திங்கள், 15 டிசம்பர், 2014

இலக்கு..!




உயரப் பறக்கும் பருந்தின்

கண்களுக்கு பஞ்சாரக் கோழியின்

குஞ்சுகளே இலக்கு..!


வழியறியாது  அருவியாய் மலை

இறங்கிவிட்டாலும் காட்டாறுக்கு

பொங்கும் கடலே இலக்கு..!


நாண் இல்லாமல் வண்ணவில்லை

வான் எறிந்து தோற்றாலும்

பூமியே மேகத்துக்கு இலக்கு..!


வில்லை  இழக்கும் அம்பிற்கும்

சுதந்திரச் சிறகுகளை

சிதறடிப்பதே இலக்கு..1


இலக்குகள் அற்ற மனங்கள் இருளில்

தீட்டும் ஓவியமாம்  உணர்வுகளையும்

உருவாக்கி உயிர்ப்பித்திடும் இலக்கு..!



வீழ்ந்து விட்டதாய் சோர்ந்திடாமல் நண்பா

எழுவதற்கான  கனவொன்று இருக்கு

இமயத்தின் உயரமே உனக்குள் இலக்கு..!



தோல்வித் துயரங்கள் தொடர்ந்தாலும்

துணிவைத் துடுப்புகளாக்கி தொடர்ந்து

வெற்றியை காண்பதுவே இலக்கு...!



ஆயிரம் சூழ்ச்சிகள் முன்னிலையில்

வெற்றியின் சூத்திரங்கள் உன்மனதில்

வீழ்ச்சிகள் கடந்திடுவாய் அதுவே இலக்கு...!



இலக்கு எனும் மந்திரச் சொல் செய்திடும்

மனத்துள் தந்திரங்கள் - ஆயின் உலகம்

ஓங்கிட  அன்பு ஒன்றே இலக்கு...!


இலக்கு எனும் அச்சில்  சுழலும் பூமி

இலக்கு அச்சாணியில் இயங்கும் இயற்கை

இலக்கு என்ற தேடலில் வாழும் மனிதம்

இலக்கு சற்று விலகினால் தவறிடும் கணக்கு...!


பூமியின் வளங்கள் அனைத்தும்

இலக்கின்றி தகர்க்கும்போது பொறுமையின்

எல்லைக்கு பூகம்பமே இலக்கு...!


அல்லும் பகலுமென கருமவினைக் கணக்கெடுத்துப்

படைத்துப் பெருக்கும்  ஆக்கும்

தொழில் நிறுத்துவதே பரமனின்  இலக்கு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக