வியாழன், 13 அக்டோபர், 2016

வெள்ளைத் தாள்...!


வெள்ளைத் தாளில்
புள்ளி வைத்தான்
சூரியனாய்...!
எழுந்தது ஒளி ..!
வெள்ளையில்
முளைத்தது பச்சை..
ஆதாரமாய் பூமியைப்
பற்றியது ஆணிவேர்கள்...!
ஓருயிர் ஈருயிர் என
ஒவ்வொன்றாய்
இடத்தை அடைத்துக்
கொண்டு ஊர்ந்தது
பறந்தது...தாவியது...
அனைத்தும் அதனதன்
எல்லைக் கோட்டுக்குள்...!
நடந்தது....மட்டும்...
பஞ்ச பூதங்கள்
ஆண்ட சராசரம்
என்றெல்லாம்
பெயர் பிரித்தது..!
நடந்தவன்...பிறந்தான்..
ஆறறிவு மனிதன்...
என்று பட்டம்
சூட்டிக் கொண்டான்...!
இயற்கை....எதிர்பார்த்தது.
எளிதானது அவனுக்கு..
கைவல்யமானது...
அவனுக்கு...
அழித்தான்....வாழ்ந்தான்...
எட்டுத் திசையில்
ஏடாகூடமாக
அறிவைத் திணித்தான்..
ஆணவத்தால்
இயற்கை உலகை
மாற்றம் செய்தான்...
எதற்கும் மாற்று...!
இறைவன் ஏமாந்தான்...
இயற்கையும் ஏமாந்தது...
ஆக்ரோஷம் கொண்டது....
எதிர்த்தது....
ஒன்று கூடியது...
மெளனமாக மனிதனை
ஓரிரவில் அவன் உறங்கும்போது
புரட்டிப் போட்டது....
புவியை ஆவியாக்கியது...!
மீண்டும் வெள்ளைத் தாள்...!
ஜெயஸ்ரீ ஷங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக