரியர் பரீட்சை. என்றார்.நானும் சரியென்று சொல்லிவிட்டேன்.


தேர்வெழுத வந்திருந்தவர் ராஜலக்சுமி என்கிற ராஜி. அவர்களுக்கு கண்கள் தெரிவதில் மட்டும் தான் குறைபாடு. கற்பூர புத்தி. கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் டாண் டாண் என்று யோசிக்கவே இடம் கொடுக்காமல் பதில் சொன்னார் பாருங்கள். மனசுக்குள் மிகுந்த சந்தோசம் எனக்கு. நானும் கேள்வியைக் கேட்டுவிட்டு இதற்க்கு என்ன பதிலாக இருக்கும் என்று தெரியாமல் யோசிப்பேன். அவர் ஆணித்தரமாக பதில் சொல்லிவிடுவார். அது எனக்கு ஒரு புதுவித ஆபவமாக இருந்தது. அவரோடு அன்றைய நாள் முழுதும் கூடவே இருந்தேன். எத்தனையோ விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலிருந்து ஒரு நட்பு எங்களுக்குள் உருவானது. 'எனக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷமாச்சு , இன்னும் குழந்தையில்லை...' என்று வருத்தப் பட்டார். கண்டிப்பா கூடிய சீக்கிரம் நல்ல தகவல் சொல்லுவீங்க...என்றேன்...அப்படியா? என்று சொல்லிவிட்டுப் போனார். நடுவில் அடிக்கடி என்னை அழைத்துப் பேசுவார்.அவரது கணவர் திரு.ரமேஷ் அவர்களும், லெக்ச்சரர் , வள்ளுவன்பார்வையில் (இணைய குழுமம்)இருப்பவர். ராஜி, அவர் எழுதிய பரிச்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று விட்டார் என்பதை மகிழ்ச்சியோடு தெரியப் படுத்தினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நாள் தான் தாய்மை அடைந்திருப்பதைச் சொல்லிச் சிரித்தார். பின்னொரு நாளில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லி மகிழ்ச்சியோடு சொன்னார்கள். அவர்கள் இருவருமே பார்வை இழந்தவர்கள் தான். என்றாலும் அவர்களது அகத்தின் பார்வை சூரிய ஒளியை மிஞ்சிவிடும் என்று தன சொல்ல வேண்டும். இன்றும் ராஜியின் குரல் எனக்கு ஒரு வைட்டமின் மாதிரி ஊக்கமளிக்கும்.


இப்போது இவர்..விஷ்ணுப்ரியா.:


இரண்டாவது முறை வந்ததும், தரையில் தண்ணீர் கொட்டிக் கிடந்ததைப் பார்த்து விட்டு தானே வேகமாக உள்ளே சென்று ஒரு துணியைக் கொண்டு வந்து துடைக்க ஆரம்பித்தாள் .

ஹேய்...என்ன பண்றேள்? வேண்டாம்...நானே துடைக்கிறேன், என்று ஒரு பதட்டத்தில் நான் அவரது கைகளைப் பிடிக்க.


ஆன்டி ...உங்க பொண்ணா இருந்தா நீங்க இப்படிச் சொல்வேளா ?


எனக்கு ஒரு கணம்....என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எத்தனை நல்ல உள்ளம்....ஒரு சொந்தமாக என்னைக் கொண்டாடிய விதம் என்னை சிலிர்க்க வைத்தது.


சரி....நீயே துடை...என்று ஒருமையில் சொன்னேன். என் பெண்ணாக இருந்திருந்தால் இப்படி வாங்கோ போங்கோன்னு சொல்ல மாட்டேன் இல்லையா? என்றேன்.


அவளது மலர்ந்த சிரிப்பில் ஒரு நிறைவிருந்தது.


அதன் பின்பு தினமும் வரத் துவங்கினாள். அவளுக்கு சொல்ல வேண்டியது நிறைய இருப்பது போல பேசிக் கொண்டே இருப்பாள். நானும் அதற்கு சரியான பதிலைச் சொல்லிவிடுவேன். அப்போதெல்லாம் அவளது புத்திசாலித்தனம் வியந்திருக்கிறேன். நல்ல நல்ல விஷயங்களைப் பேசுவாள். கேட்டுத் தெரிந்து கொள்வாள்.


என்ன ஆன்டி ...ஜாஸ்தி நேரம் ..கணினி முன்னாடி தான் இருக்கேள்?


ஏதோ கொஞ்சம் எழுதுவேன். அதான்.


என்னவெல்லாம் எழுதுவேள் ? கேட்டுக் கொண்டே எனது மடல் பெட்டியைப் பார்த்தாள். எனக்குத் தமிழ் படிக்க வராது ஆன்டி ..வெறும் இங்கிலீஷ், ஹிந்தி தான்.நீங்க தமிழ் சொல்லித் தாங்கோ.


அதுக்கென்ன சொல்லித் தரேன். என்று நான் சொன்னதும் ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு 'கொஞ்சம் இருங்கோ வரேன்' என்று கிளம்பிவிட்டாள்.


அடுத்த ஐந்து நிமிஷத்தில் கையில் ஒரு புத்தகம்...'இது என் தோழன் எழுதியது..குமரன்...நான் கும்கி ன்னு கூப்பிடுவேன்' இந்தாங்கோ..இதையும் படிங்கோ..சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனாள்.


அட்டைப் படத்தில் சக்கர நாற்காலில் குமரன். அந்தப் புத்தகத்துள் அவர் அதுவரையில் வாழ்ந்திருந்த வாழ்கையின் பதிவுகள், அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் என்று...வாழ்கையின் புதிய கோணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.


ஆச்சு..அதன் பின்பு இரண்டு நாட்கள் அவள் மேலே என் வீட்டுக்கு வரவேயில்லை. அதன் பின்பு ஒரு நாள் வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனாள் . நானும் அவளது வரவுக்காக ஆவலுடன் காத்திருந்ததால் நிறைய பேசினோம்.

என்னிடம் சொன்னாள் , நீங்கள் என்னை பற்றியும் 'biography ' எழுத வேண்டும். எனது வேண்டுகோள் என்றாள்.

'சரி' என்று சொல்லி வைத்தேன்.


அந்தப் புத்தகம் படிச்சாச்சா? என்றாள் .



ஒவ்வொரு வரியும் அழகாக எழுதி இருக்கிறார் குமரன். பாதி படித்து விட்டேன்.இன்னும் பாதி இருக்கிறது..படித்து முடித்ததும் தருகிறேன். இன்று இரவு முடித்து விடுவேன் என்றேன்.


சரி..என்று சிரித்தாள். கிளம்பிச சென்றாள்.


அவள் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு சமயமும் ஒரு நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். தேவையான அத்தனை விஷயங்களையும் பற்றி தெரிந்து வைத்திருந்தாள்.கணினி, மின் உபகரணத்தின் வேலைப்பாடுகள், ஐ பாட் , டேப்லெட், ஜூயூக் பாக்ஸ் என்று நிறையவே பேசினாள் ,

அன்றிரவு அந்தப் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பாதியைத் தாண்டியதும் தான் அந்த ஆச்சரியம் காத்திருந்தது.


தான் 'கும்கி' என்று குமரன் எழுதிய புத்தகத்தில், விஷ்ணுப்ரியா தனது தோழி என்றும், 'மாயாவி என்ற திரைப் படத்தில், 'கடவுள் தந்த அழகிய வாழ்வு; பாடலில் புகழ்ந்து எழுதி இருந்தார். மேலும், ஐஸ்வர்யா என்ற தொலைக்காட்சி சீரியலிலும் நடித்தவர் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. எனக்குள் ஆச்சரியம்.

ப்ரியா, சினிமாவில் நடித்தாளா...? திரைப்படம் பார்க்காததால் தெரியவில்லை.

மேலும்,அன்று அந்தக் கேசட்டின் அட்டைப் படத்தில் ஜோதிகா மற்றும் சூர்யாவின் படங்கள் தானே இருந்தது..என்று நினைவுக்குக் கொண்டு வந்தேன்.


இணையத்தில், மாயாவி என்ற தலைப்பில் யூ ட்யூப் போட்டுப் பார்த்ததில், அந்தப் பாடல் காணொளியாக விரிந்தது. நான் பல முறைகள் கேட்ட பாடலை முதல் முறையாக படமாகப் பார்த்ததும், அதில் விஷ்ணுப்ரியா..! ஆம்...அவளே தான்...!

அந்தக் குரலுக்கு நடித்துக் கொண்டிருந்தாள். எனக்குள் மௌனம் கரைந்தது.

கண்கள் பனித்தது. 'ஆம்......கடவுள் தந்த அழகிய வாழ்வு..." என் ஆத்ம கீதத்தின் கதாநாயகி, நான் ரசிக்கும் குரலுக்குச் சொந்தமான கல்பனா..என்று பாடல் மீண்டும் என்னைத் தொற்றிக் கொண்டது.


அடுத்த எனது சந்திப்பில், என்ன ப்ரியா....சொல்லலை...ரொம்ப இனிமையான அதிர்ச்சி தந்திருக்கே...என்றேன்.


மலர்ந்து சிரித்துக் கொண்டாள் .யார்கிட்டயும் சொல்லவே மாட்டேன் ஆன்டி என்றாள்.


எங்கள் நட்பு தொடருகிறது. இது தான் ஆண்டவனின் ஆசை என்பதும் புரிகிறது.

- ஜெயஸ்ரீ ஷங்கர் -

முதிர்ந்து விட்டால்..!

 
 
 
 
 
 
தென்றலின் வீதி  உலா 
மணத்தைத் தொலைத்தது  
மல்லிகை ..!

கம கமத்தது மரம்
வெட்டுப் பட்டது 
சந்தனம்...!

கொடியை உயர்த்திப் பிடித்ததும் 
வெற்றுக் கொடியானது 
வெற்றிலை..!

தோகை முதிர்வை அறிவித்ததும் 
ஆலையில் சிக்குண்டது 
கரும்பு..!

கர்ப்பகிரஹத்துள் அநீதி 
வெளிநடப்பு செய்தது 
தெய்வம்..!

காற்றால் நகர்ந்தது 
புயலால் புரண்டது 
பாய்மரம் ...!

வெப்பத்தால் பறந்தது 
கனத்தால் விழுந்தது 
மழை..!

மௌனத்தில் பேசியே 
தவம் கலைத்தது 
மேகங்கள்...!

அலைந்து அலைந்து 
வாசம் தேடியது 
தென்றல்..!

உயர்ந்து நின்றாலும் 
என்ன பயன்? அறியாதிருந்தது 
இமயம்...!

தாகம் தீர்க்கவும்
இயலாததை எண்ணியழுதது 
கடல்...!

மண்ணோடு  கிடந்ததை 
தன்னோடு  தாங்கிக் கொண்டது 
மண்பானை....!


சிப்பியில் துளி விழ
மௌனத்தில்  உருவானது
முத்து,


இதயத்தில் அடி 
இமைகள் மூட உருண்டது 
கண்ணீர்..!

ஆகாயத் தாமரைகள் 
அந்தரத்து ஆனந்தங்கள்  
பறவைகள்..!

ஒவ்வொரு ஜீவனின் 
உன்னத எண்ணங்கள் 
புத்தகங்கள்...!

அதுவும் இதுவும்  
அவனும் அவளும் தான் 
உலகம்..!

தடுக்கியதும் தவறியதும் 
சோர்ந்ததும் தூக்கி நிறுத்தும் 
நம்பிக்கை...!

கண் முன்னே 
நம்மைக்  கட்டிப் போடுது 
கணினி..!

உயிர்ப் பழுத்ததும் 
பாசத்துடன் இழுக்கும் 
மரணம்...!

திங்கள் பத்து கழிந்ததும் 
புகுந்தது பூமிக்குள் 
பிறப்பு..!

கரையான் கட்டி முடித்து 
நெட்டி முறித்ததும் புகுந்தது 
பாம்பு...!


தென்றலின் வீதி  உலா 
மணத்தைத் தொலைத்தது  
மல்லிகை ..!

கம கமத்தது மரம்
வெட்டுப் பட்டது 
சந்தனம்...!

கொடியை உயர்த்திப் பிடித்ததும் 
வெற்றுக் கொடியானது 
வெற்றிலை..!

தோகை முதிர்வை அறிவித்ததும் 
ஆலையில் சிக்குண்டது 
கரும்பு..!

கர்ப்பகிரஹத்துள் அநீதி 
வெளிநடப்பு செய்தது 
தெய்வம்..!

காற்றால் நகர்ந்தது 
புயலால் புரண்டது 
பாய்மரம் ...!

வெப்பத்தால் பறந்தது 
கனத்தால் விழுந்தது 
மழை..!

மௌனத்தில் பேசியே 
தவம் கலைத்தது 
மேகங்கள்...!

அலைந்து அலைந்து 
வாசம் தேடியது 
தென்றல்..!

உயர்ந்து நின்றாலும் 
என்ன பயன்? அறியாதிருந்தது 
இமயம்...!

தாகம் தீர்க்கவும்
இயலாததை எண்ணியழுதது 
கடல்...!

மண்ணோடு  கிடந்ததை 
தன்னோடு  தாங்கிக் கொண்டது 
மண்பானை....!

சிப்பியில் துளி விழ  
வாய்மூடி உருவானது 
முத்து..! 

இதயத்தில் அடி 
இமைகள் மூட உருண்டது 
கண்ணீர்..!

ஆகாயத் தாமரைகள் 
அந்தரத்து ஆனந்தங்கள்  
பறவைகள்..!

ஒவ்வொரு ஜீவனின் 
உன்னத எண்ணங்கள் 
புத்தகங்கள்...!

அதுவும் இதுவும்  
அவனும் அவளும் தான் 
உலகம்..!

தடுக்கியதும் தவறியதும் 
சோர்ந்ததும் தூக்கி நிறுத்தும் 
நம்பிக்கை...!

கண் முன்னே 
நம்மைக்  கட்டிப் போடுது 
கணினி..!

உயிர்ப் பழுத்ததும் 
பாசத்துடன் இழுக்கும் 
மரணம்...!

திங்கள் பத்து கழிந்ததும் 
புகுந்தது பூமிக்குள் 
பிறப்பு..!

கரையான் கட்டி முடித்து 
நெட்டி முறித்ததும் புகுந்தது 
பாம்பு...!

கர்ப்பக் கிரஹத்துள் 
அநீதி வெளியேறியது  
தெய்வம்..!

நாற்பது வயதைக் 
கடந்ததும் எட்டிப் பார்ப்பது 
சக்கரை..!

பருவம் தொட்டாள் கன்னி 
உரிமை கொண்டாடினான் 
கணவன்...!

நிலம்  பார்த்துக் கதறியது  
கால் வலிக்குதென்று  
பூக்காத மரம்....!

செய்த தவறுகளை 
சரியாக்கி விடும் 
பரிகாரம்..!

வரவை எண்ணி 
செலவை எண்ணாதவன் 
மூடன்..!

இயற்கையை கன்னியாகக்  
கட்டுக்குள் வைத்தான் 
இறைவன்...!


நாற்பது வயதைக் 
கடந்ததும் எட்டிப் பார்ப்பது 
சக்கரை..!

பருவம் தொட்டாள் கன்னி 
உரிமை கொண்டாடினான் 
கணவன்...!

நிலம்  பார்த்துக் கதறியது  
கால் வலிக்குதென்று  
பூக்காத மரம்....!

செய்த தவறுகளை 
சரியாக்கி விடும் 
பரிகாரம்..!

வரவை எண்ணி 
செலவை எண்ணாதவன் 
மூடன்..!

இயற்கையை கன்னியாகக்  
கட்டுக்குள் வைத்தான் 
இறைவன்...!









புதன், 21 மே, 2014

பிச்சைப் பாத்திரம்



கருவறைக்குள் வாசம் 
உனக்கும் எனக்கும் 
பத்து மாசமே..!

இதில் நமக்கு எங்கு 
போடப் பட்டது மாறுவேஷமே?
முன்னெழுத்து மாறியதால் 
தலையெழுத்தே மாறிடுமா?

ஒருவருக்கொருவர்  துணையில்லை 
அவருக்கு அவளும் இணையில்லை 
அடிமையாள்வது ஒன்றும் புதுமையில்லை 

பெண்ணே நீ வரமா சாபமா?
அப்பா என்றால் பயமா?
அம்மா வெறும் சும்மாவா?

அவருக்கு கம்பளிக் 
காலுறையும் வாகனமும்  
இவளுக்கு இரும்பு லாடமே 
பாத அணியாக..! 
பிறப்பால் ஒன்று பட்டு வளர்ப்பால் 
வேறுபட்டு நிற்கும் அவலம் 
ஆண்கள் கையில் பெண்கள் 
என்றும் பிச்சைப் பாத்திரமே

திங்கள், 19 மே, 2014

வில்லும் வானவில்லும்



வானில் வில்லென 
வளைந்த வண்ணக் 
கோடுகள் 


காணும் கண்களுக்கு 
ஆச்சரியத்தில்  
வண்ண விருந்து 

கனிந்த மனங்கள் 
அகலாது காணும் 
வானவில்..!

சிலமணித்  துகளில் 
மனத்துள் நிமிர்ந்திடும்
மந்திரமாம் மேகங்கள்  
தீட்டிடும் அற்புத 
ரங்கோலிக் கோலம்...!

வில்லில் குறிகொண்ட 
அம்பு இலக்கெனக்  
குத்தும் குதறிக் கிழித்துக் 
குருதியைச் சிதறும் 

கண்டோர் மனம் 
ஆவேசத்தில் பதைக்கும் 
சிலமணித் துகளில் 
உயிரைப் பறிக்கும் 
எந்திரம் 

மனரோகங்கள் எய்தும் 
ஆக்ரோஷக் கோலம் 
நளினத்தின் வாளாக 
'வில்'லை  யார் சேர்த்தது?

ஞாயிறு, 18 மே, 2014

ஸ்ரீ கட்டீல் க்ஷேத்ரம், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் , கட்டீல் .




 உட்பொதிக்கும் படங்கள் 1
உட்பொதிக்கும் படங்கள் 2
உட்பொதிக்கும் படங்கள் 3






அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. ஒரு பழைய ஆன்மீகப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் வணங்கும் காமதேனுவைப் பற்றியும், அதன் மகள் நந்தினி பசுவைப் பற்றியும், நந்தினி பசு தான் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவிலில் சாபம் பெற்றதால் நதியாக மாறி கோவிலைச் சுற்றி ஓடுகிறாள் என்ற புராணக் கதையைப் படித்ததும், உடனே அங்கு சென்று காண வேண்டும் என்ற ஆவல் என்னுள் உருவானது. உடனே எப்படிச் செல்வது? அந்தக் கோவில் எங்கே இருக்கிறது? எந்த விபரமும் தெரிந்து கொள்ளாது எப்படிச் செல்வது? மனத்தின் கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், என் தம்பியிடம் சொல்லி வைத்தேன். இன்று மாலை, நான் மங்களூர் போகிறேன், அங்கிருந்து உடுப்பி, அங்கு கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, நேராக கட்டீல் , மூகாம்பிகா, தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா தரிசனம் செய்து விட்டு வரப் போகிறேன்...நீயும் வந்தால் நலம். சொன்னதும் கிளம்பி விட்டான். துர்கா பரமேஸ்வரியை மானசிகமாக வேண்டிக் கொண்டேன்..நாளை நான் இதே நேரத்தில் உந்தன் சந்நிதியில் இருக்க வேண்டும்....இந்த வேண்டுதல் பல இடையூறுகள் இருந்த போதிலும், பிரயாணம் சரியான படி அமைந்ததால். அடுத்த நாள் நான் நினைத்துக் கொண்ட அதே நேரத்தில் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவிலுக்குள் இருந்தேன். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன்...காரணமாகத் தான். அந்த சாநித்தியம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்து உணரத் தான் முடியும்.



ஹைதராபாத்திலிருந்து மங்களூர் விடியற்காலை சென்று சேர்ந்தது.மங்களூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கட்டீல் என்னும் தேவியின் க்ஷேத்ரத்தை நோக்கி புறப்பட்டோம். வழி நெடுக இயற்கை அன்னையின் எழிற்கோலங்கள் வாரிச் சொரிந்து ஒரு அற்புத பிரயாணம், மனதுக்கும் கணங்களுக்கும் பசுமை விருந்து. இடையிடையே அமைதியான கடல் வேறு..மனத்தைக் கொள்ளைக் கொண்டது.

கட்டீல் செல்லும் வழியெங்கும் ஒரே காடு போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இடமாக இருந்தாலும், அந்தச் சின்னஜ் சிறிய கிராமத்து தேவதை போன்ற கோவிலில் அத்தனை கூட்டம். கார்களும், வாகனங்களும், நெருக்கிக் கொண்டு நின்றன. கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் உள்ளது. கட்டீல் என்றால் இடுப்பு என்று அர்த்தமாம். கோவில் ஆற்றின் நடுவில் அதன் இடுப்புப் போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இந்தப்பெயர் பெற்றதாம்.

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி அருணாசுரன் என்னும் அரக்கனால் மிகக் கடுமையான பஞ்சத்தில் முழுகித் தத்தளித்து வந்ததாம்.அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்த ஜபாலி முனிவர் வறுமையால் மக்கள் படும் துன்பத்தை தன் ஞானக் கண்ணால் கண்டு வருந்தினார். எப்படியாவது அவர்களின் துயரை துடைக்க வேண்டும் என்று எண்ணிய அவர் யாகம் வளர்த்து தெய்வப் பசுவான காமதேனுவை தருவிக்க எண்ணினார்.அந்த நேரத்தில் காமதேனு வருணலோகம் சென்றிருந்ததால் அதன் மகளான நந்தினியை எடுத்துக் கொள்ளுமாறு தேவர்களின் தலைவனான இந்திரன், ஜபாலி முனிவரிடம் கூறினான். ஆனால் நந்தினி ஜபாலியுடன் செல்ல மறுத்துவிட்டது. பூலோகத்தில் பாவிகள் மலிந்து கிடப்பதால் தான் அங்கு வர முடியாது என்று நந்தினி முனிவரிடம் தெரிவித்தது. எனினும் அங்கு மக்கள் படும் துயரத்தை எடுத்துக் கூறியும், நந்தினி அங்கு வந்தால் மட்டுமே அவர்களின் வறுமை ஒழியும் என்றும் ஜபாலி முனிவர் தயவு கூர்ந்து கேட்டுக் கொண்டார். முனிவருக்கு உதவ மறுக்க முனிவர் அதைத் தண்ணீராக மாறும்படி சபித்து விட்டார்.. மனம் வருந்திய நந்தினி சாபவிமோசனம் வேண்ட" நீ பூ உலகில் ஒரு நதியாக ஓடிக் கொண்டிரு. அப்போதுதேவியானவள் உன் இடுப்பில் குழந்தை வடிவில் உட்கார்ந்து கொள்ளும்போது உனக்கு சாபவிமோசனம்" என்கிறார் முனிவர்

தேவியை நந்தினி வேண்ட தேவியும் அருள் பாலிக்கிறாள். குழந்தை ரூபத்தில் வரும் தேவியைத் தன் இரு கைகளாலும் எடுத்து அணைத்துத் தன் இடுப்பில் வைக்க நந்தினிக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. ஆனால் பூ உலக மக்களின் நன்மைக்காக நந்தினியை அதன் சக்தியை ஆறாக மாற்றி ஓடும்படி தேவி கேட்டுக்கொள்கிறாள். தானும் இந்த வடிவிலேயே ஆற்றுக்கு நடுவில் கோயில் கொள்வதாகவும், தான் நந்தினிக்கு மகளாகப் பிறந்து நந்தினியின் சாபத்தை போக்குவதாகவும் சொல்கிறாள். அதன்படி ஏற்பட்டது தான் கட்டீல் ஸ்ரீ ஜலதுர்கா கோயில்.

அன்றிலிருந்து நந்தினி, கனககிரி குன்றிலிருந்து நதியாக விழுந்து கட்டீலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு நந்தினி ஆற்றின் கரையில் யாகம் வளர்த்த ஜபாலி முனிவர் மழையை வரவழைத்து மக்களின் துயரை போக்கினார் என்பது புராணம் நமக்கு சொல்லும் செய்தி.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அருணாசுரன் கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தான். அப்போது அவன் முன்பாக தோன்றிய பிரம்ம தேவன், இரண்டு மற்றும் நாலு கால் பிராணிகளால் அருணாசுரன் உயிருக்கு ஆபத்து நேராது என்றும், எந்த ஆயுதத்தாலும் அருணாசுரனை கொல்லமுடியாது என்றும் வரங்களை வழங்கினார். இதன் பின்னர் தேவர்களை போரில் வீழ்த்திய அருணாசுரனின் அட்டூழியங்கள் தாங்க முடியாமல் போகவே தேவர்கள் துர்கா தேவியிடம் முறையிட்டனர்.
உடனே அழகிய இளம் மங்கையாக உருமாறிய துர்கா தேவி அருணாசுரனின் முன்பாக தோன்றினாள். அவள் அழகில் மயங்கி அவள் பின்னால் சென்ற அருணாசுரன் ஒரு கட்டத்தில் வந்திருப்பது யாரென அறிந்து , துர்கா தேவியை கொல்ல முயன்றான். அப்போது திடீரென துர்கா தேவி கல்லாக மாறினாள். பின்னர் கல்லிலிருந்து வெளிப்பட்ட தேனீக்களின் கூட்டம் அருணாசுரன் சாகும் வரை அவனை கடுமையாக கொட்டித் தீர்த்தது.

அதன் பின் தேனீக்களின் ராணியான பிரம்மராம்பிகாவை சாந்த நிலைக்கு திரும்புமாறு தேவர்கள் வேண்டிக்கொண்டனர். அதன் படியே நந்தினி ஆற்றின் நடுவிலே தோன்றி அழகிய வடிவத்தில் துர்கா தேவி காட்சியளித்தாள். அதோடு தான் மகளாக பிறந்து நந்தினியின் சாபத்தை போக்குவதாக சொன்ன வாக்கையும் நிறைவற்றினாள் துர்கா தேவி.


துர்கா தேவி வெளிப்பட்ட சிறு திட்டே இன்று கட்டீலாக அறியப்படுகிறது. அவள் எழுந்தருளிய இடத்தில் தான் இன்று துர்கா பரமேஸ்வரி கோயில் உள்ளது. நவராத்திரி போன்ற திருவிழாக்களும் இப்பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களாகும். துர்கா தேவிக்கு இடைவிடாமல் இளநீர் அபிஷேகம் நடந்த வண்ணம் இருக்கின்றது. அன்னையின் உக்கிரதத்தைக் குறைக்கவே இவ்வாறு இளநீரால் அபிஷேகம் செய்யப் படுகிறதாம்.
கோயில் கேரள பாணியில் உள்ளது. இதையும் பரசுராம க்ஷேத்திரம் என்று தான் கூறுகிறார்கள். கோயில் மட்டுமில்லாமல் வழிபாடு முறைகளும் கேரளப்பாணிதான். நாங்கள் போன போது கோயில் முழுதும் அலையலையாகக் பக்தர்களின் கூட்டம்.. ஆகவே தரிசனம் செய்து முடிக்க சற்று நேரமானது. எல்லாக் கோயில்களிலும் நாம் வரிசையில் வரும்போதே பிரஹாரம் சுற்றி விடும்படியான அமைப்புடன் உள்ளே விடுவதால் பிரஹாரமும் சுற்ற முடிகிறது. அம்பாள் தரிசனம் முடிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டோம்.


இந்தக் கோவில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் புராதானமானது என்று கோயில் புராணம் சொல்கிறது. அன்னையின் கருணைக்கு
எல்லையே இல்லை. சங்கரபுரம் மல்லிகையால் அலங்காரம் செய்யப் பட்ட அம்மன் அற்புதமாகக் காட்சி புரிகிறாள். வாரத்திற்கு கிட்டத்தட்ட 3000 இளநீரால் அபிஷேகம் நடை பெறுமாம். அம்மனின் கருணையே கருணை. எந்த ஒரு வேண்டுதலும் உடனே நிறைவேற்றி வைப்பதில் அம்பிகைக்கு நிகர் இல்லை எனலாம். அம்பாளைப் பற்றி அறிந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் கட்டீல் சென்று துர்கை அம்மனை சேவிக்கும் வாய்ப்பு அமையப் பெறும்.


சனி, 17 மே, 2014

தக்ஷிண காசி கோலாப்பூர் மஹாலக்ஷ்மி






வரலாற்றுக் கூற்றின்படி கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சக்தி மிகுந்த காசியை விடவும் புண்ணியத்தில் அரிசி எடை (அதற்கும் புராணங்கள் உண்டு) அதிகமுள்ள க்ஷேத்ரம் கோலாப்பூர் .இந்தக் கோவிலும் மகாராஷ்ட்ரத்தில் தான் உள்ளது. கோலாப்பூரேஸ்வரி சாக்ஷாத் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தான். நாங்கள் பண்டர்பூரிலிருந்து மீரஜ் சென்றோம் . அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி , அடுத்தநாள் விடியற்காலை மீரஜிலிருந்து நேராக பாண்டிச்சேரிக்கு செல்லும் இரயில் ரிசர்வ் செய்திருந்தோம். அப்போது தான் அந்த ஹோட்டலில் மஹாலக்ஷ்மி யின் புகைப்படத்தைப் பார்த்து, இந்தக் கோவில் எங்கே இருக்கிறது என்று விசாரித்ததும், அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கோலாப்பூர் மஹாலக்ஷ்மி இங்கிருந்து 60 கிலோமீட்டர் தூரம் தான் என்றார் அவர்.


ஏற்கனவே சீரடி, பண்டர்பூர் என்று சென்றபின் அதிக அலைச்சலில் என் அக்காவும் அம்மாவும் எங்களால் இனி எங்கும் அலைய முடியாது என்று அறையிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள, நான் மட்டும் கிளம்பி விட்டேன். அங்கிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரப் பிரயாணம் செய்து கோலாப்பூர் அடைந்தேன் . மீரஜ் ஒரு சின்ன டவுன் தான். ஆனால் கோலாப்பூர் நமது சென்னையைப் போலவே இருந்தது ஆச்சரியம் தான்.அனைத்து ஊர்களிலிருந்தும் ரயில் வசதி இருக்கிறது குறிப்பிடத் தக்கது.
மீரஜிலிருந்து தனியாகச் செல்வதால் பஸ் பிரயாணம் தான் உசிதம் என்று பஸ்ஸிலேயே சென்று விட்டேன். கோலாப்பூரில் இறங்கியதும் ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு கோவில் அருகே சென்று இறங்கினேன். கோவில் வாசல் அருகில் பூக்கடைகள்....அத்தனை பூக்களா?
குமிந்து கிடந்தன பூக்கள் வித விதமாக, ரோஜா, முல்லை, மல்லிகை. செந்தாமரை, தாழம்பூ, சம்பங்கிப் பூக்கள், என்று பூ வாசனை வரவேற்க கோவில் வளாகத்துள் நுழைந்தேன். இனம் புரியாத இன்பம் இதயம் முழுதும் பரவியதை எந்த வார்த்தையால் இங்கு எழுத?


கோவிலின் வெளிப் பிரகாரமும், உட்பிரகாரமும் நமது சிந்தையின் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டது. அந்தக் காலத்துச் சிற்பக்கலை எங்கு சென்றாலும் சிலிர்க்க வைக்கும். இது தான் பிரம்மாணடம் என்பதன் அடையாளமோ என்றும் சொல்லாம். உள்ளே வீற்றிருக்கும் நாயகி மஹாலக்ஷ்மி. குஞ்சலம் போன்ற தோற்றம். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி வானளவு என்பதற்கு ஒரு அற்புத எடுத்துக்காட்டு எனலாம். கோவிலின் நிலைகள் கண்களுக்கு வெறும் ஆச்சரியத்தை மட்டுமே நிலையாய் நிறுத்தி வைக்கிறது. தூண்கள் தூண்கள்...தூண்கள்....கருங்கல்லாலான வழு வழுவென்று மின்னும் தூண்கள்....உள்ளே...உள்ளே..உள்ளே...என்று வளைந்து நெளிந்த பாதையாக பிரகாரத்தைச் சுற்றும் போது தூண்கள் தான் மனத்தை நிறைக்கிறது. வேறெங்கும் கண்டிராத வண்ணம் ஒரு அம்சம். அத்தனைக் கலை நயம்.அழகு மிளிரும் சிற்பம். வாயடைத்துப் போய் மௌனமே உள்ளுக்குள் பேசிக் கொண்டு வந்து அம்மனைத் தொழும் போது கண்கள் கலங்கி கன்னம் நனைகிறது. இது எந்த ஜென்மத்துப் புண்ணியம் என்று அந்த ஆனந்தக் கண்ணீர் தெய்வத்தை மனத்தின் உள் வாங்கும் போது ...இதோ..இதை எழுதும் போது கூட அதே எண்ணம் தான் இதயத்தில் முட்டிக் கொண்டு நிற்கிறது. முடிந்தவர்கள், விரும்புபவர்கள், யாவரும் ஒரு தடவையாவது அந்த பேரானந்தத்தை அடைய வேண்டும் என்பதே எனது ஆவல். அதனால் தான் என்னாலும் கோலாப்பூரை பற்றி எழுதத் தவிக்கிறது. கோலாப்பூர் சுரங்கம் "மஹாலக்ஷ்மி" தான் . அவளது அற்புத தரிசனம் தான். வேறென்ன வேண்டும்? என்று அவள் கேட்க.....வேறென்ன வேண்டும்...? என்னுள் கேள்வியே பதிலாகிப் போகிறது. இதோ கோவிலின் தலவரலாறு.



இந்தத் திருத்தலத்தை மஹாலக்ஷ்மி தனது கைகளால் தூக்கி நிலப்பரப்பில் வைத்து கோயில் கொண்டதால் இவ்வூர் 'கரவீர்' என்றும் அன்னை ' கரவீர நிவாஸினி ' என்றும் அழைக்கப் படுகிறாள். இன்றும்  இந்த ஆலயம் உள்ள இடம் பள்ளமாகவே உள்ளது. மேலும் இந்த ஆலயம் 108 கல்ப காலத்திற்கும் முந்தையது எனப் புராண நூல்களில் காணப் படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நைமிசாரண்யத்தில் வசித்த காச்யபர், கௌதமர், காக்கியர், ஆங்கிரஸர் , பிருகு, வசிஷ்டர், முதலான 80,000 ரிஷிகள் ஒன்றுகூடி சுதமுனியாய் காசி, கங்கை,பிரயாகை, கோகுலம் இவை அனைத்தும் இணைந்த ஓரிடத்தைக் காட்டும்படி கூற, அவரும் கோலாப்பூரே அவற்றுக்கு இணையானதொரு புனித க்ஷேத்திரம் என்று உரைத்தார். 

அச்சமயம் அடர்ந்த பயங்கரக் காடுகள், மலைகளால் சூழப்பட்ட இவ்விடத்தில் பல அரக்கர்களும், யட்சர்களும், துவம்சம் செய்து வந்தனர்.அவர்களின் தலைவனான கோலாசுரன் முனிவர்களுக்கும், தவத்திற்கும், இடையூறு செய்ய , முனிவர்கள் மகா லட்சுமியிடம் அவனை அழிக்க வேண்டினார். தேவியும் 9 கோடி சைனியத்துடன், நவ துர்கைகளுடனும், பைரவர், வீரபத்திரர், சித்த பாதுகேஷ்வர், சோதியா, காத்யாயினி, ஆகியோருடன் இணைந்து போர் செய்து கோலாசுரனை அழித்தாள் . இறக்கும் சமயம் அவன் வேண்டிக்கொண்டபடி இவ்வூர் கோலாப்பூர் ஆயிற்று. தேவர்களும், முனிவர்களும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தேவியும் அந்த ஊரிலேயே கோவில் கொண்டாள் என்கிறது புராணம். கோலாசுரனுக்கு பயங்கரியான தேவி தன்னை வணங்கும் பக்தர்களின் பயங்களை போக்கும் ஆபத்சகாயி ஆனாள் .

இவ்வாறே ஒரு சமயம், சிவபெருமானுக்கும், மகாலட்சுமிக்கும் பூலோகத்தில் புனித தலங்களுள் சிறந்தது, காசியா? கோலாப்பூரா ? என்ற தர்க்கம் ஏற்பட்டது.கோலாப்பூர் இருந்த தட்டு தாழ்ந்தே இருக்க, அம்பிகை வாரணாசி இருந்த தராசுத் தட்டில் ஒரு அரிசியை வைக்க இரண்டும் சமமானதாம். அதனால் தான் வாரணாசியை விட கோலாப்பூர் ஒரு அரிசி அளவு அதிக புண்ணியம் கொண்டது கோலாப்பூர் என்று புராணங்கள் கூறுகின்றன. அது முதல் சிவபெருமானாலேயே இது 'தக்ஷிண காசி' என்று போற்றி அழைக்கப் பட்டது.

அகத்திய முனிவர் காசியில் வாழ்ந்து கொண்டிருந்த போது , ஈசனிடம் ஏதோ ஒரு காரணத்தால் கோபம் கொண்டு அவ்வூரை விட்டு வெளியேறினார். பல இடங்கள் சுற்றி வந்தும், அவரால் ஈசனைப் பிரிந்து வந்த துக்கம் கூடியிருக்க, திரும்பவும் காசிக்குச் செல்லவும்  மனமில்லாமல் குறுமுனி மனம் நொந்து ஈசனிடம் காசிக்கு இணையான ஓரிடத்தை காட்டும் படி கண்ணீர் மல்க வேண்டி நின்றார். அப்போது, காசியைப் போலவே தான் நித்திய வாசம் செய்யும் தக்ஷிண காசியாம் கோலாப்பூரில் சென்று தங்குமாறு பணித்தார்.அகத்தியரும் தன் மனைவி லோபாமுத்திரையும் பல காலங்கள் கோலாப்பூரில் வாழ்ந்ததாக 'கரவீர் மகாத்மியம்' உறைக்கிறது .

முனிவர் ஒரு முறை மும் மூர்த்திகளில் சாத்வீக குணமுடையவர் யாரென்று அறிந்து கொள்ள விரும்பி, பிரும்ம லோகம், கைலாசம், வைகுண்டம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். சிவபிரானும் பிரம்மனும், அவரை அவமதித்து கோபப்பட, வைகுண்டம் வந்த முனிவர் விஷ்ணுவும் தன்னை அவமதிதத்தால் வெகுண்டு அவரது திருமார்பில் உதைத்தார், திருமாலோ சற்றும் கோபப்படாது, 'என்னை உதைத்த கால்கள் வலிக்குமே' என்று கூறி அந்த முனிவரின் காலைப் பிடித்தார். தான் வாழும் மார்பை உதைத்த முனிவரின் காலைப் பிடித்ததற்காக வெகுண்ட மகாலட்சுமி, கோபத்துடன் புறப்பட்டு கோலாப்பூர் சென்று விட்டாள் .அம்பிகை  அங்கு 200 வருடங்கள் வாழ்ந்ததாக வெங்கடேச புராணம் கூறுகிறது. இன்றும் நவராத்திரியின் போது அன்னைக்கு திருப்பதியிலிருந்து புடவை சீராக வரும் வழக்கம் உள்ளது.

சிவபெருமான், மகாலட்சுமி இருவரின் அருளாட்சி நிறைந்த இவ்வூர் செல்வச் செழிப்பாக இருப்பதில் என்ன வியப்பு? இன்னும் கேளுங்கள்.

ஆலயத்திற்கு நான்கு வாயில்களும், ஐந்து கோபுரங்களும், ஏழு உயர்ந்த தீபஸ்தம்பமும் உள்ளன. ஆலயத்துள் நுழைந்ததும், ஒளி நிறைந்த கண்களுடன் கம்பீரமாக அமர்ந்து காட்சி தரும் கணபதியை வணங்கி விட்டு உள்ளே செல்ல வேண்டும்.இது நியதி தான்.

இரண்டு துவார பாலகர்கள் காவல் புரியும் தேவியின் சன்னதிக்கு நுழைந்தால்,அன்னையின் தரிசனம் தூரத்திலிருந்தே நம் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அளவு பெரிய கர்ப்பகிரகத்தில் உள்ள மகாலட்சுமியின் விக்ரஹம் 6000 ஆண்டுகள் பழமையானது. 40 கிலோ எடையுள்ள மிக உயர்ந்த ஒளி பொருத்திய கல்லும், வைரமும் கலந்து செய்யப்பட சிலா ரூபத்தில் காட்சி தரும் அன்னை, அதே போன்று ஒளி பொருந்திய சதுர வடிவ கல்லின் மீது நின்றபடி அருள் செய்கிறாள். கீழுள்ள கல் ஆவுடையாகவும், மேலே நிற்கும் அன்னை சிவலிங்கம் போன்ற தோற்றம் தருவது சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது.

அம்பிகையின் சிரத்தில் ஆதிஷேஷம் குடையாக விளங்க, சிம்ம வாகனத்தில் முன்பு தாமரையின் மீது மனித சிருஷ்டிக்கு ஆதாரமாக விளங்கும் வடக்கு திசை நோக்கி நின்றபடி காட்சி தருகிறாள். சதுர்புஜதாரியாக மேலிரண்டு கைகளில் கேடயமும், வாளும் , கீழ் வலக்கையில் ஒருவகை கனியும், இடது கையில் பாத்திரமும் கொண்டு அன்னபூரணியாக காட்சி தருகிறாள்.உட்பிரகாரம் சுற்றும் போது சுவர்களில் லக்ஷ்மி மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ லக்ஷ்மி யந்திரமும் பொறிக்கப் பட்டுள்ளது. 

அன்னை மகாலக்ஷ்மியின் தோற்றம் நம்மை அகலவிடாது செய்கிறது. மனம் குழைந்து தொழுது அங்கு நேர் எதிரில் இருக்கும் மண்டபத்தில் அமர்ந்து தேவியிடம்  கண் மூடி தியானம் செய்யும் போது ஏழுலகமும் மறந்த நிலையில் அவளின் அருட்சக்தி நம்மை ஆட்கொள்ளுவதை நம்மால் உணர முடியும்.

காசி அன்னபூரணியைப் போலவே இங்கும் தேவஸ்தானத்தில் முன்னமே சொல்லிவைத்து, அவர்கள் தரும் மடி உடைகளை உடுத்திக் கொண்டு கருவறைக்குள் சென்று அன்னைக்கு நாமே அபிஷேகம் செய்து புடவை அணிவிக்கலாம். மாதுளம்பழம் இந்த ஊரில் விசேஷமாகக் கருதப் படுகிறது. பூஜையில் வைத்த மட்டை தேங்காயைப் பிரசாதமாகத் தருகிறார்கள்.

அங்கு ஒரு தூணில் அழகா செதுக்கப் பட்டிருக்கும் ஸ்ரீ தன்வந்தரி சிலையை பக்தர்கள், கால்களைப் பிடித்து விட்டு, கொஞ்சி  செல்கின்றனர். சிலர் அந்தச் சிலை முழுதையும் மெதுவாகப் பிடித்து விட்டு வலியை இறக்கி விட்டுச் செல்கின்றனர். மிகவும் பழமையான அற்புத சக்தி வாய்ந்த இந்தக் கோவிலுக்கு தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வருவதை நமது பாக்கியமாகக் கருத வேண்டும். 

நான் சென்றிருந்த போது , ஒரு தமிழ் குரல், யாரோ அவரது உறவினரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், ' இதோ....இங்கே தான்..அந்தப் பெரிய எழுத்தாளர்..அந்தக் காலத்து எழுத்தாளர் திரு.காண்டேகர் அவர்கள் அமர்ந்து கொண்டிருப்பார். அவருக்கு இந்தக் கோவில் ஒண்ணு தான் ஆதாரம், '.காதில் விழுந்ததும் எனது பார்வையும் அங்கு சென்றதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

கோயிலை விட்டு வெளியே வரவே மனமில்லாமல், மீண்டும் ஒரு முறை உந்தன் தரிசனம் வேண்டுமம்மா என்ற கோரிக்கையை அங்கேயே வைத்துவிட்டு.வெளியேறினேன்.

ஜெயஸ்ரீ ஷங்கர்.