வெள்ளி, 31 ஜூலை, 2015

வசந்த காலம் வருமோ?




மனமெங்கும்
வலி மனிதா...!
என் இனத்துக்கு நீ
செய்வது தகுமா?


மரத்துக்கும் மனமிருக்கும்
தெரியுமா?
மரத்துக்குள் உயிர்
இருக்குமென
அறியாத மரமா நீ?


ஏன்...ஏன்...ஏன்
எங்களை மரமாய்
வளர விடாமல்
கற்சிலை போல்
செதுக்கிச் சிற்பமாகினாய்?


உன் உள்ளங்கையில்
விளையாட வேறோர்
பொம்மையில்லையா ?

சுதந்திர வேர்களுக்கு

எதற்கு இங்கு அடிமை
விலங்கு ?
குற்றமற்ற விதைகள்
செய்த பாவம்
தான் என்ன?


பூமியைத் தழுவித்
படர வேண்டிய
வேர்களும்
காற்றைத் தழுவ
நினைக்கும் கிளைகளும்
வானம் முட்ட
எகிறும் உயரமும்
எங்களை மரங்களென
கம்பீரமாய்
நிமிர வைக்கும்...!


உங்கள் தொட்டிக்குள்
ஒடுங்கி அடங்கிக்
கிடக்கும் நாங்கள்
இன்று அடிமை மரங்கள்..
ஆயுள் கைதிகள்..!
நீங்கள் எங்கள்
உடலை மட்டும்
குறுக்கவில்லை...
உங்கள் உள்ளங்களையும்
குறுக்கி வளர்கின்றீர் ..!


இதோ.....கல்லெறிந்தாலும்
பழமே தரும்
எங்கள் குணம்...!
விலங்கிட்டு எங்களை
ஒடுக்கினாலும் உங்களுக்காக
கூடை நிறைய
தருவோம் பழங்கள்...!
ருசித்து விட்டு
வித்துக்களை
வெட்டவெளியில்
வீச்ங்கள்..!
எங்கள் வாரிசுகளாவது
மரமாய் வளரட்டும்...!

1 கருத்து: