செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பெருமை




ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்

நன்றி:தமிழ்த்தேர்,



"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்...?" பல ஆண்டுகள் முன்பு பிரபலமான திரையிசைப் பாடல் வரிகளாய் பட்டிதொட்டி எங்கும் ஒலித்ததைக் கேட்ட ஒவ்வொருவரின் இதயத்திலும் இசையைத் தாண்டி காலத்தைக் கடந்து அப்படியே செதுக்கி வைத்தது போல அச்சாகியிருக்கும்.

ஆம், வெறும் நாடு என்று சொல்லிவிடவில்லை கவிஞர். 'திரு நாடு' என்று பாரதத்தின் பெருமையை ஒவ்வொருவர் மனத்திலும் உயர்த்தி வைத்து அழகு பார்த்தார். ஒரு விதத்தில் பார்த்தால், இந்தியாவுக்கு என்றென்றும் பெருமை விவசாயிகள் தான். இந்தியாவை அலங்காரம் செய்து பார்க்கவென்றே அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் காய்ந்தும், நனைந்தும், நிலத்தோடு நிலமாக வெட்டவெளியில் கிடந்து தான் நம்பி விதைத்த பூமி பச்சைப் பட்டு உடுத்த ஆரம்பத்திலிருந்து, தன் மகளைப் போலப் பேணிக் காத்து 'வாரி வழங்கும் கருணைத் தாயாக்கி', உலக மக்களுக்குப் படியளக்கும் தெய்வமாக்கி , அதன் ஒவ்வொரு தருணத்திலும் தன் சுகம் பாராமல், நிலமகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமை பட்டு, விளைச்சல் நிலத்தின் மகசூல் கண்டு மகிழ்ந்து, தனது அத்தனை உழைப்பிற்கும் ஈடாக, வயல் தந்த பரிசை 'சூரியனுக்கு'ப் பொங்கலிட்டுப் படையல் தந்து அவர்தம் நன்றிதனை ஆண்டவனுக்கே அர்ப்பணித்தனர்.

எந்த ஒரு விதத்திலும் தங்களால் தான் என்று தற்பெருமை பட்டுக் கொள்வதில்லை விவசாயிகள். எளிமையும், வலிமையும் தந்த வல்லமை பெரிது. மனிதகுலத் தேடுதலின் 'அச்சாணி'யான பசிக்குப் பக்குவமாக ருசியோடு தந்து கொண்டிருக்கும் விவசாயிகள், கால காலமாக நமது இந்தியாவின் ஆணிவேராக விளங்குவதைக் கண்டு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படுதல் வேண்டும்.

மண்ணோடு மண்ணாக உழலும், பொன் மனிதர்கள், தங்களின் சுகம், சொகுசு,நாகரிக வாழ்க்கை என்று எதைப் பற்றியும் சிந்தனை செய்யாது, சேற்றோடு நடந்து நடந்து நமது பாரதத்தாயின் குழந்தைகளை கௌரவமாக பவனி வரச் செய்யும் 'தியாகிகள்'. வெற்றுப் பூமியோடு போராடி விளையச் செய்து வெற்றி கண்டு , நாட்டின் அந்நிய செலவாணிகளை உயர்த்தித் தரும் கண்ணுக்கு எட்டாத கணக்கர்கள். காலத்தின் எந்த மாறுதலையும் தனக்கென்று ஏற்றுக் கொள்ளாமல், தனக்கான கருமமே கண் எனக் கொண்டு செய்யும் தொழிலை சவாலாக ஏற்று சமுதாய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தப் பகுதியின் முன்னேற்றமும் தன் உள்ளத்திலும், உணர்விலும், உடையிலும், வந்து விடாமல் நவீனத்தின் வாசனை எதையும் மனம் நுகராது தன்னைக் காத்துக் கொண்டு மண்ணையும் காக்கும் வீரத்திருமக்கள் இவர்கள். இவ்வாறு இவர்களது பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"...என்ற மஹாகவி பாரதியாரின் கூற்றுக்கு இணங்க, நாம் என்றென்றும் உழவுத் தொழிலையும், அதைக் கண்ணாகக் கருதும் விவசாயிகளையும் பெருமைப் படுத்தக் கடமை பட்டுள்ளோம். ஆனால், தற்போது நடப்பது என்ன? விளை நிலங்கள் விலை பேசப் படுகின்றது. விவசாயத்த்திற்குச் சாயம் பூசி அழகு பார்க்க முயன்று கொண்டிருக்கின்றனர் . இதன் விளைவு , உழவுத் தொழில் மெல்ல மெல்ல அந்தப் புள்ளியிலிருந்து நகர்ந்து செல்லும் அபாயம் காத்திருப்பதை உணராமல், நிலங்களுக்கு விதைநெல் இடுவதற்கு மாறாக 'எண்' இட்டு பிரித்து தரிசாக்கிக் காசு பார்க்கும் கனவு காண்கின்ற வேகம், அதிவேகமாகப் பரவுகிறதே. இதன் நிலை அறிந்து நாம் பெருமைப் படவா இயலும்? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்னும் நிலைமையை மாற்றி விடத் துடிக்கும் நவீன சமுதாயம் வெறும் நிலத்தை மட்டும் விலை பேசவில்லை விவசாயத்தையே விலை பேசுகிறார். காலகாலமாகச் செய்து பிழைத்து வந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை விட்டு விலகி நகரங்களின் பளபளப்பில் சொக்கி நிற்க ஆரம்பிக்கும் போது, எந்தக் காலத்திலும் மாறாத மனிதனின் பசியைப் போக்கப் போவது இனி யார் என்று நாம் சிந்தித்துப் பார்த்திடல் வேண்டும்.

எந்தப் பெருமைக்கும் தலைநிமிராது, முதுகு வளைந்து குறைந்தாலும், நமது இந்தியாவின் முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கக் காரணமான விவசாயிகளை எண்ணிப் பெருமை கொள்வோம். அவர் தம் தொழிலை அழிந்திடாது காக்க ஆவண செய்வோம். விளை நிலத்தை விலை பேச விடோம். நாட்டில் எத்தனையோ 'பெருமைகள்' பெருமைப்பட வேண்டிய வகையில் இருந்தாலும், கண்ணுக்குக் கண்ணாக விளங்கும் உழவுத்தொழில் தாயகத்தின் உரிமைத் தொழில் என்று பெருமையோடு நிலைநாட்டப்பட வேண்டிய தருணத்தில் நாம் இன்று இருக்கிறோம்.

சுயநலப் பேராசையால் ....விவசாயிகளை ஆசைகாட்டி அடிமைகளாக்கி, ஆணிவேரில் வென்னீர் ஊற்றிப் பார்க்காமல்' , விவசாயத்தைப் பெருமை படுத்தும் வகையில், அந்தத் தொழில் புரிபவர்களுக்கு நவீன உதவிகள் செய்து தர வேண்டும். தாயகத்தில் விவசாயம் செழித்து, விவசாயிகளை உயர்த்துவதில் தான் இந்தியன் ஒவ்வொருவரின் கடமையும் அதனால் பெருமையும் .பொங்கி நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக